இந்து மதத்தை காக்க உருவாக்கபட்ட விஜயநகர அரசு ஏன் மற்றொரு இந்து அரசான சம்புவராயரை அழித்தது?
இந்து மதத்தை காக்க உருவாக்கபட்ட விஜயநகர அரசு ஏன் மற்றொரு இந்து அரசான சம்புவராயரை அழித்தது? விவரிவாகக் காண்போம்..
உயிருடன் தோல் உரிக்கபட்டு கொல்லபட்ட வீரவல்லாலனும், அதனால் சம்புவராயர் அரசு வீழ்ச்சியுற்றது எனபதே வரலாற்று சுருக்கம்.
யாரிந்த சம்புவராயர்?
ராயர் என்ற சொல்லுக்கு அரையர் என்ற பொருள் உண்டு. இது குறுநிலத் தலைவர்களை குறிக்க பயன்பட்ட பரவலாக வட தமிழகப் பகுதிகளில் வழங்கப்பட்ட பெயர்கள் ஆகும்.
பல்லவரின் தொண்டை மண்டலம் சோழர்களின் ஆளுமைக்கு உட்பட்டபோது, அது ‘ஜெயங்கொண்ட சோழ மண்டலம்’ என்ற புதிய பெயரைப் பெற்றது. இந்த ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின் ஒரு முக்கியப் பிரிவாக விளங்கிய ‘பல்குன்றக் கோட்டத்தின்’ ஆட்சித் தலைவர்களாகப் பொறுப்பேற்று, அப்பகுதியைக் காவல் காத்து வந்த சிற்றரசர்களே சம்புவரையர்கள் ஆவர்.
ஆட்சி எல்லைகளும் தலைநகரும்
சம்புவரையர்கள் ஆண்ட பல்குன்றக் கோட்டத்தின் புவியியல் அமைப்பைப் பற்றி, சித்தாந்த கலாநிதி ஔவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அதன்படி:
எல்லைகள்: வடக்கே பாலாற்றுக்கும், தெற்கே தென்பெண்ணையாற்றுக்கும் இடைப்பட்ட வளமான நிலப்பரப்பை இது கொண்டிருந்தது.
மேற்கு எல்லை: இதன் மேற்கு எல்லையாக ‘பவளமலை’ அமைந்திருந்தது. இந்த மலையே தற்போது சவ்வாது மலை என்ற பெயருடன் வடாற்காடு மாவட்டத்தில் அறியப்படுகிறது.
தலைநகர்: இந்தப் பல்குன்றக் கோட்டத்தை ஆண்ட சம்புவராயர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைநகராக படைவீடு விளங்கியது.
வரலாற்று ஆய்வாளர்கள் இவர்களை “கள்ளர்” என்கின்றனர்
வரலாற்றுத் தொடர்ச்சியும் ஆட்சி மாற்றங்களும்
சம்புவரையர்கள் பல்வேறு பேரரசுகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிகளுக்கிடையிலும் தங்கள் ஆளுமையைத் தக்கவைத்துக்கொண்ட திறமையான அரசியல் ராஜதந்திரிகளாகச் செயல்பட்டனர். அவர்களின் பயணம் மூன்று முக்கிய காலகட்டங்களைக் கொண்டது:
சோழப் பேரரசு காலம் (கி.பி. 12 – 13ஆம் நூற்றாண்டு)
கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை, சோழப் பேரரசின் நம்பிக்கைக்குரிய படைத்தலைவர்களாகவும், சிற்றரசர்களாகவும் இவர்கள் தொண்டாற்றினர்.
பாண்டியப் பேரரசு காலம்
சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழகத்தில் பிற்காலப் பாண்டியப் பேரரசு வலிமை பெற்றது. அக்காலகட்டத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப, பாண்டியப் பேரரசின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு தொண்டை மண்டலத்தின் ஆட்சியாளர்களாகத் தங்கள் அதிகாரத்தைத் தொடர்ந்தனர்.
விஜயநகரப் பேரரசு காலம்
பாண்டியர்களுக்குப் பிறகு விஜயநகரப் பேரரசு ஆட்சிக்கு வந்தபோதும், தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதி இவர்களின் ஆளுகையிலேயே நீடித்தது.
