தெலுங்கு (சோழ) குல காலன்
ராஜராஜச் சோழன் படத்தில் இந்த காட்சி வரும், கீழைச் சாளுக்கியரான விமலாதித்தனையும் (முத்துராமன்) எதிரிகளிடமிருந்து காப்பாற்றி மீண்டும் சோழர் ஆட்சியின் கீழ் ஆட்சி அவருக்கு வழங்கப்பட்டிருக்கும். அந்த எதிரி யார் என்பதை காண்போம்.
கீழைச் சாளுக்கியரின் கடைசி சுதந்திர அரசன் தானார்ணவ ஆவான். இவன் ஆட்சி ஏறி மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த மன்னன், தனது ஆட்சிக்காலம் முழுவதும் எதிரிகளுடன், குறிப்பாக தெலுங்கு சோழனான ஜடா சோட பீமன் என்பவனுடன் தொடர்ந்து போரிட வேண்டியிருந்தது. இந்த ஜடா சோட பீமன், இன்றைய கர்நூல் மாவட்டத்திலுள்ள பெடகல்லு பகுதியைச் சேர்ந்த தெலுங்குச் சோழ மன்னவன். இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதற்கான சரியான காரணங்கள் முழுமையாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்த தெலுங்குச் சோழ பீமன், ராஜ-பீமன் அல்லது சாளுக்கிய இரண்டாம் பீமன் என்பவரின் பேரன் என்றும், சாளுக்கிய இரண்டாம் அம்மா வின் மைத்துனன் (மனைவியின் சகோதரன்) என்றும் கூறப்படுகிறது.
தனது மைத்துனன் இரண்டாம் அம்மா கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே, ஜட சோட பீமன் கி.பி. 973-ல் தானார்ணவனைக் போரில் தோற்கடித்துக் கொன்றான். இந்த நிகழ்வு, கிழக்கு சாளுக்கியர்களின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
ஏனெனில், கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், குப்ஜ விஷ்ணுவர்த்தனன் என்பவரால் வேங்கியில் நிறுவப்பட்ட சாளுக்கியப் பேரரசு, முதன்முறையாகத் தனது ஆட்சியை முழுமையாக இழந்தது. இதற்கு முன் நடந்த உள்நாட்டுப் போர்கள், அயல்நாட்டுப் படையெடுப்புகள் போன்றவற்றால், சாளுக்கியர்களின் ஆட்சி தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அரியணையில் எப்போதும் ஒரு சாளுக்கிய மன்னரே இருந்தார். ஆனால், தானார்ணவனின் மரணத்துக்குப் பிறகு, நிலைமை மாறியது.
அவரது மகன்கள் நாடு கடத்தப்பட்டனர். இதன் காரணமாக, கீழைச் சாளுக்கியப் பேரரசு வேங்கிப் பகுதியில் ஒரு முடிவுக்கு வந்தது. இது தான் படத்தில் வரும் கதைக்கு பின் உள்ள வரலாறு. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட தெலுங்கு சோழக் குடும்பத்தைச் சேர்ந்த ஜடா சோட பீமன், சாளுக்கியர்களின் அரியணையைக் கைப்பற்றி, தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டான்.
ஜடா சோட பீமனின் ஆட்சி (கி.பி. 973 – 1000)
ஜடா சோட பீமன் கி.பி. 973 முதல் 1000 வரை சுமார் இருபத்து ஏழு ஆண்டுகள் வேங்கியை ஆட்சி செய்தான். பிற்கால கிழக்கு சாளுக்கியக் கல்வெட்டுகளில் இந்த காலகட்டம், ‘இடைக்கால ஆட்சி’ என்று குறிப்பிடப்படுகிறது.
இவனது ஆட்சி குறித்த ஒரே ஒரு கல்வெட்டு மட்டுமே தற்போது கிடைத்துள்ளது. அதில், பீமன் தன்னைப் புகழ்ந்து, குனக விஜயாதித்தன் என்பவனுடன் ஒப்பிட்டுக் கொள்கிறான். இதிலிருந்து, குனக விஜயாதித்தனிடமிருந்து தனது வம்சாவழியைப் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கலாம். இந்த ஒப்பீடு குறிப்பிடத்தக்கது. ஏனெனில், குனக விஜயாதித்தனைப் போலவே, பீமனும் பல எதிரிகளுடன் போரிட்டு, பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்தான்.
