Description
ஆங்கிலம் வழியாகவே இந்திய மொழிகளில் நாவல்கள் பிறந்தன என்கிறார் நூலாசிரியர். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1878), பி.ஆர்.ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரம் (1895), அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் (1898) ஆகிய தொடக்கக் கால நாவல்களின் தலைப்புகள் காப்பியங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்கிறார் நூலாசிரியர். ‘பிரதாப முதலியார் சரித்திரம்’, ராஜாராணி கதைகள் பழங்கதைகள், நாட்டுப்புறக் கதைகள், வரலாற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு கதை பின்னப்பட்டுள்ளது. மொழி நடை மணிப்பிரவாளம். ‘கமலாம்பாள் சரித்திரம்’- தத்துவம் சார்ந்த நாவல். 26 வயது வரை மட்டுமே வாழ்ந்த ராஜம் அய்யரோ விவேகானந்தரால் தொடங்கப் பெற்ற ‘விழித்துகொண்ட இந்தியா’ என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக அமர்த்தப்பட்டார். அ.மாதவையா – நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரைகள் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். பத்மாவதி சரித்திரம் எழுதிய பிறகு முத்து மீனாட்சி, விஜய மார்த்தாண்டபுரம் நாவல்களும் எழுதி பாராட்டும் பெற்றார். ஆங்கிலத்திலும் நாவல்கள் எழுதினார். இதில் குறிப்பிடத்தகுந்தது ‘கிளாரிந்தா’. நடப்பியல் சார்ந்த நாவல் படைப்பதில் இவரே முன்னோடி. அ.மாதவையாவின் பத்மாவதி, கல்யாணி, சாவித்ரி, ராஜம் அய்யரின் கமலாம்பாள், முத்துசாமி அய்யர், வேதநாயகம் பிள்ளையின் கதாபாத்திரங்கள் ஞானம்பாள், சுந்தரத்தண்ணி ஆகியோர் இன்றளவும் வாசகர் மனதில் தங்கிய பாத்திரங்களே என்கிறார் நூலாசிரியர். கதை சொல்லல், பாத்திரங்கள், பின்புலம், வாய்மொழி மரபு, சமூகத் தாக்கம் பற்றி அறிய ஆய்வு மாணவர்களுக்கு அடிப்படை ஆதார நூல்களில் இதுவும் ஒன்றாக அமையத்தக்கது.






