வீழ்ச்சியும் வரலாற்றுச் சான்றுகளும்
விஜயநகரப் பேரரசன் முதலாம் புக்கனின் மகனான குமார கம்பணன் தமிழகத்தின் மீது மேற்கொண்ட படையெடுப்பு, சம்புவரையர்களின் வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இப்படையெடுப்பின் முடிவில், சம்புவரையர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் கைப்பற்றப்பட்டு, விஜயநகரப் பேரரசோடு முழுமையாக இணைக்கப்பட்டன. விஜயநகர ஆட்சியின் கீழ், இந்த மரபினர் ‘நாயக்கர்கள்’ என்ற புதிய பெயரால் அழைக்கப்பட்டனர்.
சோழ, பாண்டிய மற்றும் விஜயநகரப் பேரரசுகளின் கீழ் ஆட்சி செலுத்திய சம்புவரையர்கள், தங்களின் மேலாண்மை அரசர்கள் சார்பிலும், தங்களின் சுய சார்பிலும் பல கல்வெட்டுகளைப் பொறித்துள்ளனர். இவர்களின் வரலாற்றை உறுதிப்படுத்தும் இக்கல்வெட்டுகள், தற்போதைய வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு (செங்கை அண்ணா) மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.
சம்புவரையர் வரலாறு: வீரசம்பனும் மாலிக்காபூர் படையெடுப்பும்
தொண்டை மண்டலத்தில் வீரசம்பன் தன்னாட்சி அமைத்து ஆண்ட காலகட்டம், தென்னக வரலாற்றில் ஒரு இருண்ட காலமாகவே கருதப்படுகிறது. இக்காலகட்டத்தில் தமிழகம் அன்னியப் படையெடுப்புகளால் பெரும் பேரழிவைச் சந்தித்தது.
மாலிக்காபூரின் படையெடுப்பும் சூறையாடலும்
பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனின் அழைப்பை ஏற்று, மாலிக்காபூர் தலைமையிலான படைகள் முதன்முதலாகத் தமிழகத்திற்குள் நுழைந்தன. இப்படையெடுப்பால் தமிழகம் பலத்த சேதத்தைச் சந்தித்தது.
இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் அப்போது சம்புவரையார் பாண்டியரின் ஆட்சியின் கீழ் இருந்தனர். எனவே பாண்டியரின் ஒரு பிரிவினருக்கு ஆதரவாக வந்த இசுலாமியப் படைகளை சம்புவரையர் ஆதரித்து இருக்கலாம். அதுவே பின்பும் தொடர்ந்து இருக்கலாம். இதுவே இசுலாமியப் படைகள் சம்புவாராயரை எதிரியாக எண்ணாமல் தாக்குவதை கைவிட்டுருக்கலாம்.
மக்கள் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டனர். நிலைமையைக் கையாள முடியாமல் மன்னர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
மிழகத்தின் செல்வங்கள் மற்றும் தளிகள் முழுமையாகச் சூறையாடப்பட்டன.
மாலிக்காபூர் டெல்லிக்குத் திரும்பியபோது, 612 யானைகள், 20,000 குதிரைகள், 90,000 மணங்கு (ஒரு வகை எடையளவு) தங்கம், முத்துக்கள் மற்றும் விலைமதிப்பற்ற அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளைக் கொள்ளையடித்துச் சென்றான். இந்தப் பெரும் சூறையாடலை இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர் ஜியாவுத்தீன் பரணி (Ziyauddin Barani) தனது குறிப்புகளில் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.
வீரசம்பனின் கையறு நிலை
மாலிக்காபூர் நடத்திய இந்தக் கொடூரமான தாக்குதல்கள், படுகொலைகள் மற்றும் அழிவுகளைக் கண்டும், வீரசம்பனால் அவற்றைத் தடுக்கவோ அல்லது அப்படைகளை எதிர்த்துச் செயல்படவோ எவ்வித முயற்சியும் எடுக்க முடியவில்லை.
வரலாற்று அறிஞர் கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள், வீரசம்பனின் இந்த நிலை வருந்தத்தக்க ஒரு வரலாற்று உண்மை எனச் சுட்டிக்காட்டுகிறார்.
