ஜைன சமயம் மன்னர்கள், வணிகர்கள், உழவர்களிடையே நன்கு பரவியிருந்தது. வைதிக சநாதன சமயமானது, தமிழர்களிடையே வழக்கிலிருந்த புராதன சமயத்துடன் சமரசம் செய்துகொண்டு ஜைன சமயத்தை வீழ்த்த முயன்றது.தமிழரின் புராதனத் தெய்வங்கள், வைதிக சநாதன சமயத்தினரால் உறவு கற்பித்து ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், புதிய ஐதீகங்களும் உருவாக்கப்பட்டன. அதற்கான கட்டுக்கதைகளும் மக்களிடையே பரப்பப் பட்டன. தமிழரின் குறிஞ்சிக் கடவுளான முருகன், சுப்பிரமணியனாக்கப் பட்டதுடன் ஏற்கெனவே குறக்குலத்து வள்ளியை மனைவியாகக்கொண்ட முருகனுக்குத் தெய்வானை என்ற வைதிகப் பார்ப்பனப் பெண் மணம் முடித்து வைக்கப்பட்டாள்.
‘சிசனத்தேவர்’ என்று இழிவாகக் கருதப் பட்ட சிவனை ஏற்றுக்கொண்டு அவருக்கு கொற்றவையைப் பார்வதி என்ற பெயரில் மனைவியாக்கினர். இவை போன்ற புராணப் புனைவுகளும் ஐதீகங்களும் தொடர்ந்து கற்பிக்கப்பட்டு, தமிழரின் சமய வாழ்க்கையில் வைதிக சநாதன சமயம் மெல்ல நுழைந்தது. ஜைன சமயத்தில் வீடு பேறடைய துறவியாகக் கடும் நெறியில் ஒழுகிட வேண்டும். பெண்களுக்கு இப்பிறவியில் வீடு பேறு கிடையாது. துறவு நெறி வலியுறுத்தப்பட்டது. ஆனால், பக்தி இயக்கத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து வீடுபேறு அடையலாம் என்பது முன்னிறுத்தப்பட்டது. சமயப் பூசல்கள் வலுவடைந்த நிலையில் ஜைன சமயமானது கருத்தியல்ரிதியில் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
இன்னொரு நிலையில் அதிகாரத்தின் அழுத்தமும் வன்முறையும் ஜைன சமயம் நசுக்கப்பட்டமைக்கான அடிப்படைக் காரணங்களாக உள்ளன. ஜைனர்களைக் கழுவேற்றுதல், யானைகளால் மிதிப்பித்தல், வீட்டைத் தீயிட்டுக் கொளுத்துதல், ஊரைவிட்டுத் துரத்துதல், நிலபுலன்களைக் கவர்தல் முதலிய கொடுமைகளும் கலகங்களும் தொடர்ந்து வைதிக சநாதன சமயத்தவரால் செய்யப்பட்டன. அரசு ஆதரவின் கீழ் வைதிக சநாதன சமயம், சமணர்களைக் கொன்றொழித்தது. ”போம் பழியெல்லாம் அமணர் தலை யோட” என்னும் பழமொழியை விளக்க திருவாய்மொழி விளக்க உரைகாரர் எழுதும் கதை, ஜைனர்களின் கையறுநிலையை விளக்குவதாக உள்ளது.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் எனப்படும் வைணவரின் பாடல், அக்காலத்தில் ஜைனர்மீது வைணவ சமயத்தவர் கொண்டிருந்த வெறுப்பைக் காட்டுகிறது. அப்பாடல் பின்வருமாறு:
“வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரி யனகள்பேசில் போவதே நோயதாகி குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகருளானே!”திருஞானசம்பந்தர் மதுரையில் எண்ணாயிரம் ஜைனர்களைக் கழுவேற்றினார் என்பதைச் சைவ சமய நூல்களான பெரியபுராணம். திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி போன்றன பெருமையாகக் குறிப்பிடுகின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்தாம் நாள் விழாவாக ஜைனர்களைக் கழுவேற்றும் நிகழ்ச்சி இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள திருவோத்தூரில் சைவர் வளர்த்த ஆண் பனையைத் திருஞானசம்பந்தர் பதிகம் பாடி பெண் பனை மரமாக்கினார் என்றும், அதனால் ஜைனர்கள் ஊரைவிட்டு ஒடி விட்டனர் என்றும் பெரிய புராணம் கூறுகிறது. இதுபோன்ற நடை முறை வாழ்க்கைக்கு ஒவ்வாத கட்டுக்கதைகளை ஐதீகமாக்கி மக்களிடையே பரப்பியதன் மூலமாகவும் ஜைன சமயம் தமிழகத்தில் வீழ்ச்சியடைந்தது.
