தமிழ்நாட்டின் பரந்த வெளி நெடுகிலும், அகத்திய முனிவர் சார்ந்த பண்பாட்டு எச்சங்களைப் போல் சுயநலப் போக்கிற்காக அதிகம் பயன்படுத்திக் கொள்ளப்பட்ட மரபு வேறொன்றில்லை. ஆரியர்கள் வரைந்து வைத்த சரித்திரக் குறிப்பில் புராண ரீதியாகவும் அரை வரலாற்றுத் தன்மையோடும் வரலாற்றுக் கதாப்பாத்திரப் பிம்பத்திலும் அறியப்படுபவர்களுள் முதன்மையானவர், அகத்தியர்.
பெரும் புகழ்பெற்ற அகத்தியரைச் சுற்றி பல்விதத் தொன்மங்களும் பழங்கதைகளும் உழன்று வருவது ஆச்சரியமல்ல. அவர் இப்பூமிக்கு வருகைத் தந்ததாகச் சொல்வதிலும், விண்மீன்களில் ஏற்றம் கொண்டவராகக் கூறப்படுவதிலும், நம் நம்பிக்கைக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் உண்டு.
மித்திர தேவரின் விந்தினைப் பானையில் பத்திரப்படுத்தி பாதுகாத்து வைத்ததிலிருந்து அகத்தியர் தோன்றினார் எனும் கதைப்படி கலசஜா, கலசிசுதா, கும்பயோனி, கம்பசம்பவ, கடோத்பவ (பானையில் பிறந்தவர்) முதலான பெயர்களில் அகத்தியர் அழைக்கப்படுகிறார். முன்பொரு காலத்தில் மித்திர தேவருக்கும் வருண தேவருக்கும் தேவலோக அரம்பை ஊர்வசி மீது மையல் வந்தது. இருவரும் காமநோய் மிகுந்திருந்ததால், இனப்பெருக்க வளம் பொருந்திய விந்து தானறியாது வெளியேறியது. அதில் முதலாமவர் மண்பானையிலும், இரண்டாமவர் கடலிலும் அதைப் பத்திரப்படுத்தினர் என்பதாகக் கதைச் செல்கிறது. சில காலம் சென்றதும் மண் பானையிலிருந்து அகத்திய முனிவரும்; கடலிலிருந்து சப்த ரிஷிகளுள் மதிப்பிற்குரியவரான வசிஷ்டரும் தோன்றினர். இத்தெய்வீகப் பிறப்பினால் மைத்ரிய-வருணி என்றும் ஊர்வஸ்ய என்றும் அகத்தியருக்குப் பெயர் உண்டு.
அகத்திய முனிவர் சுற்றி எழுந்த தொன்மங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: தொடக்கக் காலத்தவை மற்றும் பிற்காலத்தவை. அவர் ஆரியவர்த்தத்திலிருந்து தென்னகம் நோக்கி வந்ததாகச் சொல்லப்படும் கதையிலிருந்து, அகத்தியர் சுற்றிப் பின்னப்பட்டுள்ள கதைகளை ஆரிய, திராவிட தொன்மங்களாகப் பிரிக்க வசதி உள்ளது. ஒரு வரலாற்றாய்வாளராக, அவ்விரண்டு புள்ளிகளையும் பிரித்தறிந்து பார்க்கும் முகாந்திரங்கள் மிகவும் குறைவுதான். இரண்டுமே ஒருபோகுடைய பாதையைத் தேர்வு செய்து, ஒன்றுபோலவே வியக்கத்தக்க கதைகளை அமைத்துள்ளன.
வடக்கத்திய தொன்மத்தில் உள்ள இமைய மலைக்குப் பதிலாக தென்னகத் தொன்மத்தில் பொதிகை மலை இடம்பெற்றுள்ளது; ரிக் வேதத்தில் எண்ணற்ற மந்திரங்களும், மருத்துவக் குறிப்புகளும் அகத்தியரின் சம்ஸ்கிருத ஆக்கங்களாக குறிப்பிடுவதற்குப் பதிலீடாக, தமிழ்ச் சித்தர் மரபில் அவரின் ஆக்கங்களும், மருத்துவ நூல்களும் முன்வைக்கப்படுகின்றன. சிவ பெருமானின் அனுமதியோடு கங்கை நதியைக் கொண்டு வந்ததன் (பார்க்க: காசி காண்டம்) கதைக்கு மாற்றாக தெற்கில் சிவ அனுமதியோடு தாமிரபரணி நதிநீர் கொண்டுவந்த செய்தி சொல்லப்படுகிறது. மேலும் காவிரி நீருக்காக கணேச கடவுளுடன் அகத்தியர் பேரம்பேசிய கதையொன்று உண்டு; வடக்கில் வாரணாசி என்றால், தெற்கில் பாதாமி என்று அவர் இருப்பிடம் மாற்றப்பட்டது.
அத்தகு பாதாமியை தட்சிண காசி என்றும் அழைப்பர்; விதர்ப்ப நாட்டு அரசன் மகள் லோபாமுத்திரையை மணந்ததாக வடநாட்டில் கதையுண்டு. அதற்கு மாற்றாக கவரே மன்னனின் மகள் காவிரியை அகத்தியரின் மனைவியாக தெற்கில் வழங்கினர். வடநாட்டில் தன் மந்திர சக்திகளைப் பயன்படுத்தி அதிக சாபம் விடும் நபராக அறியப்படும் அகத்தியர், தெற்கிலும் இதைப் பின்பற்றியிருக்கிறார். தன் மாணவர் தொல்காப்பியர்மீது அவர் சாபம் விடும் இடத்தில் இதை உறுதி செய்யலாம். தொலைதூர தெற்கு தேசம் சென்றபோதிலும், குறுமுனி – தன் குள்ள உடல்வாகினால் இங்ஙனம் அழைக்கப்படுகிறார் – தன் சுபாவத்தில் இருந்து மாறுபடாமல் இருந்துள்ளார்.
