அறிஞர் பி.எல்.சாமியின் ஆய்வுக் கட்டுரைகள் – ந .வேங்கடேசன்

150

Guaranteed Safe Checkout
Extra Features
  • We ship products within 3 to 7 business days, depending on availability.
  • Payments can be made via UPI, credit/debit cards through Razorpay, or direct bank transfer.
  • We ship our products securely. For any unavailable items, a refund will be issued for the corresponding amount.
  • We deliver across India and to international destinations.
  • Over 10,000 customers have trusted our service and expressed high satisfaction with their experience.
  • For bulk orders or any concerns, please contact us via WhatsApp or call at 9786068908.

குருவிக்கும் தாய்வழிச் சமூக உறவுக்கு உள்ள தொடர்பும் :

கரிக்குருவி :

தமிழ்நாட்டுக் கோயில் கல்வெட்டுகளில் ஒன்று (S.I. III .44) ‘இவள்தானும்… இவன் அடைகுடி ஆனைச்சாத்தானும்’ என்று கூறுவதைக் காணலாம். அடைகுடி ஆனைச்சாத்தன் என்ற பெயர் ஒருவனின் பெயராகக் கூறப்பட்டுள்ளது.

சாத்தன் என்ற பெயரைப் பிற்கால இலக்கண உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டாக உரையில் பயின்றுள்ளனர்.

தெய்வப் பெயர் :

சாத்தன் என்னும் தெய்வம் முதலில் சமணர் பௌத்தர்களால் வழிபடப்பட்டுப் பின்னர் இந்து மதத்திலும் புகுந்தது.

சங்ககாலத்திலேயே சாத்தன், சாத்தி என்ற பெயர்களுடைய புலவர்கள் இருந்தனர்.

சோழர் காலத்தில் இராசராசன், இராசேந்திரன் கல்வெட்டுகளில் சாத்தன் என்னும் பெயர் பலமுறை வருகிறது.

இன்று சபரிமலை சாஸ்தாவின் வழிபாடு, விளம்பரத்தால் நன்கு பரவியுள்ளது.

ஆனைச் சாத்தன் :

‘அடைகுடை ஆனைச்சாத்தன்’ என்ற பெயர் ஆழ்ந்த பொருளுள்ள அரிய பெயராகும். இவ்வளவு நீளமான பெயர் ஒருத்தனுக்குச் சூட்டப்பட்டிருந்ததும் அரிதாகத் தெரிகின்றது.

சென்னைப் பல்கலைக்கழக அகராதி ‘அடைவு” என்னும் சொல்லிற்குப் ‘புகலிடம்’ என்று பொருள் கூறியுள்ளது. பறவைகள் தங்குமிடம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. புகலிடம் என்பது அடைக்கலம் தரும் இடம் என்று பொருள்தரும்,

பறவைகளைக் குறித்து வழங்கினால் பறவைகளின் சரணாலயத்தைக் குறிக்கும். அடைகுடி ஆனைச்சாத்தன் என்ற பெயர் முதலில் ஒரு பறவையின் பெயராகத் தோன்றிப் பின்னர் மாந்தர்க்குப் பெயராக மாறியுள்ளது.

ஆனைச்சாத்தன் என்ற பறவையைத் திருப் பாவையில் ஆண்டாள் பாடியிருக்கிறாள்.

“கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே”

-திருப்பாவை, 7

ஆனைச்சாத்தன் என்ற பறவை, கருங்குருவி இனத்தில் ஒருவகையான வலியன் பறவை என்பதாகும். மலையாளத்தில் இந்தப் பறவையை ‘ஆனைராஞ்சி’ என்று அழைக்கின்றனர். யானையை இறாய்ஞ்சிச் செல்லும் அளவு வலிமை உடையதாகக் கருதி இவ்வாறு அழைத்தனர். தமிழிலும், இந்தப் பறவையை ‘வலியன்’ என்று அழைப்பதும் இதே கருத்தினால்தான் என்பது புறப்படுகின்றது.

மயிலைநாதர் உரையில் இப்பறவை வலியன், வயவன் என்று அழைக்கப்பட்டுள்ளது.

வயவன் என்ற பெயர் வலிமையுடையவன் என்று பொருள் தரும்.