மாபெரும் படைகளைத் தடுத்து நிறுத்தும் அளவிற்கு வீரசம்பனிடம் போதிய வலிமை இல்லை என்பதும், தன்னையே தற்காத்துக் கொள்ள வேண்டிய மிகக் கடுமையான நெருக்கடியில் அவர் இருந்தார் என்பதுமே இந்த கையறு நிலைக்குக் காரணமாக அமைந்தது.
படையெடுப்பின் தாக்கமும் வரலாற்றுப் புதிரும்
அன்னியப் படையெடுப்புகளாலும், அதனால் ஏற்பட்ட உயிர் அச்சத்தாலும் மக்கள் தங்கள் பூர்வீக வாழ்விடங்களை விட்டுப் புலம்பெயர நேரிட்டது.
இந்த இஸ்லாமியப் படையெடுப்புகளால் தென் தமிழகம் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக தொண்டை மண்டலப் பகுதி பெரிய அளவிலான இன்னல்களுக்கு ஆளாகவில்லை. தென் தமிழகம் அழிவைச் சந்தித்தபோது தொண்டை மண்டலம் மட்டும் தப்பியது எப்படி என்பது வரலாற்றாசிரியர்களுக்கு இன்றும் ஒரு புதிராகவே உள்ளது.
ராஜதந்திரமும் நாணல் உத்தியும்
மதுரையில் சுல்தான்களின் அரசு (மதுரை சுல்தானியம்) நிறுவப்பட்ட காலகட்டத்திலும்கூட, சம்புவரைய மன்னனான ‘வென்று மண்கொண்டான்’ ஆட்சி செய்த பகுதிகள் சுல்தான்களால் கைப்பற்றப்படவில்லை. இது சம்புவரையர்களின் ராஜதந்திர உத்தியாகக் கருதப்படுகிறது.
பெருவெள்ளம் வரும்போது அதன் வேகத்திற்கு ஏற்ப வளைந்து கொடுத்து, வெள்ளம் வடிந்தபின் மீண்டும் தலைநிமிரும் நாணல் புல்லைப் போல, சம்புவரையர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கலாம்.
அனுசரிப்பு உத்தி
காம்பிலி, கலிங்கம் மற்றும் நாயக்க அரசுகள் போன்ற ஏனைய அரசுகள் இஸ்லாமிய ஆதிக்கத்தை நேருக்கு நேர் எதிர்த்துப் போர்க்கொடி தூக்கின. ஆனால், சம்புவரையர்கள் மட்டும் இஸ்லாமிய அரசோடு மோதாமல், அனுசரித்துப் போகும் இணக்கமான கொள்கையைக் கடைப்பிடித்துத் தங்களைத் தற்காத்துக் கொண்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
தென்னகக் கூட்டமைப்பும் சம்புவரையரின் விலகலும்
தென்னகத்தில் இஸ்லாமிய அரசின் ஆதிக்கம் வலுப்பெற்ற நேரத்தில், அதிலிருந்து தென்னிந்தியாவை மீட்பதற்காக 70-க்கும் மேற்பட்ட இந்து அரசர்களும் தலைவர்களும் ஒன்றிணைந்து ஒரு மாபெரும் கூட்டமைப்பை உருவாக்கினர்.
கூட்டமைப்பின் தலைவர்கள்
காபய நாயக்கன், புரோலய வேமன், சோமதேவன், ஹோய்சாள (போசள) மன்னனான மூன்றாம் வீர வல்லாளன் மற்றும் காம்பிலியை ஆண்ட ஹரிஹரன், புக்கன் ஆகியோரின் தலைமையில் கி.பி. 1336-ஆம் ஆண்டு இந்தச் சிறப்புமிக்க கூட்டமைப்பு உருவானது.
தென்னகத்தை மீட்பதற்காக உருவாக்கப்பட்ட இவ்வளவு பெரிய கூட்டமைப்பில், தமிழகத்தின் வடபகுதியை ஆண்ட ஒரே ஆட்சியாளரான ‘வென்று மண்கொண்டான்’ தன்னை இணைத்துக்கொள்ளாமல் தனித்தே நின்றார் என்பது வரலாற்று ஆய்வாளர்களால் வருத்தத்துடன் சுட்டிக்காட்டப்படுகிறது.
