மகாகவி பாரதியாரின் “முப்பெரும் பாடல்கள்’ என்று அறியப்படுவதில் 23 பாடல்கள் கொண்ட கண்ணன் பாட்டு தொகுப்பும் ஒன்று. முற்றிலும் கவிரசம் ததும்புவதாலேயே அவரது படைப்புகளில் முக்கியமானவற்றில் ஒன்றாக இது இடம் பெறுகிறது. பாரத தத்துவ, இலக்கிய இயலில் தோய்ந்த கவிச் சிந்தனைகளை கண்ணன்- கண்ணம்மா என்கிற பாவனையில் வடித்துள்ளார் மகாகவி. இதிகாச கண்ணனைப் போலவே பாரதியாரின் கண்ணனுக்கும் அரசன், காதலி, ஆசான், சேவகன் என பல தோற்றங்கள்.
அபத்தக் கோட்பாட்டின் அடிப்படையில் கண்ணன் பாடல்களை ஆராய முயற்சி செய்திருக்கிறார் நூலாசிரியர். “அபத்தம்’ என்பதே 19-ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் ஒரு கிளைக் கோட்பாடாகத் தோன்றி 20-ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் வரை ஒரு கலக்கு கலக்கி, பிறகு புதுசு புதுசாகக் கிளைத்து கடந்து சென்றுவிட்டது.
மானுடப் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே நீளும் வாழ்வின் பொருள் என்ன? வாழ்தல் என்பதே அபத்தமான ஒரு நிலைதானோ என்ற கேள்வி மானுட மனதை ஆதிகாலம் தொட்டே உலுக்கி வந்திருக்கிறது. இந்தக் கேள்விக்கு அர்த்தமுள்ள பதிலைத் தேடி ஒவ்வொருவரும் ஓர் அர்த்தம் கற்பித்துக் கொள்ள முயற்சியை மேற்கொள்கின்றனர். இந்த சிந்தனையில் பிறந்த தத்துவங்கள், மதங்கள் இன்றளவும் நீண்டுள்ளன. எந்த ஒரு குறிப்பிட்ட “அர்த்தமும்’ இறுதியான அர்த்தம் ஆகிவிடுவதில்லை. காலந்தோறும் தலைமுறைகள்தோறும் அர்த்தங்கள் மாறுகின்றன.
அபத்தத்தின் ஒரு தீவிர எல்லை, தன்னையும் அனைத்தையும் நிராகரிப்பது. பாரதியார் அப்படிச் செய்பவர் அல்ல. பாரதியின் கவி மனம் அவரை உலக குடிமகனாக்கியபோதிலும் அவர் கனவிலும் வாழ்வின் அபத்தத்தில் சிக்குண்டு சுருண்டுவிடவில்லை. அவர் ஊக்கத்தையும் உழைப்பையும் வலியுறுத்தியவர். இடையில் காதல், பக்தி, வீரம், தேசப்பற்றை அவர் விடவில்லை.
பகுத்தறிவுக்குப் புரியாத புதிராக, எந்த விதமான அர்த்தங்களுக்கும் அடங்காததாக அபத்தக் கருத்தாக்க கூறுகளைக் கொண்டதாக மனித வாழ்க்கை இயங்குவதை கவித்துமான மொழியில் பாரதியார் வெளிப்படுத்தியுள்ளதாக ஆசிரியர் தனது ஆய்வை நிறைவு செய்கிறார்.
பாரதியைப் பல நோக்கில் பலர் அணுகியுள்ளனர். பேராசிரியர் பஞ்சாங்கத்தின் நோக்கு புதுமையானது.
Reviews
There are no reviews yet.