இக்கதைகளின் ஒருபோகுநிலையை எண்ணிப் பார்க்கையில், தென்னகக் தொன்மங்கள் வடக்கின் எதிரொலியாக உள்ளமை தெளிவாகிறது. ஒன்று, இத்தொன்மங்கள் தென்னகத்தின் தூய ஆரியப் பின்னணியில் உருவானவையாக இருக்கலாம்.
புவியியல் ரீதியாக அகத்தியரின் தென்னாட்டு தீபகற்பப் பயணத்தை மூன்று அடுக்குகளாகப் பிரிக்கலாம். அவர் தென்னாட்டில் முதன்முதலாக அகத்திய ஆசிரமத்தில் தங்கினார். தற்போதைய நாசிக் நகரத்தில் அமைந்துள்ள அவ்வாசிரமம், பழங்காலத்தில் தண்டகாரண்ய வனத்தின் வடக்கு மூலையில் உள்ள பஞ்சவடி எனும் பகுதியில் இருந்தது. அகத்தியர், விதர்ப்ப நாட்டு அரசன் மகள் லோபாமுத்திரையை மணந்ததும், இராமனை முதன்முதலாகச் சந்தித்ததும் இங்குதான்.
அவரின் அடுத்த உறைவிடம், பம்பாய் மாகாணத்தின் கலாத்கி மாவட்டத்தில் உள்ள பாதாமியில் இருந்து மூன்று மைல் தூரம் கிழக்கு நோக்கியுள்ள மலக்குட்டாவில் அமைந்தது. மேற்சொன்ன பாதாமி (பழங்கால வாதாபிபுரம்) நகரம்தான் தட்சிண காசி என்று அழைப்படும் ஊர். அதுதான் அகத்தியர் பயணத்தின் இரண்டாவது அடுக்கு. இரண்டாவது உறைவிடம், முந்தைய நாசிக் நகரிலிருந்து 300 மைல் தூரம் தெற்கு நோக்கி நகர்ந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். அகத்தியர் வாதாபியை உண்டதும், இல்வலாவை (வில்வலா என்றும் அழைப்பர்) அழித்ததும் இந்தக் காலக்கட்டமாக இருக்கலாம்.
மூன்றாம் அடுக்குக் கதைகள் பொதிகையைச் சுற்றி வலம் வருகின்றன. இவ்விடம் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தொலைதூரத் தெற்கில் அமைந்துள்ள இப்பொதிகை மலை, பாண்டி நாட்டு எல்லைக்குள் வீற்றிருக்கிறது. அக்கால தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் வீற்றிருந்த அகத்தியர், முதல் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்ததோடு அதற்குத் தலைமையும் தாங்கினார். விரிவான தமிழ் இலக்கண நூல் இயற்றியதோடு, சிற்சில சித்து நூல்களும் மருத்துவ நூல்களும் தந்திரங்களும் இயற்றினார்.
எனினும் அகத்தியர் தங்கியிருந்த நாசிக் ஆசிரமத்திலிருந்து சுமார் 800 மைல் தூரம் தள்ளியுள்ள தென்கோடி பகுதியோடு அவரின் தொன்மக் கதைகள் முடிவுபெறவில்லை. அவர் கடல் கடந்து சென்றதாக, இன்னும் இரண்டு அடுக்குக் கதைகள் கூடுகின்றன. நான்காவதாக, கிழக்கிலுள்ள இந்தோனேசியத் தீவில் தரையிரங்கினார். அங்கு அவர் வருணத்வீபம் (போர்னியோ), குசத்வீபம், வராஹத்வீபம் முதலான பகுதிகளைப் பார்வையிட்டதாகத் தெரிகிறது. மலையத்வீபத்தில் உள்ள மஹா மலாய மலையில் தங்கியதாகச் சொல்கின்றனர்.
இறுதியில் தரைவழியாகப் பயணப்பட்டு சயாம் மற்றும் கம்போடியா வந்து அடைந்தார். கிழக்கு நோக்கிய அவரின் தீராத நெடும்பயணம், இங்குவந்து சேர்ந்த பிறகு உள்ளூர் அழகியான யசோமதியை திருமணம் செய்ததோடு முற்றுப்பெற்றது. யசோமதியின் மூலம் அரசுப் பரம்பரையில் அகத்தியர் வாரிசு தரித்தார். யசோவர்மன் அப்பரம்பரையில் புகழ்பெற்ற மன்னனாகத் திகழ்ந்தான்.
இந்தியாவில் அகத்தியரைப் பின்பற்றிக்கொண்டிருக்கும் பலரும், அவரின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றி அதிகம் அறிந்திலர்.
(முத்தாய்ப்பாக,)
அளவிடற்கரிய வளங்களைக் கொண்ட ஒரு புதிய பிரதேசத்தை, அகத்தியர் தம் இனக்குழுவில் முதல் ஆளாகக் கண்டடைந்ததால், தன் சமூகத்தில் அவர் ஓர் உபகாரி போல மதிக்கப்பட வேண்டும். அதனால் அவர் மீது சராசரிக்கும் அதிகமான மரியாதையும் வழிபாடும் செய்யப்படுகிறது. அகத்தியருக்கு ஏன் இத்தனை மதிப்புமிக்க இடம் வழங்கப்படுகிறது என்பதை ஆரியக் கோணத்தில் நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் திராவிடக் கோணத்தில் இதற்குப் பதில் தேட விளையும்போதுதான் உண்மையான சிக்கல் தொடங்கும்.
Reviews
There are no reviews yet.