இந்தப் பறவையினத்தில் ஒரு வகையைக் கருங்குருவி என்று நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அழைக்கிறது. இப்பறவையை வடமலையாளத்தில் ‘கரிங்ஙாத்தி’ என்று அழைக்கின்றனர். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ‘கருவாட்டு வாலி’ என்று அதன் வாலின் உருவத்தைக் குறித்துப் பெயரிட்டு அழைக்கின்றனர்.

உண்மைச் செய்தி :

ஆனைச்சாத்தன் பறவை விடியற்காலையில் ‘கீசுகீசு’ என்று கலந்து பேசுவதாக ஆண்டாள் திருப்பாவையில் கூறியுள்ளாள். பறவை நூற்படி இந்தச் செய்தி முற்றிலும் உண்மையான இயற்கைச் செய்தியேயாகும்.

நானே விடியற்காலையில் நான்கு மணிக்கு இரண்டு அல்லது மூன்று வலியன் குருவிகள் ஒன்றை ஒன்று விளித்து உசாவிப் பேசுவது போன்று குரலிடுவதைக் கேட்டிருக்கிறேன்.

நாவலிலும் உள்ளது :

இதேபோன்று விடியற்காலத்தில் வலியன் குருவி கத்துவதைக் கிராமச் சூழ்நிலையில் கண்ட நாவலாசிரியர் தி. ஜானகிராமன் ஒரு புதினத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வலியன் குருவியின் பழக்க வழக்கத்தை நன்கு தமிழன் தெரிந்திருந்ததையும், அதையே தற்காலத்தில் பறவை நூலார் கண்டு கூறியதையும் கவனிக்கலாம்.

சிறந்த பறவை நூலறிஞரான டாக்டர் சலீம் அலி என்பார் விடியற்காலையில் இப்பறவைகள் கத்துவதைப் பற்றி ஆண்டாள் சொல்லியது போலவே விளக்கியுள்ளார்.

வலியன் குருவிக்கு வலியன் என்றும், ஆனைச்சாத்தன் என்றும், ஆனைராஞ்சி என்றும் எப்படிப் பெயர்கள் வந்தன என்பதை அறிவியற்படி ஆராய்ந்தால், ‘அடைகுடி ஆனைச்சாத்தன்’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதைக் கண்டு கொள்ளலாம்.

‘அடைகுடி ஆனைச்சாத்தன்’ என்ற பெயர் முதலில் ‘ஆனைச்சாத்தன்’ என்றழைக்கப்பட்ட பெயர் வலியன் குருவியையே குறித்து வழங்கியது. பின்னர் மாந்தர்க்கும் பெயராக வழங்கிற்று.
சாத்தன், சாத்தி என்னும் பெயர்கள் இலக்கண உரையாசிரியர்கள் காலத்தில் மாந்தர்க்குப் பெயராகவும் வழங்கியிருப்பதை இது சார்பாகக் கவனிக்க வேண்டும்.

வலிமை மிக்க குருவி :

வலியன் குருவி சிறிய குருவி ஆயினும் வலிமை மிக்கது.வீரதீரமும் தைரியமும் மிக்கது. வலியன் குருவி கூடு கட்டின இடத்தில், மரத்தில்,கழுகு காக்கை போன்ற பறவைகள் அருகில் வந்தாலும் கடுங்குரலிட்டு வலியப் பாய்ந்து விரட்டியடிக்கும் திறமை வலியன் குருவிக்கு உண்டு.

ஆனால் கழுகு, காக்கை போன்ற பறவைகள் உருவில் பெரியவை யாயினும் வலியன் அவற்றை வெல்லும் மனத்திண்மையுடையது. உண்மையில் வலியனுக்கு உடலில் அவ்வளவு வலிமை இல்லை. ஆனால், வலியன் தன் மனத்திண்மையால், காக்கை போன்ற பெரிய பறவைகளையும், பறவைகளைக் கொன்று தின்னும் கழுகு போன்ற பெரிய பறவைகளையும் விரட்டி விரட்டி அடிக்கும் தறுகணும் செயலாற்றலும் மிக்கதாகும்.