அகதிகளின் வருகையும் கீழ்மின்னல் கல்வெட்டும்
அன்னிய ஆதிக்கத்தின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க, தென் தமிழகப் பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் புகலிடம் தேடி சம்புவரைய மன்னனான ‘வென்று மண்கொண்டானின்’ ஆட்சிப் பகுதிக்கு வந்து குவிந்தனர் என்ற வரலாற்றுச் செய்தியை கீழ்மின்னல் கல்வெட்டு தெளிவாகக் குறிப்பிடுகிறது.
அஞ்சினான் புகலிடமும் மறுவாழ்வும்
இவ்வாறு தஞ்சம் புகுந்து வந்த மக்களுக்கு மறுவாழ்வு அமைத்துத் தரவேண்டிய தார்மீகக் கட்டாயம் சம்புவரைய மன்னனுக்கு ஏற்பட்டது. அதற்காக அரசு சார்பில் பல மறுவாழ்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன:
பொன்னின் பெருமாள்: வாலாஜாபேட்டைக்கு அருகில் உள்ள கீழ்மின்னல் பகுதி ‘அஞ்சினான் புகலிடம்’ (அச்சத்துடன் வந்தவர்களுக்கான தங்குமிடம்) ஆக மாற்றப்பட்டது. அதற்கு, ராசநாராயண சம்புவரையரின் சிறப்புப் பெயரான ‘பொன்னின் பெருமாள்’ என்று பெயரிடப்பட்டது.
பொருளாதார உதவி: நாடி வந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்யவும், புதிய தொழில்களைத் தொடங்கவும் அரசு சார்பில் சிறப்புச் சலுகைகளும், தகுந்த நிதி உதவியும் அளிக்கப்பட்டன.
தளிச் சீரமைப்பு: படையெடுப்புகளால் சேதமடைந்து சீரழிந்த தளிகள் அனைத்தும் அரசு ஆதரவுடன் மீண்டும் முழுமையாகச் சீரமைக்கப்பட்டன.
ராஜதந்திரமும் மக்கள் துயர் துடைத்தலும்
வென்று மண்கொண்டான் தற்காப்பிற்காகக் கடைப்பிடித்த ‘அனுசரித்துப் போகும் கொள்கை’யின் மூலம், தனது ஆட்சிப் பகுதிக்கும் தொண்டை மண்டல மக்களுக்கும் ஏற்படவிருந்த மாபெரும் அழிவை அவர் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தினார்.
கலைகள் மூலம் காயமாற்றுதல்:
படையெடுப்புகளின் ஆபத்தையும், அதனால் மக்கள் சந்தித்த பேரழிவுகளையும் கொடுமைகளையும் அவர்கள் மறக்கச் செய்யவும், அவர்களின் மனவலியைத் திசைதிருப்பவும் மன்னர் பல சிறப்பு விழாக்களை முன்னின்று நடத்தினார்.
மன்னரின் சிறப்பு அனுமதி பெற்ற கூத்தாட்டக் குழுக்கள் தொண்டை மண்டலப் பகுதி முழுவதும் தெருக்கூத்துகளை நடத்தி, துயரத்தில் இருந்த மக்களை மகிழ்வித்தனர் என்ற சிறப்பான செய்தியை மன்னரின் 17-வது ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று பதிவு செய்துள்ளது.
எனவே, இது Buffer State போல செயல்பட்டுள்ளது.
விஜயநகரப் பேரரசுக்கும் சம்புவராயர்களுக்கும் இடையிலான பகை: சந்தேகத்தின் விதையும் வரலாற்று வீழ்ச்சியும்
தென்னிந்திய வரலாற்றில் 14-ஆம் நூற்றாண்டு மிகவும் நெருக்கடியான காலகட்டமாகும். ஒருபுறம் அன்னியப் படையெடுப்புகள், மறுபுறம் பேரரசுகளின் வீழ்ச்சி எனத் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான், சம்புவராயர்களுக்கும் விஜயநகரப் பேரரசுக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடைந்தது. தங்களைக் காத்துக்கொள்ள சம்புவராயர்கள் எடுத்த ராஜதந்திர முடிவுகளே, பின்னர் அவர்கள் மீது பெரும் சந்தேகத்தை உருவாக்கி, அவர்களின் ஒட்டுமொத்த அழிவுக்கும் வழிவகுத்தது.
