Description
இன்றைய இலங்கை எனக் குறிப்பிடப்பட்டாலும் இலங்கையின் ஒட்டுமொத்தமான வரலாற்றையும் நிகழ்வுகளையும் நிகழ்வுகள் தொடர்பான கருத்துகளையும் ஒருங்கே புதிய வகைப்பட்ட ஒரு நூலாகத் திரட்டித் தந்திருக்கிறார் ஆசிரியர். இலங்கை வரலாற்றையும் இலங்கை நூல் வெளியீடுகளையும் தெரிந்துகொள்வதற்காக இந்த நூலை உருவாக்கியிருப்பதாகக் குறிப்பிடும் அவர், ஏராளமான நூல்களிலிருந்து எண்ணற்ற மேற்கோள்களைத் தருகிறார். இலங்கைத் தலைநகர் கொழும்பு பற்றிய அறிமுகத்துக்கு, 1938-ஆம் ஆண்டு அமரர் கல்கி எழுதிய கட்டுரையை எடுத்துக்கொண்டு, கீழ்நாடுகளின் பலவித மனிதர்களையும் காணக் கூடிய மியூசியம் என்கிறார். விடுதலைப்புலிகள் தலைவரின் பிறப்பு பற்றிக் கூறும்போது, பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற பழ. நெடுமாறனின் நூலைப் பயன்படுத்துகிறார். இலங்கையுடன் தொடர்புடைய தமிழ்நாட்டு விஷயங்களையும் பதிவு செய்திருக்கும் ஆசிரியர், பெரியாரின் பேச்சைக் கேட்காத கொழும்பு என்று பெரியாருடைய பயணத்தையும் குறிப்பிட்டுள்ளார். ஈழத்து இலக்கியங்கள் மட்டுமின்றித் தமிழ்நாட்டில் எழுதப்பட்ட ஈழம் பற்றிய எண்ணற்ற எழுத்துகள், இலக்கியங்கள் பற்றியும் விரிவான அறிமுகங்களைப் படித்து முடிக்கும்போது, இனச் சண்டை காரணமாக எவ்வளவு செல்வங்களை நாம் இழந்துவிட்டிருக்கிறோம் என்ற ஆற்றாமையே மேலிடுகிறது. இந்த ஒரு நூலைப் படிப்பதன் மூலம் இலங்கை தொடர்பான எண்ணற்ற நூல்களின் அறிமுகம் கிடைக்கிறது. இலங்கை பற்றிய பொதுவான பார்வையும் கிடைக்கப் பெறுகிறது.