வலியன் குருவியின் இந்த வீர தீரத்தை உணர்ந்தே, வலிமையற்ற பறவைகள் கழுகு காக்கைகளிடமிருந்து தங்கள் முட்டைகளையும், தங்களையும் பாதுகாத்துக் கொள்ள, மரத்தில் வலியன் கூட்டுக்கு அருகிலும் அடியிலும் கூடு கட்டும் வழக்கமுடையன. இந்தப் பழக்க வழக்கத்தால் வலியன் குருவி கூடு கட்டின இடம். மரம் மற்றப் பறவைகளுக்குப் புகலிடமாக, சரணாலயமாக மாறிவிடுகின்றது.

இத்தகைய புகலிடம் தரும் வலியன் குருவியை ‘அடைகுடி ஆனைச்சாத்தன்’ என்று அழைத்தது அருமையான பெரிய இயற்கைச் செய்தி அறிவியற் செய்தி பொதிந்த பெயர் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

மக்கள் வழக்கு :

கிராமச் சூழ்நிலையில் வாழும் நாட்டார் மக்கள் இந்தச் செய்தியைக் கண்டே வலியன் என்ற பெயரால் இன்னும் இப்பறவையை அழைக்கின்றனர். ‘அடைகுடி ஆனைச்சாத்தன்’ என்ற கல்வெட்டுப் பெயரின் முழுப் பொருளும் அதிலுள்ள ஆழ்ந்த கருத்தும் வலியன் குருவியுடன் இணைத்துப் பார்க்கும்போதுதான் புலப்படுகின்றது.

வலியன் குருவியின் அஞ்சாநெஞ்சையும் ஆற்றல் மிக்க செயலையும், நாட்டார் மக்களும், பழங்குடி மக்களும் நன்கு உணர்ந்திருந்தனர்.

விந்தைச் செய்திகள் :

இமயமலை அருகில் வாழும் ‘குக்கி’ (Kukee) என்ற மலைக்குடிகளின் அரசன், பழங்காலத்தில் கருங்குருவியின் இறக்கையை அரசுச் சின்னமாக தலையில் அணிவது உண்டாம்.ஆப்பிரிக்காவில் காங்கோ நாட்டு மக்கள் வலியன் பறவையைத் தங்கள் மொழியில் ‘சினப்புலி’ (Angry tiger) என்றழைக்கின்றனர்.

வலியன் குருவி சினத்திற்கும் தைரியத்திற்கும் வீரத்திற்கும் பேர் போனது. வலியன் குருவி விரைவாகப் பாய்ந்து எதிரியைத் தாக்கி மீளும் தன்மையைக் கண்டே. அதை யானையை இறாய்ஞ்சிச் செல்லும் வலிமையுடையது என்று கற்பித்து ‘ஆனைராஞ்சி’ என்றழைத்தனர்.

யானையைத் தூக்கிச் செல்லக்கூடிய ஆற்றல் மிக்க பறவை என்ற கற்பனை ஆண்டாள் காலத்திலும் இருந்ததால், ஆண்டாளும் அக்காலத்தில் தமிழில் வழங்கிய ‘ஆனைச் சாத்தன்’ என்ற பெயரால் வலியனை அழைத்திருக்கிறாள்.

வயவன் என்ற பெயர் சங்க நூல்களில் புலிக்கு வழங்கியுள்ளது. வயமான் என்பதும் புலியாகும். இதே பெயர், உரையாசிரியர் மயிலைநாதர் காலத்தில் வலியனுக்கும் வழங்கியுள்ளது.

இந்த வழக்கு காங்கோ நாட்டு மக்களின் வழக்குடன் ஒத்திருப்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
வடநாட்டின் கோட்வால் (superindent of police) என்று அழைக்கப்படுகின்றது. பிற இனப் பறவைகளைக் ஓர் காப்பாற்றும் அதிகாரி என்று கருதி அவ்வாறு வழங்கினர்.

நூல்களில் பிற பெயர்கள் :

வலியன் பறவையைத் திருவிளையாடல் புராணத்தில் ‘கோக்கயம்’ என்று அழைத்திருப்பதைக் காணலாம். வலியனைக் ‘கயவாய்’ என்று நிகண்டுகள் கூறுகின்றன. கயவாய் என்பது பெரிய வாய் என்று பொருள்படும்.