மர்மமான அமைதியும் சந்தேகத்தின் தொடக்கமும்
தொண்டை மண்டலத்தில் உள்ள படைவீட்டைத் தலைநகராகக் கொண்டு ‘இராச நாராயண சம்புவராயன்’ ஆட்சி செய்த அதே காலக்கட்டத்தில்தான், தெற்கே மதுரையில் முஸ்லீம் சுல்தானிய அரசு வலுவாக நிலவியது. இந்த சுல்தானிய அரசின் வடக்கு எல்லை சிதம்பரம் வரை நீண்டிருந்தது. புவியியல் ரீதியாக மிக அருகாமையில் இருந்தபோதிலும், மதுரையிலிருந்து தென்தமிழகத்தை ஆண்ட முஸ்லீம் அரசுக்கும், வட தமிழகத்தை ஆண்ட இந்து மன்னனான இராச நாராயண சம்புவராயனுக்கும் இடையே எத்தகைய உறவு முறை நிலவியது என்பது வரலாற்றில் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
முஸ்லீம் சுல்தானிய அரசுக்கும் சம்புவரையர்களுக்கும் இடையே எந்தவொரு மோதலும் ஏற்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகளோ, அறிகுறிகளோ இல்லை. இரு பிரிவினரும் எந்தக் கட்டத்திலும் ஒருவரோடொருவர் மோதிக்கொள்ளாமல் தவிர்த்து வந்தமைக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பது மர்மமாகவே நீடிக்கிறது.
வீர வல்லாளனின் வீழ்ச்சியும் சம்புவராயரின் தனிமைப்படுதலும்
தென்னிந்தியாவில் அன்னியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து மாபெரும் இந்துப் பேரரசாக ‘விஜயநகரப் பேரரசு’ உருவானபோது, அதனுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளாமல் ஒதுங்கி நின்ற ஒரே இந்து ஆட்சி சம்புவரையர்களுடையதுதான் என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
சம்புவராயர்களின் அண்டை நாடான திருவண்ணாமலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட போசள (ஹோய்சாள) மன்னன் மூன்றாம் வீரவல்லாளன், தமிழகத்திலிருந்து முஸ்லீம் படைகளை விரட்டப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால், அந்த முயற்சிகள் எதிலும் இராசநாராயண சம்புவராயன் பங்கேற்கவில்லை என்பது வியப்புக்குரியதாக இருந்தது. இந்தத் ‘தலையிடாமைக் கொள்கை’ இராசநாராயண சம்புவராயனுக்கும் மதுரை சுல்தானிய அரசர்களுக்கும் இடையே மறைமுகமான ஒப்பந்தம் ஏதேனும் இருந்திருக்கக் கூடும் என்ற ஆழமான சந்தேகத்தை மற்ற அரசர்களிடம் எழுப்பியது.
கண்ணனூர்க் குப்பம் துயரம்
கி.பி. 1341-ல் மதுரை சுல்தானாக இருந்த அலாவுதீன் உதௌஜி, போசள மன்னனின் திருவண்ணாமலை மீது படையெடுத்தான். அப்படையெடுப்பின்போது வழியில் இருந்த படைவீட்டு ராச்சியத்தை அவன் தாக்கவுமில்லை, சம்புவராயன் சுல்தானியப் படைகளைத் தடுத்து நிறுத்தவுமில்லை. எவ்விதத் தடையுமின்றி சுல்தானியப் படை திருவண்ணாமலை வரை செல்ல அனுமதிக்கப்பட்டது. திருவண்ணாமலை முற்றுகையிடப்பட்டபோதும், இராசநாராயண சம்புவராயன் இந்து மன்னனான வீரவல்லாளனுக்குத் துணையாகச் செல்லவில்லை.
