தொல்காப்பியத்தில் கூறப்பட்ட சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது சதக இலக்கியம். இச்சிற்றிலக்கியங்கள் தமிழின் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்திருப்பதை ஆசிரியர் உறுதிப்படுத்துகிறார். சதகம் என்றால் நூறு என்கிற கணக்கில் நூறு எண்ணிக்கையிலான பாடல்கள் இடம் பெறும் இலக்கியங்கள் பட்டியலிடப்படுகின்றன.
இந்நூலில் அந்தாதியை முதல் சதக இலக்கியமாக நாம் அறிந்துகொள்ளலாம். ஒரு பகுதியில் ஆட்சி செய்த மன்னன் அவன் குடி மற்றும் அப்பகுதியின் வளங்கள் என மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகப் பாடப்பட்ட சதகங்கள் உண்டு.
மேலும், முருகக் கடவுளை பாட்டுடைத்தலைவனாக்கி பாடப்பட்ட சதகம் குமரேச சதகம், இதே போல் அண்ணாமலையார், திருவேங்கடமுடையான், தில்லை நடராஜர், இயேசு பிரான் என பக்தி இலக்கியத்தில் சதகங்கள் பல உள்ளதை எளிமையாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
இயேசுநாதர் சதகமும், அரபிச் சதகமும், முகையத்தீன் சதகமும் தமிழிலக்கியத்தில் உள்ளதை வைத்துப் பார்க்கும்போது நூலாசிரியர் சொன்னது போல காலத்துக்கு ஏற்றார்போல் தன்னைத் தகவமைத்துக்கொண்ட இலக்கியம்தான் சதக இலக்கியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.
இறைவன், குரு, தலைவன், மன்னன், மண் வளம், நீதி என எல்லா தலைப்புகளிலும் சதகங்கள் இடம்பெற்று, தமிழின் மகுடத்தில் ஓர் ஒளிரும் கல்லாக சதக இலக்கியம் இடம்பெறுவதாக இந்நூலின் வாயிலாக நாம் புரிந்து கொள்ளலாம்.