ஜைன சமயப் பதிவுகள்: சமய வரலாறு என்பது குருதியில் தோய்ந்தது என்பதற்கு ஜைன சமய வரலாறும் விதிவிலக்கு அல்ல. தவத்தினாலும் அறநெறியில் வாழ்வதன் மூலமாகவும் மனிதனே இறைநிலைக்கு உயர முடியுமென்று போதித்த ஜைன சமயம் வீழ்த்தப் பட்டாலும் இன்றளவும் தமிழகமெங்கும் ஜைனப் பதிவுகள் காணப் படுகின்றன.
ஜைனக் கோயில்கள், தீர்த்தங்கரர்களின் உருவச் சிலைகள், கற்படுக்கைகள், குகைகள், இலக்கிய இலக்கண நூல்கள், கல்வெட்டுகள் போன்றவற்றின் மூலமாக ஜைன சமய எச்சங்களை இன்றும் காணலாம். அவை, கடந்த காலத் தமிழர்களின் சமய வரலாற்றின் அழுத்தமான பதிவுகளாக விளங்குகின்றன. இவைதவிர தமிழகத்தில் ஜைன சமய மடமும், தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட ஜைனர்கள் வாழ்கின்றனர் என்பதும் முக்கியமான தகவல்கள். ஜைனர்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், திருவிழாக்கள், இன்றைய இந்து சமயத்தில் வெவ்வேறு நிலைகளில் ஆழமாக ஊடுருவியுள்ளன.
புலால் உண்ணாமை : ஆரியப் பார்ப்பனர், ரிஷிகளுக்கு விருந்திடும் போது கன்றுக்குட்டி, மான், உடும்பு போன்ற விலங்குகளின் இறைச்சியைச் சமைத்து வழங்கினர். பண்டைத் தமிழரும் விலங்குகளை வேட்டையாடி உண்டனர். ஜைனர்களின் புலால் உண்ணாமைக் கொள்கையின் தாக்கம் காரணமாகவே வைதிக சநாதன சமயப் பார்ப்பனரும் சைவரும் புலால் உண்ணாமையைப் பின்பற்றினர்.ஜைன சமயச் சின்னங்கள்: கால வெள்ளத்தினாலும் திட்டமிட்ட சதிகளினாலும் ஜைன சமயச் சின்னங்கள் அழிந்துபட்டாலும் இன்றும் தமிழகமெங்கும் ஜைனர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.
செங்கற்பட்டு மாவட்டம் ஆநந்தமங்கலம் என்ற ஊரில் கற்பாறையில் ஜைனத் திருவுருவங்கள் உள்ளன. திருப்பருத்திக்குன்றம் என்ற ஊரில், கோயில் கொண்டுள்ள அருகக் கடவுளுக்கு திரைலோத்திய நாதர் என்ற பெயர் உண்டு. மாகறல் என்ற ஊரிலுள்ள ரிஷபதேவர் கோயிலில் ஜைன உருவங்கள் உள்ளன.
வட ஆற்காடு மாவட்டத்தில் நம்பாக்கம், காவனூர், குகை நல்லூர். பெருங்கச்சி, சேவூர், திருமலை, திருவோத்தூர், புனதாகை, திருப்பனம்பூர், வள்ளிமலை, பஞ்சபாண்டவ மலை,பொன்னூர், திறக்கோல், வெண்குன்றம், தெள்ளாறு இன்னும் பல ஊர்களில் ஜைனர்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன.
மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், திருச்சி,தென் ஆற்காடு, குமரி, நெல்லை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான ஜைனச் சின்னங்கள் காணப்படுகின்றன. ஜைனர்கள் பற்றிய கல்வெட்டுகளும் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவை குறித்து விளக்கினால் பல்கிப் பெருகும். எனவே, வடஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஜைனர்கள் பற்றிய தகவல்கள் சிறிய குறிப்புகளாக அறிமுகநிலையில் இங்கு தரப்பட்டுள்ளன.