Menu

மனித சமுதாயம்

பெரிய பெரிய கற்களைக் கொண்டு ஈமச்சடங்கிற்கான அமைப்புகளை மக்கள் உருவாக்கிக் கொண்ட காலம்தான் பெருங்கற்காலம் (Megalithic Period). ‘மெகா” என்றால் பெரிய, “லித்திக்” என்றால் கல் அதாவது “மெகாலித்திக்” என்றால் பெரிய கற்களைப் பயன்படுத்திய காலகட்டம். பெரிய கல் அமைப்புகளில் உடல்களைப் புதைத்துச் சடங்குகளைச் செய்ததால் பெரும்படைக் காலம் எனவும் அழைப்பார்கள்.’

இந்த அமைப்பு உலகம் முழுவதிலும் பல்வேறு இனமக்களால் பல்வேறு காலகட்டங்களில் கட்டப் பட்டுள்ளன. இக்காலத்தைச் சேர்ந்த பெருங்கல் அமைப்புகள் கற்பதுக்கை (Cist), கற்கிடை (Dolmen), கற்குவை (Cairn). பறல்உயர் பதுக்கை (Cairn Circle), தொப்பிக்கல் (Hood Stone), குடைக்கல் (Umbrella Stone), நெடுங்கல் (Menhir) எனப் பலவகைகள் உண்டு. இந்தப் பெருங்கல் அமைப்பு பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், இத்தாலி, இந்தியா உட்படப் பலநாடுகளில் காணப்படுகின்றன. இவை தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அதிக அளவில் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை பெருங்கற்காலப் பண்பாடு கி.மு 1,500 இலிருந்து கி.பி. 250 வரை என வரையறுத்து இருக்கிறார்கள். இது புதிய கற்காலத்திற்குப் பின் ஏற்பட்ட வளர்ச்சியாகும். இக்காலத்தில் வாழ்ந்தவர்கள் இரும்பைப் பயன்படுத்தி உள்ளனர். எனவே இரும்புக் காலம் இதனூடே வருகிறது. இதைத் தொடர்ந்து சங்க காலமும் வருகிறது.

“இங்கே வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தானே?”

பெருங்கற்காலம், இரும்புக்காலம். சங்ககாலம் இந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான். ஆனால், தொல்பழங்காலத்தில் வாழ்ந்ததாகப் பார்த்தோமே ஹோமோ எரக்டஸ் என்ற இனத்தினர் அவர்கள் மொழிகள் உருவாவதற்கு முன்பாகத் தோன்றி வாழ்ந்தவர்கள், எனவே அவர்களை மொழிரீதியாக அடையாளப்படுத்த முடியாது.’

“இந்தப் பானைகளை பார்த்தவுடன் ஞாபகம் வருகிறது. பானைகளை யார் முதலில் செய்தது?”

‘யாராக இருக்கும் என நினைக்கிறாய்?’

“முதுமக்கள் தாழிகளில் உள்ளதைப் பார்த்தால் முதலில் தமிழர்கள் செய்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது.”

தவறு அதற்கும் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பானைகள் செய்யப்பட்டுவிட்டன.’

”ஆங்! ஞாபகம் வந்திருச்சி மெசபடோமியர்கள்தான் முதலில் செய்திருக்க வேண்டும். இவர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே சக்கரங்களைப் பயன்படுத்தியவர்கள் என்று படித்திருக்கிறேன். பானைகள் செய்ய சக்கரம் வேண்டும். எனவே பானைகளை முதலில் மெசபடோமியர்களே செய்திருக்க வேண்டும் சரியா?”

‘பாதி சரி, சக்கரங்களை முதலில் மெசபடோமியர்கள்கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பானைகள் வனையப்பட்டுவிட்டன. ஜப்பானின் ஜோமொன் பண்பாட்டு (Jomon Culture) மக்களே உலகிலேயே பழமையான மண்பானைகளை உருவாக்கியவர்கள். ஜோமொன் மண்பானைகள் கிமு 14,500 வரை பழமையானவை.

சீனாவின் ஜியாஹு (Jiahu) மற்றும் பேன்போ (Banpo) போன்ற பகுதிகளில் கிமு 10,000திற்கும் முந்தைய பழைய மண்பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சக்கரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே களிமண்னை வைக்கோலுடன் சேர்த்து பானைபோல் செய்து காயவைத்து செய்திருக்கிறார்கள். இந்தியாவில், சிந்து சமவெளி நாகரீக (Indus Valley Civilization) பண்டைய கிராமங்களில் மண்பானை பயன்படுத்தியதற்கான தரவுகள் உள்ளன. இந்திய மண்பானைகள் கிமு 2,500 இல் உலர் மண்பானைகளாக இருந்தன. நெருப்பில் சுடும் முறை பின்னர் உருவானது.’

