Description
சைவ சமய நூல்கள் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகப் போற்றப் பெறுகிறது திருமந்திரம். இருபத்தெட்டு ஆகமங்களில் முழுமுதற்கடவுள் சிவனிடம் உபதேசம் பெற்ற நந்திதேவர் மூலம் தாம் பெற்ற ஒன்பது ஆகமங்களின் பொருளைத் தமிழில் ஒன்பது தந்திரங்களாக திருமந்திரம் என்ற பெயரில் அருளினார் திருமூல நாயனார். வீடுபேறினை, வாழ்க்கைக்கான நன்னெறியை வலியுறுத்துகிறது திருமந்திரம். ஆன்மிகம் மட்டுமன்றி, உளவியல், மருத்துவம், அறம் என மனிதர்களைப் புனிதமடையச் செய்யும் கருத்துகளை மூவாயிரம் பாடல்களில் தந்தார் திருமூலர். அத்தனை பாடல்களுக்கும் எளிய தமிழில் உரை நல்கியுள்ளார் நூலாசிரியர். ‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ எனும் திருமந்திர பாடலுக்கு ‘உடம்பை நன்கு பேணிக்காத்தால் உயிரும் பாதுகாக்கப் பெற்றுப் பிறப்பு முதல் மெய்ஞான வளர்ச்சியையும் அஃது அடையும். அதனால் பின் பயனாகிய திருவடியுணர்வு பெற உயிர்க்கு இயலும்’- என விளக்குகிறார் நூலாசிரியர். நூலின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள பாடல் முதற்குறிப்பு அகரவரிசை திருமந்திரத்தை எளிதாக வாசிக்க பெரிதும் துணை செய்கிறது. அருமையான வடிவமைப்பு, தெளிவான அச்சு ஆகியவை நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன. இறைவன், உயிர், பாசம் எனும் முப்பொருளையும் உணர்த்துகிறது திருமந்திரம். அத்தகைய மேன்மை வாய்ந்த திருமந்திரத்தின் பொருட்பயனை அனுபவித்து உணர சிறந்த வழிகாட்டி இந்நூல்.