நேரு வரலாற்றை எவ்வாறு அணுகினார்? வரலாறு நேருவை எவ்வாறு அணுகுகிறது? ஓர் ஆழமான ஆய்வு
இந்திய வரலாற்றின் பாட நூல் பதிப்பு சிக்கலான பகுதிகளை விட்டுவிடுவதுடன், முழுமையான உண்மை விவரங்களையும் வெளியிடவில்லை என்று தொடங்கும் ஆசிரியர், வரலாற்றை நேரு எவ்வாறு அணுகினார் என்பதுடன், நேருவை வரலாறு எவ்வாறு அணுகுகிறது என்று நூலில் விரிவாக ஆராய்கிறார்.
காஷ்மீர் பிரச்னையின் தோற்றமும், நேரு – ஷேக் அப்துல்லா, சியாமா பிரசாத் முகர்ஜி ஆகிய மூன்று புள்ளிகளின் தொடர்பும், நேரு – ஷேக் அப்துல்லா நட்பு எந்த அளவுக்குச் செயல்பட்டன என்பதும் நூலில் விளக்கப்படுகிறது.
மராட்டியத்தில் 1893-இல் மறுசீரமைக்கப்பட்ட பத்து நாள் கணபதி திருவிழா தொடங்கப்பட்டதன் – உணர்வு பூர்வமாக வடிவமைக்கப்பட்டதன்- பின்புலம் விவரிக்கப்படுகிறது.
இந்தியாவுடனான நேருவின் அறிவுசார் மற்றும் கலாசார உறவுகள், மற்றோர் இடத்தின், வரலாறு மற்றும் கலாசாரத்தால் இடைமறிக்கப்பட்டன. பல்வேறு இடங்களிலிருந்து எண்ணங்களைக் கொண்டுவந்த நவீன பயணியை நேரு உருவகப்படுத்தினார் என்கிற ஆசிரியர், இதுபோல நேரு மட்டுமல்ல, வேறுபல தலைவர்களும் இருந்தனர் என்கிறார்.
‘மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொண்டு ஏதோ அற்புதமாக, தாராளமாகச் செய்ததைப் போலச் சொல்கின்றனர்… உலகின் சில பின்தங்கிய, மற்றும் தவறாக வழிநடத்தப்பட்ட நாடுகளைத் தவிர, ஒவ்வொரு நாடும் செய்ததையே நாமும் செய்துள்ளோம்’ என்ற நேருவின் வரிகளைக் கொண்டு பல்வேறு மேற்கோள்களுடன் விமர்சிக்கப்படுகிறது.
கலாசாரம் மற்றும் பல பகுதிகளிலுள்ள இந்தியர்களின் நிலைமைகள் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் ‘கண்டுணர்ந்த இந்தியா’ (தி டிஸ்கவரி ஆப் இந்தியா) நூலில் நேரு தெரிவிக்கும் கருத்துகளை முன்வைத்தும் ஆழமான விவாதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய வரலாற்றை மறுவரையறை செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெருக்கடியில் இருக்கும் நேருவின் ஜனநாயக உணர்வைக் குழிதோண்டிப் புதைக்கும் புதுவகைக் கையாளுதல்களும் நடைபெறுகின்றன என்று நிறைவு செய்கிறார் ஆசிரியர்.