பல்லவர் காலம் :

பல்லவர் காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டுகள் இதுவரையில் சுமார் 260 கிடைத்துள்ளன. இவற்றில் கி.பி. 850க்கு முந்தியவை சுமார் 140 கல்வெட்டுகள் ஆகும். கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கு முன் அரசு செலுத்திய பல்லவர்கள் தங்களது செப்பேடுகளைப் பிராகிருத மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் வெளியிட்டார்கள் என்றாலும் சிம்மவர்மன் காலம் தொடங்கி சமஸ்கிருதத்தோடு தமிழிலும் செப்புப் பட்டயங்களை வெளியிடத் தொடங்கினர்.

பல்லவர் காலத் தமிழ்க் கல்வெட்டுகளிலே மிகப் பழமையானது பள்ளன் கோயிலிலிருந்து கண்டெடுக்கப் பெற்ற சிம்மவர்மனின் செப்பேட்டில் எழுதப் பெற்றுள்ள தமிழ்ப் பகுதியேயாகும். இது சிம்மவர்மனின் ஆறாம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டதாகும். இதற்கு அடுத்ததாக, தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் கோரையாறு என்ற இடத்தில் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப் பெற்ற சிம்மவிஷ்ணுவின் இருபத்தோராவது ஆட்சி ஆண்டுக் கல்வெட்டைக் கூறவேண்டும் இது நடுகல் கல்வெட்டு. இது தமிழ் மொழியிலும், வட்டெழுத்திலுமாக உள்ளது. இதற்கடுத்து,இம்மன்னனின் முப்பத்துமூன்றாம் ஆட்சி ஆண்டைச் சேர்ந்த, நரசிங்கநல்லூர்க் கல்வெட்டைக் குறிப்பிடவேண்டும். இதுவும் தமிழ்மொழியிலும் வட்டெழுத்திலுமாக உள்ளது.

மகேந்திரவர்மன் காலத்திய தமிழ்க் கல்வெட்டுகளும் தமிழகத்தில் பெருமளவில் கிடைத்து வருகின்றன. அவற்றுள் முக்கியமாக வடார்க்காடு மாவட்டத்தில் பத்துக்கும் மேலாகக் கிடைத்துள்ள நடுகற்களைக் குறிக்கலாம். இந்நடுகற்கள் அனைத்தும் வட்டெழுத்திலும் தமிழ் மொழியிலுமாக உள்ளன. இம்மன்னன் காலத்தில் தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது. அது செங்கற்பட்டு மாவட்டம் வல்லம் என்ற ஊரில் கிடைத்துள்ள கல்வெட்டேயாகும். இம்மன்னர்களின் வழிவந்த முதலாம் நரசிம்மன், இரண்டாம் மகேந்திரவர்மன், முதலாம் பரமேசுவரவர்மன்,72

இரண்டாம் நரசிம்மவர்மன், இரண்டாம் நந்திவர்மன், தந்திவர்மன், கம்பவர்மன் ஆகியோர் காலத்திய நடுகல் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. இரண்டாம் நந்திவர்மன் காலத்திலிருந்து தமிழ் எழுத்தில் பொறிக்கப்பெற்ற தமிழ்க் கல்வெட்டுகள், பெருமளவில் கிடைத்துள்ளன. அதிலும் சிறப்பாகக் கம்பவர்மன் காலத்திலிருந்து நல்ல தமிழில் சிறந்த அமைப்புள்ள கல்வெட்டுகளைக் காணமுடிகிறது.

பல்லவர்கள் காலக் கல்வெட்டுகள் அனைத்தும் “கோவிசைய* என்றே ஆரம்பமாகின்றன. இவர்கள் கல்வெட்டுகளில் பெரும்பாலும் அரசனின் ஆட்சி ஆண்டே குறிக்கப்பட்டு அவை எழுத்தால் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுகள் பல்லவ மன்னர்களை ‘வர்மர்’ என்றும் ‘போத்தரையர்’ என்றும் ‘விக்கிரமபருமர்’ என்றும் அடைமொழிகளால் குறிக்கின்றன. போத்தரையர் என்னும் அடைமொழி செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் என்ற ஊரில் கிடைத்த மகேந்திரவர்மனது கல்வெட்டில் முதலில் குறிப்பிடப்படுகிறது.