திருவண்ணாமலைப் போரில் வீரவல்லாளன் வென்று அலாவுதீன் உதௌஜி கொல்லப்பட்டான். அதன்பின், கி.பி. 1343-ல் திருச்சிக்கருகில் உள்ள கண்ணனூர்க் குப்பத்தை வீரவல்லாளன் முற்றுகையிட்டபோதும் சம்புவராயன் துணைக்குச் செல்லாமல் ஒதுங்கியே இருந்தான். ஆறு மாத முற்றுகைக்குப் பின் சுல்தானியப் படைகள் சரணடைய ஒப்புக்கொண்டதை நம்பி வல்லாளன் போரை நிறுத்தினான். ஆனால், மதுரை சுல்தான் கியாசுதீன் தம்கானி வஞ்சகமாகத் தாக்கி, முதுமை வாய்ந்த மூன்றாம் வல்லாளனைச் சிறைப்பிடித்தான். மாவீரன் வீரவல்லாளன் உயிருடன் தோலுரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான் என்றும், அவனது உடல் மதுரைக் கோட்டை வாயிலில் தொங்கவிடப்பட்டது என்றும் வரலாற்று ஆசிரியர் இபின் பட்டுடா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை மட்டுமே காத்துக்கொள்வது என்ற தன்னலக் கொள்கையின் அடிப்படையில் சம்புவராயன் தனித்து நின்ற இந்த நிகழ்வு, சம்புவரையர் வரலாற்றிலேயே அழியாத கறைபடிந்த நிகழ்ச்சியாக அமைந்ததுடன், அவர்களின் வீழ்ச்சிக்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.
விசயநகரப் பேரரசின் கோபமும் தண்டனைப் படையெடுப்பும்
வடதிசை முஸ்லீம் ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தென்னக இந்துக்களின் எழுச்சிச் சின்னமாக விசயநகரப் பேரரசு உருவானது. பொது எதிரியை விரட்ட இரு இந்து அரசுகளும் இணைய வேண்டிய வரலாற்றுச் சூழலில், சம்புவரையர்கள் ஒதுங்கியிருந்தது விசயநகர ஆட்சியாளர்களின் கோபத்தைத் தூண்டியது. தமிழகத்தின் பெரும்பகுதி சுல்தானியத்தால் அல்லலுற்றபோது, சம்புவரையர் ஆட்சிப் பகுதி மட்டும் எந்தப் பாதிப்புக்கும் ஆளாகாமல் தப்பியது, மதுரை சுல்தானிய அரசுக்கும் சம்புவரையர்களுக்கும் இடையே மறைமுக உடன்பாடு இருந்திருக்கலாம் என்ற ஐயப்பாட்டைப் பிற இந்து அரசர்களிடம் உறுதிப்படுத்தியது.
வீரவல்லாளன் வஞ்சகமாகக் கொல்லப்பட்டபோது இராசநாராயணன் பின்பற்றிய சுல்தானிய அரசை ‘அனுசரித்துப் போகும் கொள்கை’, விசயநகரப் பேரரசை அவனுக்கு எதிராகப் படையெடுக்கத் தூண்டியது.
முதல் படையெடுப்பு (கி.பி. 1351/1352)
குமார கம்பணன் மேற்கொண்ட முதல் படையெடுப்பு சம்புவராயர்களின் நிலங்களைக் கைப்பற்றும் ஆதிக்க எண்ணத்தோடு நடத்தப்பட்டதல்ல; மாறாக, இராசநாராயணனைத் தண்டிக்கும் நோக்கத்தோடும், விசயநகரப் பேரரசின் மேலாட்சியை அவனை ஏற்கச் செய்யும் நோக்கத்தோடும் மட்டுமே நடத்தப்பட்டது. குமார கம்பணன் இராசநாராயணனைத் தோற்கடித்து, மேலாட்சியை ஏற்க வைத்து, மீண்டும் அவனையே படைவீட்டின் ஆட்சித் தலைவனாக்கினான். இதனால், சாளுவமங்கு மற்றும் வீரசாவண்ணன் ஆகியோர் ‘சம்புவராய ஸ்தாபனாசார்யன்’ (சம்புவராயனைப் பதவியில் அமர்த்தியவன்) என்ற சிறப்புப் பட்டங்களைப் பெற்றனர்.
கி.பி. 1352-க்குப் பின் சம்புவரையர்கள் தன்னாட்சி இழந்து விசயநகரப் பேரரசின் மேலாட்சியை ஏற்று ஆட்சி செய்தனர். வீரசாவண்ணன் விசயநகரப் பிரதிநிதியாகத் தமிழகத்தில் ஆட்சி செய்தான்.
4. மீண்டும் துளிர்த்த சந்தேகமும் இறுதிப் போருக்கான காரணமும்
குமார கம்பணனின் முதல் படையெடுப்புக்குப் பிறகு, இரு தரப்புக்கும் இடையிலான உறவு சீரடையவில்லை. மாறாக, பகைமை முற்றிக் கொண்டே சென்றது.
