Description
தென் மாவட்ட மக்களால் கடவுளாக வழிபடப்படும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய நூல்களில் இந்த நூல் தனித்துவம் பெறுகிறது. அவர் மறைந்து அறுபது ஆண்டுகளாகியும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் என்கிறார் நூலாசிரியர். பார்வர்டு பிளாக் கட்சியின் தோற்றத்திலிருந்தாலும் இடதுசாரி சிந்தனையாளர், ஆன்மிகப் பேரொளி, கொடைவள்ளல், தேசியவாதி, தமிழ்ப் பற்றாளர்.. என்று அவரை வர்ணிக்கும் நூலாசிரியர், தேவர் தனது கடைசிக்காலத்தில், ‘மனிதனின் யோக்கியதையை நிர்ணயிப்பது பணம், பெண், அதிகாரத்தின் மீது ஒருவன் பூண்டுள்ள நிலைப்பாடு; அம்மூன்றுமே தனக்குத் துச்சம்’ என்று கூறியதை எடுத்தியம்புகிறார். தேவரின் வரலாற்றோடு, நேதாஜி, காமராஜர், சைதன்யர், சிவாஜி கணேசன் போன்றோருடனான அவரது நட்பு, மக்கள் பணி, தேர்தல் களம் போன்றவற்றை அதற்குரிய அரிய புகைப்படங்களோடு நூலாசிரியர் விவரித்துள்ளார். தேவர் குறித்து அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போன்றோர் குறிப்பிட்டதையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். சன்மார்க்கம், குற்றப் பரம்பரைச் சட்டம் போன்றவை குறித்த விளக்கமும் சிறப்பு. ‘விவேகமில்லாத வீரம் முரட்டுத்தனம் – வீரமில்லாத விவேகம் கோழைத்தனம்’ என்ற தேவரின் கோட்பாட்டை நூலாசிரியர் எடுத்துரைக்கிறார். அவருக்கு சொந்தமான 32 கிராமங்களின் பட்டியல் வியக்கவைக்கிறது. தேவர் ஜெயந்தி, குரு பூஜைகளையும் பதிவு செய்து நூலை நிறைவு செய்துள்ளார். ‘தேர்தல் களத்தில் வாக்கு கேட்டுச் சென்றதில்லை; தோல்வியையும் தழுவியதில்லை’ என்ற தேவரின் வாழ்க்கையைத் தமிழர்கள் அனைவரும் அறிவது அவசியமானது.