1. சத்துரும்மல்லன் குணபரன்

2. மயேந்திரப் போத்தரெசரு அடியான்

3. வயந்தப்பிரியரெசரு மகன் கந்தசேனன்

4. செய்வித்த தேவகுலம்(S.I.I. vol. II p.341)

பல்லவர்கள் கால நடுகல் அனைத்தும் வட்டெழுத்திலும் தமிழ் மொழியிலுமாக உள்ளன. ஆனால் இம்மன்னர்களால் குடைவிக்கப் பெற்ற குடைவரைக் கோயில்களிலாயினும் சரி, எழுப்பப்பெற்ற கோயில் களிலாயினும் சரி வட்டெழுத்தில் கல்வெட்டுகள் காண முடியவில்லை. தமிழ் எழுத்தில் காணப்படுவதும் மிகக் குறைவாகவே உள்ளது. அதே போன்று கி.பி.ஆறாம் நூற்றாண்டு முதலே தமிழ் எழுத்தையும் நன்கு அறிந்திருந்தார்கள் என்றாலும் அவர்கள் கால நடுகற்கள் அனைத்தும் வட்டெழுத்திலேயே காணப்படுகின்றன. இத்தகைய அமைப்புகளுக்கு ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கக்கூடும்.

பல்லவர்கள் காலத் தமிழ்க் கல்வெட்டுகளில் “ஸ்வஸ்திஸ்ரீ” என்ற மங்கல வாசகம் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் காலத்திலிருந்து காணப்படுகிறது.

பல்லவர்கள் காலத் தமிழ்க் கல்வெட்டுகள் தொண்டை மண்டலம், சோழ மண்டலம் ஆகிய பகுதிகளில் பரவிக் காணக் கிடைக்கின்றன.
சயாம் நாட்டில் உள்ள தக்கோலம் (தகூஉபா) என்ற இடத்திலும் பல்லவர்கள் காலத் தமிழ்க் கல்வெட்டு கிடைத்துள்ளது.

பல்லவர்கள் தாங்கள் வெற்றி கொண்ட ஊரைத் தங்களது பெயரோடு சேர்த்து வழங்கி வந்துள்ளனர் என்பதையும் கல்வெட்டுகள் மூலம் உணர முடிகிறது. முதலாம் நரசிம்மவர்மன், சாளுக்கிய மன்னர்களின் தலைநகரான வாதாபியை வெற்றி கொண்டதன் காரணமாக ‘வாதாபி கொண்ட நரசிம்மன்’ என்று ஒரு பெயர் வழங்கி வந்தது திருக்கழுக்குன்றம் கல்வெட்டால் புலப்படுகிறது. அதே போன்று மூன்றாம் நந்திவர்மன், தெள்ளாற்றில் நிகழ்ந்த போரில் தான் வெற்றி அடைந்ததின் காரணமாகத் தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் என்று பெயர் தரித்துக் கொண்டான் என்பது மற்றொரு கல்வெட்டால் தெரியவருகிறது.

பல்லவ மன்னன் அபராஜிதன் வெண்பா இயற்றும் திறமை படைத்தவர் என்பதைத் திருத்தணியிலிருந்து கிடைத்துள்ள கல்வெட்டு மூலம் உணரலாம். அக்கல்வெட்டு பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.

திருந்து திருத்தணியில் செஞ்சடை ஈசர்க்கு கருங்கல்லால் கற்றளியா நிற்க – விரும்பிய நற்கலைகளெல்லாம் நவின்ற சீர் நம்பி அப்பி பொற்பமைய செய்தான் புரிந்து

தென்னார்க்காடு மாவட்டம், தளவானூரிலும் கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்க் கல்வெட்டு ஒன்று பாடலாக உள்ளது. இதனுடைய வடமொழி ஆக்கமும் அருகில் பொறிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், திருவெள்ளறையில் பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் ஒரு பாடல் பொறிக்கப்பட்டுள்ளது. அது

“ஸ்ரீ கண்டார்காணா வுலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டேய் பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நைய்யாதேய் தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன்

னுண்டேல் லுண்டு மிக்கது உலகம் மறிய வைம்மினேய்”
என்பதாகும்.

பல்லவர்கள் காலத் தமிழ்க் கல்வெட்டுகள் மூலம் அவர்களது ஆட்சி முறை, வேளாண்மை, நீர்ப்பாசனம், சமயவழிபாடு, கலை, பண்பாடுஆகியவற்றைத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. நாட்டுப் பகுதிகள் கோட்டம், நாடு, ஊர் என்று பிரிக்கப்பட்டிருந்ததையும் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

மனித சமுதாயம்
₹350