தொல்குடி வழிபாடும் தலைமையும் :
நடுகல் வழிபாடு பழங்குடியினரின் ஆவி வழிபாட்டிலிருந்து தோன்றியது குடியிலுள்ள ஒருவன் இறந்துவிட்டால் அவன் இறந்து விட்டதாகக் கருதவில்லை. அவன் உடனிருப்பதாகவே பழங்குடியினர் கருதுகின்றனர். ஆன்மா உடலிலிருந்து பிரிந்து சாவு ஏற்படாமலேயே சில காலம் இருத்தல் கூடும் என்பது பண்டைய மக்களின் நம்பிக்கை ”ஆன்மா” சில காலம் இருக்க முடியுமானால் நெடுநாட்கள் இருக்க முடியும் என்பது சாத்தியமே. அப்படி பிரிந்திருக்கும் பொழுது ஒரு பகுதி ஆவியின் இருப்பிடத்திலும், ஒரு பகுதி ஆன்மா வேறிடத்திலும் இருக்கும். ஓரிடத்தில் ஆவியை நிறுத்தும் சக்தி மனிதனுக்கு ஏற்பட்ட பின் நிரந்தரமாகக் கல்லில் கொண்டு வந்து நிறுத்த முடியும் என்று நம்பினான் (வானமாமலை, 1974: 46). அதனால் மரம், கல் போன்ற வற்றில் இறந்தவர்கள் ஆவியைக் கொண்டு வந்து நிறுத்தினர். இந்நிலை வந்த பின் நடுகல் வணக்கம் தோன்றியது. இறந்தவனது ஆவியைக் கல்லில் தங்க வைத்த பின் அக்கல்லிற்கு வழிபாடு செய்தனர். தன் இனக்குழுவில் வாழ்ந்த மனிதன் இறந்த பின்னும் தன்னுடனேயே வாழ்கிறான் என்ற நம்பிக் கையில் பண்டைக்கால மனிதன் இவ்வழி பாட்டினைத் தொடர்ந்தான்.
ஆஸ்திரேலியப் பழங்குடிகளுக்கிடையில் ‘கற்காண்டல்’ நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. (Singaravelu, 1966: 133) அவர்களி டையில் உள்ள நம்பிக் கையின் அடிப்படையில் இந்தச் சடங்கு நடைபெறுகின்றது. மலை, பாறை, மரம், செடி, கொடி ஆகியவற்றில் தங்கள் குலத்தினர் ஆவிகள் தங்கியிருப்பதாகக் கருதுகின்றனர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அங்குக் கல்வழிபாடு தோன்றிய தென்பர்.
தொல் பழங்காலம் :
தமிழகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற் சின்னங்கள் இறந்தாருக்கு உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் இவற்றில் வாள், வேல், அம்புகள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன (தொல் பழங்காலம், 1975: 220), ஆகையால் போருக்கும் இச்சின்னங்களுக்கும் இடையிலான தொடர்பினை வலியுறுத்த வேண்டியதில்லை. மேலும் சில ஈமச் சின்னங்களில் எருமை, மாடு போன்ற உருவங்களும் கண்டறியப்பட்டுள்ளன. சில பெருங்கற் சின்னங்களில் குத்துக்கல் (Menhir) நடப்பட்டுள்ளதைக் காணமுடியும் (Narasimbah, 1980:201). அகப்பாடல்களில் ‘நெடுங்கல்’ என்றும் ‘நட்டபோலும் நடா நெடுங்கல் (அகம் 269) என்றும் கூறுவது இந்தக் குத்துக் கற்களைக் குறிப்பதா கலாம். கொங்கில் கொடுமணல், பாசூர், கொங்கம் பாளையம் போன்ற ஊர்களில் குத்துக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (இராசு, 1974:82) மேலும் திருவண்ணாமலை மாவட்டம், மேட்டுப்புதூர், விழுப்புரம் மாவட்டம் உடையாநத்தம் போன்ற ஊர்களில் கண்டுபிடிக்கப்பட்ட உருவங்கள் தலையற்ற ‘முண்டங்கள்’ போலத் தோன்றுகின்றன (The Hindu, 1982, July 23). இவை உயிரை அர்ப்பணித்த வீரர்களுக்காக நடப்பட்ட கற்களாகலாம். இந்தக் கற்கள் கிடைக்கும் பகுதியில்தான் நடுகற்கள் மிகுதியாக நடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குத்துக்கள் நடும் வழக்கம் ஏற்பட்ட பின் பெருங்கற் சின்னங்கள் ஏற்படுத்தும் வழக்கம் குறைந்து நடுகல் நடும் வழக்கம் மிகுந்தது என்று கருதப்படுகின்றது. பெருங்கற் சின்னங்கள் வைக்கும் வழக்கம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தது. அதற்குப் பின் அவ்வழக்கம் மறைந்தது. தமிழ்நாட்டில் கிடைக்கின்ற எழுத்துடைய நடுகற்கள் கி.பி.5-ஆம் நூற்றாண்டிலிருந்து நடப்பட்டவை.
தொல்குடி வேளிர் வேந்தர் – ர.பூங்குன்றன்
₹320
Buy Link: https://heritager.in/product/tholkudi-velir-vendhar/