“அருள்மொழியா? அருண்மொழியா, அருமொழியா? – மாமன்னன் இராசராசனின் உண்மையான பெயர் என்ன?”
அருள்மொழி வர்மன், அருண்மொழி வர்மன் என்ற பெயர்களே வரலாற்றிலேயே இல்லை.
கல்கியின் கற்பனையில் உதித்தது தான் “அருள்மொழி வர்மன்” என்கிற கற்பனை கதப்பாதிரத்தின் பெயர்.
பிற்காலச் சோழர் மரபை ஒரு வலிமைமிக்கப் பேரரசாக உயர்த்திய பெருமைக்குரியவர் மாமன்னன் இராசராசன் (கி.பி. 985-1014). சுந்தரச் சோழருக்கும் வானவன் மாதேவிக்கும் இளைய மகனாகப் பிறந்த இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் “அருமொழி தேவன்” என்பதாகும்.

இராசராசனுக்கு மும்முடிச் சோழன், சிவபாதசேகரன், நித்த விநோதன் எனப் பல பட்டப்பெயர்கள் அவர் காலத்திலும், பிற்காலத்திலும் வழங்கப்பட்டு வந்தன. ஆயினும், இவையெல்லாவற்றையும் விட “அருமொழி தேவன்” என்ற பெயரே மக்களால் பெரிதும் விரும்பப்பட்டும், கல்வெட்டுகளில் மிகுதியாகப் பயின்று வந்தும் உள்ளது.
கல்வெட்டுகள் காட்டும் சான்றுகள்
இம்மன்னன் மீது கொண்ட பற்றினால், அக்கால மக்கள் தங்கள் குழந்தைகளுக்கும், ஊர்களுக்கும், நிலங்களுக்கும், ஏன் அளவைக் கருவிகளுக்கும் கூட “அருமொழி” என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்துள்ளனர். இதற்குச் சான்றாக நூற்றுக்கணக்கான கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் கீழே காண்போம்:
நாடுகளும் ஊர்களும்: அருமொழி தேவ வளநாடு (திருச்செங்காட்டங்குடி), அருமொழிமங்கலம் (திருச்செங்காட்டங்குடி), அருமொழி தேவபுரம் (திருவரங்குளம்), அருமொழி தேவச்சேரி (பிரமதேசம்).
நீர்நிலைகள்: அருமொழி தேவ வாய்க்கால் (சிங்காரத்தோப்பு), அருமொழிப் பேரேரி (எறும்பூர்), அருமொழிதேவப் பேராற்றங்கரை (திருவெறும்பூர்).
வழிபாட்டுத் தலங்கள்: அருமொழி ஈஸ்வரம் (சிங்காரத்தோப்பு).
அளவைகள்: அருமொழிதேவன் மரக்கால் (பிரமதேசம்), அருமொழி தேவ உழக்கு (திருவாலங்காடு), அருமொழி நாழி (காஞ்சிபுரம்), அருமொழி தேவவதி (திருவாமாத்தூர்).
வீதிகள்: அருமொழிப் பெருந்தெரு (காஞ்சிபுரம்).
இவ்வாறு நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் “அருமொழி” என்ற சொல்லே ஆளப்பட்டுள்ளது. எங்குமே “அருள்மொழி” என்றோ “அருண்மொழி” என்றோ குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
தனிநபர் பெயர்களில் ‘அருமொழி’
ஊர்ப்பெயர்கள் மட்டுமின்றி, பல தனிநபர்களின் பெயர்களிலும் இப்பெயர் இணைந்து வந்துள்ளதை லால்குடி, திருவரங்கம், கீழூர், கோனேரி ராசபுரம் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.
எ.கா: பெரும்பழவூர் தேவன் அருமொழி, அருமொழி ராசாதிராச வாணாதிராசன், அருமொழிதேவ மிலாடுடையார்.
