நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வு நூலான இதில், மதுரை மாவட்டத்தில் நிகழ்த்துக் கலைகளை நிகழ்த்தும் கலைஞர்கள் அணியும் உடைகள், புனையும் ஒப்பனைகள் குறித்து நேரில் ஆய்வு செய்து பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
நாட்டுப்புறக் கலை வடிவங்களில் ஒன்றான நிகழ்த்துக் கலை மதுரைக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களில் முக்கியமானதாகும். அந்த நிகழ்த்துக் கலை மட்டுமின்றி, மதுரையின் சிறப்புகள், பழந்தமிழகத்தின் கலை வரலாறு, உடை வரலாறு குறித்த ஆய்வுத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
பார்வையாளர்களிடமிருந்து கலைஞர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்கு ஒப்பனையும், உடைகளும் உதவுகின்றன. தமிழர்கள் தொன்றுதொட்டே ஒப்பனைக் கலையில் பயிற்சி பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை பழைமையான இலக்கிய நூல்களின் துணைகொண்டு நிறுவியுள்ளார் நூலாசிரியர். அடிப்பூச்சு, பூச்சுக்கட்டி, மென்கலவை, நெய்ப்பூச்சு, அட்டைப் பூச்சு, கைப்பூச்சு, வியர்வையை எதிர்க்கும் பூச்சு, விழிப்பூச்சு, செவ்வண்ணச் சாயம், உதட்டுச் சாயம், கண்ணிமைக் கலவை உள்ளிட்ட ஒப்பனையின் வகைகள் குறித்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.
நாட்டுப்புறக் கலைகளுக்கு ஒப்பனை எத்துணை முக்கியமோ அதே அளவுக்கு உடைகளும் முக்கியம். கரகாட்டம், தப்பாட்டம், ராஜா ராணி ஆட்டம், பேயாட்டம், தோற்பாவைக் கூத்து, ஒயிலாட்டம், தேவராட்டம், கம்பளத்தார் சேவையாட்டம், அனுமன் ஆட்டம், மயிலாட்டம் போன்ற பல்வேறு கலைகளில் ஈடுபடும் கலைஞர்கள் பயன்படுத்தும் உடைகள் குறித்த தகவல்கள் சுவையாக உள்ளன.
மக்களை மகிழ்விக்கும் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வரும் நிலையில், அக்கலைகளையும் கலைஞர்களையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைக்கிறது.
Reviews
There are no reviews yet.