மன்னர்கள், தேவதாசிகளை, இறைத்தொண்டு புரிவதற்காக கோவில்களில் நியமித்தனர். அதற்காக நிலங்களும் வழங்கப்பட்டன. தேவரடியார் எனப்படும் இவர்கள் ஆடல், பாடல், கோவில் பராமரிப்பு மற்றும் கோவில் பணிக்கான யாவற்றையும் செய்து வந்தனர்.
இவர்களைப் பற்றி பல நுால்கள் வெளி வந்துள்ளன. இந்நுால் முனைவர் பட்ட ஆய்வு.பதினேழு கட்டுரைகளில், தேவதாசி இன வரலாற்றை முழுமையாக ஆய்ந்து எழுதியிருக்கிறார். தேவதாசிகள் பெரும்பாலும் நடன மாதர்களாகவும் இருந்துள்ளனர். உலக அளவிலும், இந்தியாவிலும் கோவில்களில் இத்தகைய பெண்கள் அமர்த்தப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார். தாய் தெய்வ வழிபாட்டையும், தேவதாசி முறையையும் வரலாற்று தரவுகளின் அடிப்படையில் விளக்கியுள்ளார்.
சங்க காலத்தில் கொண்டி மகளிர், பாடினி, விறலி, கணிகை, பரத்தை என்றழைக்கப்பட்டோர், தேவதாசி முறைக்கு முன்னோடியாகக் கருதப்படக்கூடியவர்கள் என்று கருத்துரைக்கிறார். கடைச்சங்க காலத்தில் பெண் கலைஞர்கள், யாவராலும் வெறுக்கப்பட்டு, சமூகத்தினின்றும் விலக்கப்பட்டனர் என்றும், பின் அங்கீகரிக்கப்பட்டு கோவிலோடு இணைக்கப்பட்டனர் என்றும் தெரிகிறது.
இறைப் பணியில் தேவரடியார்கள் என்ற குழு தவிர்க்கப்பட முடியாத இடத்தைப் பெற்றிருந்தது. சைவ, வைணவக் கோவில்களில் மட்டுமின்றி புத்த, சமணப் பள்ளிகளிலும் இவர்கள் பங்கு பெற்றிருந்ததை சான்றுகளோடு விவரிக்கின்றார்.
தேவதாசிகளின் பங்கு வேதங்களிலும், ஆகமங்களிலும், நாட்டிய சாஸ்திரத்திலும் இருந்திருப்பதை தெரிவிக்கிறார். அவ்வினம் தனித்த வளர்ச்சி அடைந்திருப்பதை, தக்க எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக விளக்குகிறது. தேவதாசிகளின் அர்ப்பணிப்புச் சடங்கு என்ற தலைப்பில் அமைந்துள்ள கட்டுரை, பல அரிய தகவல்களைக் கொண்டிருக்கிறது. பொட்டுக் கட்டும் சடங்கு, பாலியல் உறவு பற்றிய குறிப்பையும் இப்பகுதி உணர்த்துகிறது. கோவில் பணிகள், ஊதியங்கள் மற்றும் வரி விதிப்பு, அளிக்கப்பட்ட தண்டனைகள், சமுதாய மதிப்பு பற்றி எல்லாம் அரிய தகவல்களைக் கொண்டுள்ளன.
இந்த முறைமை வீழ்ச்சியுற்ற வரலாறும், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் பற்றிய வரலாறும் இந்த ஆய்வுக் கட்டுரையின் சிறப்பான பகுதிகளாக உள்ளன. ஆய்வு தொடர்பாக எடுத்துக் காட்டும் தரவுகளும், கல்வெட்டுச் சான்றுகளும் அரிய உழைப்பைக் காட்டுகின்றன.
– ராம.குருநாதன்
தேவதாசிகள் என்போர் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட பெண்களாவர். குறிப்பிட்ட சடங்கு முறைகள் மூலம் ஆலயத்தில் உறையும் கடவுளுக்கு மனைவியாக்கப்பட்டு, அதன் மூலம் கோயில் பணிகளில் ஈடுபட்டவர்கள்.
பல்லவர் ஆட்சிக்காலத்துக்கு முந்தையவனான கோச்செங்கணான் ஆட்சிக் காலத்தில் சிவ வழிபாட்டின்போது பாடலும், ஆடலும் அவசியமாக்கப்பட்டன; பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் இசையும் நடனமும் இணைந்து மத இயல்புக் கூறு எனும் நிலைபாட்டுடன் சமயச் சடங்காகக் கோயிலில் நிலை பெற்றிருக்கிறது. தேவதாசிகள் தொடக்கத்தில் நடனம், இசையுடன் தொடர்புடையவராக இருந்தனர். பிற்காலத்தில் அந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு கோயிலைத் தூய்மைப்படுத்தும் பணிகளான திரு அலகிடுதல், திருமெழுகிடுதல், கோயிலுக்கு வரும் நெல்லைக் குற்றி அரிசியாக்குதல், பூப்பறித்து தொடுத்தல் போன்ற பிற பணிகளையும் செய்யத் தொடங்கினர்.
இவ்வாறு தேவதாசிகள் பலவகையாக கோயில் பணிகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். பேரரசுகள் தோன்றியபோது பெருங்கோயில் தோன்றின. பெருங்கோயில்கள் தோன்றியபோதுதான் தேவதாசி முறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவதாசிகளுக்கு நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டு இருக்கின்றன. பேரரசுகள் வீழ்ச்சி அடைந்ததும் தேவதாசி முறையும் வீழ்ச்சி அடைந்தது. பல தேவதாசிகளின் வாழ்க்கை நிலையும் தாழ்வடைந்தது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் முன்முயற்சியின் காரணமாக 1927-ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டப்பேரவையில் தேவதாசி ஒழிப்புச் சட்ட முன்வரைவு முன்வைக்கப்பட்டது. 1947-ஆம் ஆண்டுதான் அது நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு தேவதாசி முறையின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி என எல்லாவற்றையும் இந்நூல் மிகச் சிறப்பாக விளக்குகிறது.
தேவதாசி முறை: காலமும் கருத்தும்
₹400+Shipping
Buy: https://heritager.in/product/devadasiyar-kalamum-karuthum/