பெரிய வாயாடி என்னும் நாட்டு வழக்கில் இப் பொருளைக் காணலாம். ஆதலின் பெரிய பேச்சு. உடையது என்னும் பொருளில், கயம் என்னும் தலைமையைக் கொண்டது என்ற பொருளில், கயவாயுடைய பறவைகளின் அரசன் என்ற பொருளில் கோக்கயம் என்று திருவிளையாடல் புராணம் கூறியுள்ளது. ஆண்டாள் ‘கீசு கீசென்று’ கூறி இதன் பெரிய பேச்சை குறிப்பிட்டதைக் கவனிக்க வேண்டும்.

புராணச் செய்தி :

வலியன் குருவி மிகப் பண்டைக் காலத்தில் எளிமையுடைய, வலிமையற்ற பறவையாக இருந்ததாகவும், சிவபெருமானின் அருளால் இந்தப் பறவை வலிமையையும் சாகாவரத்தையும் பெற்ற தாகவும் ஒரு புராணக் கதை சைவர்களால் படைக்கப் பட்டது.

இது புனைகதை என்பதைப் பகுத்தறி வாளர்கள், அறிவியல் நோக்குடையவர்கள் புரிந்து கொள்வர்.இந்தச் சிறிய வலியன் பறவையின் வீரதீரத்தைப் பட்டறிவால் கண்டுணர்ந்த செய்தியைப் பயன் படுத்திச் சோமசுந்தரக் கடவுளைப் பெருமைப்படுத்து வதற்காகவே இந்தக் கதை தமிழ்நாட்டில் புனையப் பட்டுப் புராணமாக்கப்பட்டது.

இலக்கியத்தில் சேர்த்தல் :

நாட்டார் மக்களின் பழஞ்செய்திகள், நம்பிக்கைகள் முதலியன உயர்ந்தோர் இலக்கியத்தில் நுழைக்கப் பட்டு மேம்பாடடைவதுண்டு. அவை புராணங்களிலும் இலக்கியத்திலும் நுழைந்து, மேன்மக்களுக்கும் மதத்தின் அடிப்படையில் நம்பிக்கைக்கு உரியதாகவும் ஒப்புக்கொள்ளத்தக்கதாகவும் ஆவதுண்டு.

திருவிளையாடல் புராணத்தில் வரும் கருங் குருவிக்கு மந்திர உபதேசம் செய்து கொடுத்த கதை நாட்டார் பண்பாட்டுச் செய்தியை வைத்துக் கொண்டு புனைந்து படைக்கப்பட்டதாகும்.

இயற்கையிலேயே வீரதீரமுடைய பறவை களுக்குப் புகலிடமாக இருந்து, ‘அடைகுடியாக’ இருந்து, பறவைகளுக்கு அரசுத் தன்மை செலுத்தக் கூடிய இந்த வலியன் பறவையைப் பண்டைக் காலத்தில் வலிமையற்றதாக இருந்ததென்றும், சிவபெருமானின் அருளால் கோக்கயத்தன்மை, அதாவது பறவைகளுக்குள் அரசுத் தன்மை பெற்ற தாகவும் திருவிளையாடல் புராணம் புனைந்து கூறுகிறது.

ஆனால் திருவிளையாடற் புராணம் இந்த வலியன் குருவிகளின் கீச்சும் பேச்சும் சாகா வழிக்கு உதவும் மந்திரமாகக் கொண்டது என்றும், வலியன் குருவி இந்த மந்திரத்தைச் செபிப்பதாகவும் கற்பனை பண்ணிக் கூறியிருப்பதைக் காணலாம்.

இந்தக் கதை முதலில் புனையப்பட்டது கல்லாடத்திலாகும். மிகப் பிற்காலத்தில் தோன்றிய காஞ்சிப் புராணமும் இதனைக் கூறியுள்ளது.

இந்தப் புராணக்கதை தமிழ்நாட்டில் மட்டும் தோன்றியது. இத்தகைய கதைகளைப் புத்த ஜாதகக் கதைகள் போலத் தமிழ்நாட்டில் சைவர்கள் புனைந்துள்ளனர் என்பதில் ஐயமில்லை.