பீமன், அங்க, கலிங்க, வைதும்ப மற்றும் திராவிட (தொண்டை மண்டலம்) நாடுகளின் மன்னர்களைத் தோற்கடித்தான். தனது வலிமையான காலத்தில், மகேந்திரகிரி முதல் காஞ்சிபுரம் வரையிலும், வங்காள விரிகுடா முதல் கர்நாடக எல்லை வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.
சோழப் பேரரசர் முதலாம் இராஜராஜனின் படையெடுப்பு
கி.பி. 1001-ல் ஜட சோட பீமன் தெற்கில் உள்ள தொண்டைமண்டலத்தின் மீது படையெடுத்தான். இந்த படையெடுப்புக்கான சரியான காரணங்கள் கல்வெட்டுகளில் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. எனினும், அக்கால சோழர் மற்றும் கிழக்கு சாளுக்கியர்களின் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும்போது, சில காரணங்கள் தெளிவாகின்றன.
சோழ மன்னன் முதலாம் இராஜராஜன், தனது பேரரசை விரிவுபடுத்தும் நோக்கத்தில், தானார்ணவனின் மகன்களுக்கு ஆதரவு அளித்தான். இளைய மகனான விமலாதித்தனுக்குத் தனது மகள் குந்தவையை மணம் முடித்துத் தந்தான். மூத்த மகனான சக்திவர்மன் I-ஐ மீண்டும் அவனது அரியணையில் அமர்த்தும் நோக்கில், கி.பி. 999-1000-ல் வேங்கியின் மீது படையெடுத்தான்.
முதலாம் இராஜராஜனின் 14-ஆம் ஆட்சியாண்டு (கி.பி. 999-1000) கல்வெட்டுகள், அவன் வேங்கியை வென்றதாகக் குறிப்பிட்டாலும், உண்மையில் அவனால் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை. ஏனெனில், ஜடா சோட பீமன் வலிமை வாய்ந்த எதிரிகளுடன் கூட்டணி அமைத்திருந்தான். சோழக் கல்வெட்டுகள் குறிப்பிடுவதுபோல, அவனை அவ்வளவு எளிதாகத் தோற்கடிக்க முடியவில்லை.
இதன் காரணமாக, முதலாம் சக்திவர்மனின் ஆட்சிக்காலக் கல்வெட்டுகளில், சோழர்களின் உதவியைப் பற்றி எதுவும் கூறாமல், தானே தனது வீரத்தால் வெற்றி பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள், பீமனுக்கு எதிராக இரண்டு அல்லது மூன்று போர்கள் நடந்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன.
முதல் போர்: சோழர்களின் துணையுடன் சக்திவர்மன் வேங்கியை நோக்கி முன்னேறியபோது, பீமன் தனது சிறந்த தளபதியான ஏகவீரன் என்பவனை, இவர்களை எதிர்த்துப் போரிட அனுப்பினான். ஏகவீரன் திறமைசாலியாக இருந்தபோதிலும், சக்திவர்மனிடம் தோற்று, போர்க்களத்திலேயே கொல்லப்பட்டான். அவனது படைகள் சிதறடிக்கப்பட்டன.
இரண்டாவது போர்: அடுத்து, தெலுங்கு சோழ இளவரசர்களான மகாராஜா மற்றும் பத்தெம்மா ஆகியோர் சக்திவர்மனை எதிர்த்தனர். அவர்களும் தோல்வியடைந்து, போர்க்களத்திலிருந்து தப்பி ஓடினர்.
இந்தத் தொடர் தோல்விகள், பீமனுக்குப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தின. இதனால், பீமன் வேங்கியை விட்டு வெளியேறி, கலிங்கத்தின் மலைகளிலும், காடுகளிலும் தஞ்சமடைந்தான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சக்திவர்மன் வேங்கியை ஆக்கிரமித்து, தன்னை மன்னனாக அறிவித்துக் கொண்டான். அவனது நோக்கம் நிறைவேறியதால், சோழப் படைகள் தங்களது நாட்டுக்குத் திரும்பின.