குறிப்பாக, அரச குடும்பத்தினரே இப்பெயரை விரும்பிச் சூட்டியுள்ளனர்:
முதலாம் இராசேந்திரனின் மகள் பெயர்: பிரானார் அருமொழி நங்கையார்.
வீரராசேந்திரனின் மனைவியருள் ஒருவர் பெயர்: அருமொழி நங்கையார்.
வரலாற்று ஆய்வும் அறிஞர்களின் கருத்துகளும்
மேற்கண்ட தரவுகளின்படி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது “அருமொழி” அல்லது “அருமொழி தேவன்” என்ற பெயர்களே. ஆனால், பிற்காலக் கதை, நாடகம், வரலாற்று நாவல்கள் மற்றும் திரைப்படங்களில் “அருள்மொழிவர்மன்” என்று தவறாகச் சித்தரிக்கப்படுகிறது.
இந்த வரலாற்று உண்மையை அன்றே சரியாகப் புரிந்துகொண்ட அறிஞர்கள் சிலர் உள்ளனர்:
இராசராசனின் கல்வெட்டுகளை முதன்முதலில் படித்து வெளியிட்ட கல்வெட்டு ஆய்வாளர் டாக்டர் உல்சு (Dr. Hultzsch), ‘அருமொழி’ என்றே குறிப்பிடுகிறார்.
அவரது உதவியாளர் வி. வெங்கையா மற்றும் தொல்லியல் முனைவர் ஏ. சுப்பராயலு போன்றோரும் இதையே உறுதிப்படுத்தியுள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி (Lexicon), “அருமொழி என்பது முதலாம் இராசராசனின் இயற்பெயர்” என்று மிகத் தெளிவாகக் கூறுகிறது. மேலும், தஞ்சை பெருவுடையார் கோயில் பிரதான விநாயகர் பெயர் “அருமொழி விநாயகர்” என்றும், ‘அரு’ என்பதற்கு ‘அருமை’ என்று பொருளும் கூறுகிறது. இதற்கு முக்கியக் காரணம் தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை ஆவார்.
வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார், ‘அருமொழி’ என்பதை ஏற்றுக்கொண்டாலும், அதனுடன் ‘வர்மன்’ என்பதைச் சேர்த்து “அருமொழி வர்மன்” என்று குறிப்பிடுகிறார். ஆனால், சோழர் கல்வெட்டுகளிலோ, செப்பேடுகளிலோ எங்கும் ‘வர்மன்’ என்ற சொல் இல்லை. அச்சொல் பல்லவ மரபுக்கு (எ.கா: நந்திவர்மன்) உரியதே தவிர சோழர் மரபுக்கு உரியதல்ல.
உண்மை நிலையை அறிய சுமார் இரண்டாயிரம் சோழர் காலக் கல்வெட்டுகள் மறுஆய்வு செய்யப்பட்டதில், ஒரு இடத்தில் கூட “அருள்மொழி” என்ற சொல் இல்லை; எங்கும் “அருமொழி” மட்டுமே உள்ளது.
இராசராசன் என்றால் ‘அருமையான மொழி பேசுபவன்’ என்பதே பொருள். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியைக் கூடப் பார்க்காமல், ஒரு மாபெரும் வரலாற்று நாயகனின் பெயரைத் தொடர்ந்து தவறாக எழுதுவதும், அழைப்பதும் பெரும்பிழையாகும்.
இந்த வரலாற்று உண்மையை உணர்ந்து, இனியாவது “அருமொழி தேவன்” என்று திருத்தி அழைப்பதே அம் மாமன்னனுக்கு நாம் செய்யும் சிறப்பாகும் என்கிறார் மறைந்த கல்வெட்டு அறிஞர் புலவர் இராசு.
அருமொழி – தூய தமிழ்ச் சொல், தேவன் = சமஸ்கிருத சொல், மதுராந்தகன் = மதுரையில் காலன் (மதுரையை அழித்தவன்) தமிழ் வடமொழி கலப்பு சொல்..