திருவிளையாடற் புராணக் கதைகளுக்கு வட நாட்டுப் புராணத் தொடர்பு பெரிதுமில்லை. ஆனால் இந்தக் கதையை வேத வழக்குடன் ஒப்புக் கொள்ள வேண்டுமென்பதற்காக, வடமொழியில் ‘மிருத்துஞ்சய மந்திரத்தை’, அதாவது சாகா வழிக்குதவும் மந்திரத்தைக் கரிக்குருவிகள், வலியன் குருவிகள் செபிப்பதாகத் திருவிளையாடற் புராணம் கூறிற்று.

அரும்பெரும் புத்தியுள்ள வன்புடைச் சடக மேநின்
பெருங்குலக் கிளைக்கு மப்பாற்
பெறும்பேறு மிளம் பார்ப் பிற்கும்
பொருந்துமிம் மந்திரத்தைப் போதியிப் புவனமெச்சப்
பரிந்தவை யாவு முய்ந்து பயமறத் திரிவதற்கே.

அயர்வது சிறப்பின் மிக்க வவனிமீ தென்று நந்த முயர்விளை யாடல் காண வும்பரு மதிச யிப்பச் செயிரறு பறவைக் கெல்லாந் தீபமே யனைய வுன்றன் பெயரது வலியா னென்று பேசிடக் கடவ தென்றே,

கருணையிற் பரிசஞ் செய்து
கருதியித் தகவுஞ் சொல்லிப்
பொருவரு முன்னிடத்துப்
போவென விடைகொடுப்பக்
குருவியு மாலித்தன்பு கூர்ந்துபோய் விடியு முன்னர் விரைவொடும் புகுந்து காட்டில்
வெல்லுமந் திரமோதிற்றால்,

மறுவறு சிகரம் பன்னாள் வலஞ்செய்து சிறகு நோவ நெறியினின் வணங்கிப் பெற்ற நிகரிலா மந்திரத்தைப் பிறிவருஞ் சாதிக் கெல்லாம் பிஞ்ஞக னருளாற் கூடி அறிவுற வுபதே சிப்ப வப்படி யோதிற் றன்றே.

நன்பரி வெய்தி யாவு நவையற வோது முன்னர் வன்பெரும் பகையை வெல்ல
வல்லநன் விளைவு தோன்ற
முன்பது கண்ட பின்ன ரவையவை முடுக்கிக் காக்கை யின்புறு தலையி லெற்றப் புகுந்தன வெங்கு மெங்கும்.

கோக்கய நோக்கைநீக்கிக் கூர்க்குமூக் குடைய யாக்கைக்
காக்கைக டலைபி ளக்கக் கத்தமுற்பகைநினைந்து மேக்குறீஇ யொன்றுக்கொன்று
விரைவொடு மாறிமாறிப்
போக்கறத் தொடர்ந்து குட்டப்
புகுந்தன வெங்குமெங்கும்.

ஆங்கது கண்ட போதே யதிசயித் தவனி யோர்கள் பாஙகுடைச் சொக்கன் வல்ல வல்லபம் பாரீர் பாரீ

ரீங்குமுன் கண்ட தன்றிங் கிறைஞ்சின பின்னரென்றே வாங்கரு முவகை கூர்ந்தார்
பெயரையும் வலியா னென்றார்.
(கரிக் குருவிக்கு அருள் புரிந்த திருவிளையாடல் – பாடல்கள் 8-14)

மேலே கூறப்பட்ட திருவிளையாடற்புராணப் பாடல்களின் மூலம், எவ்வாறு மெலியனான கரிக் குருவி சிவபெருமானால் உபதேசிக்கப்பட்ட மிருத்துஞ்சய மந்திரத்தை ஓதினபின் வலியன் ஆனது என்பது விளங்குகின்றது.

தன் பகையான காக்கைகளின் தலையைப் பிளக்கக் ‘கூர்க்கு மூக்குடைய யாக்கையையுடைய கரிக்குருவி’ தலைமையாகிக் கோக்கயமாகியது என்று கூறப்பட்டுள்ளது.

மற்றுமொரு அரிய செய்தி திருவிளையாடற் புராணத்திலே சொல்லப்பட்டுள்ளது.