ஆனால், பீமன் தனது தைரியத்தை இழக்கவில்லை. அவன் புதிய படைகளைச் சேகரித்து, வேங்கியை நோக்கி மீண்டும் படையெடுத்தான். சக்திவர்மன் அவனை எதிர்த்தானா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எதிர்த்திருந்தாலும், அது பயனுள்ளதாக இருந்திருக்காது. பீமன் வேங்கியை வெற்றிகரமாகக் கடந்து, தொண்டைமண்டலத்தின் மையப்பகுதிக்குள் ஊடுருவி, சோழப் பேரரசின் முக்கிய நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தை, கி.பி. 1001-1002-ல் கைப்பற்றினான்.
ஆனால், அங்கும் அவனால் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. முதலாம் இராஜராஜன் அவனை விரைவிலேயே தனது ஆட்சிப்பகுதியிலிருந்து விரட்டினான். அவனை முற்றிலும் ஒழித்துக்கட்ட ஒரு திட்டத்தையும் தீட்டினான். கி.பி. 1002-1003-ல் முதலாம் இராஜராஜன் மீண்டும் தெலுங்கு நாட்டின் கடலோரப் பகுதிக்கு படையெடுத்து, கலிங்கம் வரை முன்னேறினான். அங்கு, பீமனைக் போரில் கொன்று, விமலாதித்தன் அண்ணனான முதலாம் சக்திவர்மன்-ஐ மீண்டும் வேங்கியின் அரியணையில் நிலைநிறுத்தினான்.
சரி ராஜராஜர் தோற்கடித்த அந்த எதிரி படத்தில் மேலைச் சாளுக்கியர் என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் ராஜராஜார் கொன்றது ஒரு தெலுங்குச் சோழனை. காஞ்சியைச் கைப்பற்றி வேங்கியை சுதிந்திர நாடாக அறிவித்தவர் ஜடா பீமா சோழன் என்ற தெலுங்கு சோழர் ஆவார். இவரை போரில் வேன்றதாலேயே “தெலுங்கு குல காலன்” என்ற பட்டப்பெயர் தமிழ்ச் சொழரான ராஜராஜருக்கு உண்டு என ஆய்வளார்கள் கருதுகின்றனர். இவனை கொன்றதைப் பற்றி ராஜராஜர் தனது செப்பேட்டில் வருணித்து கூறி இருப்பார்.
இராஜராஜ சோழனும், சோட பீமனும் எவ்வளவு பெரிய எதிரிகள் என்பதை திருவலங்காடு செப்பேடு கூறுகிறது. “புராணத்தில் ராஜராஜன் என பெயர் கொண்ட துரியோதனனை, போரில் பீமன் எனப் பெயர் கொண்டவன் தனது கதையால் தாக்கி அழித்தான், அதனாலேயே இந்த மிகவும் வலிமை வாய்ந்த இந்த ஆந்திர அரசனான பீமனை இராஜராஜன் ஆகிய நான் கொன்றேன்” என்பதாக அப்பாடல் பொருள் வருகிறது. பிறப்பாலேயே பங்காளிகளான துரியோதனும் பீமனும் எதிரிகள், அதேபோல தானும், பீமா சோடனும் எதிரிகள் என்பதாய் இப்பாடல் வருகிறது. இந்த தெலுங்கு சோழ சோட பீமனின் அடைமொழிகளில் ஒன்று தெலிங்கா என்பது.
ஜடாசோட பீமணை தெலுங்குச் சோழர்களிலேயே சிறந்து விளங்கிய வீரமிக்க மன்னர் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த ஜடாசோழன் என்பதே தமிழ் இலக்கியங்களில் சேட்சென்னி (இளஞ்சேட்சென்னி) என வருகிறது. ஜடா=சேட், சென்னி=சோழ. ஜடாசோடன் என்பவர் தெலுங்குச் சோழரின் முன்னோர் எனக் கூறப்படும் கரிகாலனின் தந்தை என தெலுங்குச் சோழர் ஆவணங்கள் கூறுகின்றன. தமிழ் ஆவணங்கள் இளஞ்சேட்சென்னியை கரிகாலனின் முன்னோர் எனக் கூறுகிறது.