சிவபெருமான் உபதேசித்த மிருத்துஞ்சய மந்திரத்தை,விடியற்காலையில், இருபத்தைந்து நாழிகைக்குப் பிற்பட்ட காலமான பிரம முகூர்த்தத்தில் ஓதினால் காக்கைக்குப் பயப்படவேண்டியதில்லை என்று கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஆண்டாள் திருப்பாவையில் விடியற்காலையில் ‘கீசுகீசென்று’ கரிக்குருவி பேசியதையே சைவர்கள் மிருத்துஞ்சய மந்திரத்தைக் காலையில் கரிக்குருவி ஒதுவதாகக் கருதினர்.

ஆனால் திருவிளையாடற்புராணம் புனைந்து கூறிய இக்கதையின் கரு (Source) நாட்டார் கண்டறிந்த கரிக்குருவியின் இயற்கை அறிவியல் செய்தியேயாகும்.

இச்செய்தியே மாற்றப்பட்டு, திரிக்கப்பட்டுப் புராணக்கதை ஆகியது என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

மலையாளத்தில் நிலைத்துள்ளன :

இன்றைய மலையாள மொழியில் பல பண்டைய தமிழ் வழக்குகளும் மரபுகளும் காப்பாற்றப் பட்டுள்ளன. கேரளநாடு தமிழகத்திலிருந்து மலைத் தொடர்களால் பிரிக்கப்பட்டதால் (Isolation) தூய தமிழ் வழக்குகள் சில துறைகளில் காப்பாற்றப்பட்டன.

கேரள நாட்டில் நாட்டார் பண்பாட்டியலில் பல அரிய பெரிய தமிழ்ப்பண்பாட்டு மரபுகள், செய்திகள் காணப்படுகின்றன.

வலியன் பறவை இனத்தில் உள்ள மூன்று நான்கு வகைகள் பேச்சு வழக்கில் காக்கத் தம்புரான், காக்கத் தம்புராட்டி என்று அழைக்கப்படுகின்றன. இந்த மலையாளப் பெயர்களுள் எல்லாம் வலியன் குருவியைத் தம்புரான், தம்புராட்டி என்ற அரசனின் பெயரையும் அரசியின் பெயரையும் இணைத்து வழங்குவது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

இந்தக் கருங்குருவிகளில் நான்கு சாதி உண்டு. ஒரு வகை தம்புரானாகவும் இன்னொரு வகை தம்புராட்டியாகவும் கூறப்பட்டது கவனிக்கத்தக்க தாகும்.

ஆயினும் தம்புரான், தம்புராட்டி என்னும் பெயர்கள் இந்தப் பறவைக்கு வழங்கப்பட்டிருப்ப தால் மலையாள மொழியிலும் மக்களிடத்தே இந்தப் பறவையின் ஆற்றலையும் அதிகாரத்தையும் உயர்ந்த தாகக் கருதிப் பெயரிட்டழைத்தார்கள் என்பது தெளிவாகின்றது.

தாய்வழி மரபுப் பெயர் :

தம்புராட்டி என்ற மலையாளப் பெயர் தாய்வழி முறையை (mother right) ஒட்டி வழங்கியதாகும். வலியன் குருவிகளில் தம்புராட்டி என்றழைக்கப்படும் குருவி வகை தம்புரான் என்றழைக்கப்படும் குருவி வகையைவிட மிக்க வலிமையுடையது என்ற மலையாள நாட்டு மக்கள் நம்பிக்கையும் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும்.

மலையாளத்தில் தம்புராட்டி, தம்புரான் என்று வழங்கும் பெயர்களுடன், திருவிளையாடற் புராணத்தில் வழங்கும் கோக்கயம் என்ற அரசுப் பெயரையும், ‘குக்கிள்’ என்ற பழங்குடிகளில் அரசன் வலியன் குருவியின் இறகைத் தலையில் தரித்ததையும் இணைத்து ஆராய்ந்ததால், அடிப்படை உண்மை விளங்குகின்றது.

மொழியில் இடைவெளியால் மிக வேறுபட்ட இனத்தினரும், இடத்தினரும், இந்தப் பறவையின் பழக்க வழக்கத்தை நன்கு உணர்ந்து, இப்பறவையின் அஞ்சா நெஞ்சமுடைய வீரதீரத்தை உணர்ந்து, பாதுகாக்கும் குணத்தை உணர்ந்து, இதற்கு அரசுத்தன்மை கற்பித்து ஏற்றனர் என்பது தெளிவாகின்றது.

 

Weight0.25 kg