சம்புவரையர்கள் மீது இரண்டாவது படையெடுப்பை விசயநகரப் பேரரசு ஏன் தொடுத்தது என்பதற்கான நேரடிக் குறிப்புகள் இலக்கியங்களிலோ கல்வெட்டுகளிலோ இல்லை. எனினும், பின்வரும் வலுவான காரணங்கள் போருக்கு வித்திட்டன:
தன் பேரரசுக்கு எதிராக, மதுரை சுல்தானிய அரசுக்கும் சம்புவரையர்களுக்கும் இடையே கூட்டணி உருவாகலாம் என்ற ஆழமான அச்சம் விசயநகரப் பேரரசுக்கு ஏற்பட்டது.
கிளர்ச்சி ஏற்பாடு
தொண்டை மண்டலத்தில் நிறுவப்பட்ட விசயநகரப் பேரரசின் மேலாட்சியிலிருந்து விடுபடச் சம்புவரையர்கள் முயன்றிருக்கலாம். சாவண்ணனின் ஆட்சிக்கு எதிராக நாட்டில் குழப்பங்களை அவர்கள் உருவாக்கியிருக்கக்கூடும். 1367-ல் கலவை திருக்காரீஸ்வரர் ஆலயப் படிமங்கள் சிதைக்கப்பட்டு மீண்டும் சீர் செய்யப்பட்ட கல்வெட்டுக் குறிப்புகள், அங்கு நிகழ்ந்த குழப்பங்களை உறுதிப்படுத்துகின்றன.
முன்னர் தங்களுக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பழிவாங்க, சம்புவரையர்கள் தனித்தோ அல்லது சுல்தானியத்துடன் இணைந்தோ விசயநகரத்தின் மீது போர் தொடுக்கத் திட்டமிட்டிருக்கலாம்.
இதை சாவண்ணன் மூலம் அறிந்த குமார கம்பணன், இனி சம்புவரையரைத் தனித்து ஆள விடுவதில்லை என்ற உறுதியான முடிவோடு படையெடுத்து வந்தான். மதுரையில் உள்ள முஸ்லீம் அரசை அழிக்கப் படை நடத்திச் செல்லும் முன் தன் மகன் குமார கம்பணனிடம், “நமக்கு எதிராகப் போர் தொடுக்கப் படை திரட்டி வரும் சம்பன் மீது படையெடுத்து அவனுடைய துண்டீர மண்டலத்தை (தொண்டை மண்டலத்தை)க் கைப்பற்று” என்று விசயநகரப் பேரரசன் முதலாம் புக்கன் அறிவுரை கூறியதாக ‘மதுரா விஜயம்’ காவியம் குறிப்பிடுகிறது. சுல்தானிய அரசை அழிக்க, தமிழகத்தில் விசயநகர அரசு முழுமையாக நிலைபெறுவது அவசியம் என அவர்கள் முடிவெடுத்தனர்.
படைவீட்டின் வீழ்ச்சியும் சம்புவராயர் மரபின் ஒழிப்பும்
குமார கம்பணனின் இரண்டாவது படையெடுப்பு இராச நாராயணனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவனது மகனான ‘இரண்டாம் வென்று மண்கொண்டான்’ மீது தொடுக்கப்பட்டது.
குமார கம்பணனின் மனைவியான இளவரசி கங்காதேவி தான் இயற்றிய ‘மதுரா விஜயம்’ காவியத்தில் இந்தப் படையெடுப்பின் பல கட்டங்களை நேரில் கண்ட சாட்சியாக விவரித்துள்ளார்.
குமார கம்பணன் தன் படைத்தலைவன் மாரய நாயகனை முன்னணியில் அனுப்பிவிட்டு, விசயநகரத்தை விட்டுப் புறப்பட்டு முல்பாகல் பகுதியை அடைந்தான். படைகள் முதலில் விரிஞ்சிபுரத்தைக் கைப்பற்றின, பின்னர் படைவீடு முற்றுகையிடப்பட்டுச் சம்புவராயனின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து காஞ்சி மாநகர் நோக்கி முன்னேறிய விசயநகரப் படைகளுக்கும் த்ரமிலர் (தமிழர்) படைகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து தமிழர் படை தோற்றது. காஞ்சி கைப்பற்றப்பட்டதும் சம்புவராயன் அங்கிருந்து தப்பித் தன் கோட்டை நகரான படைவீட்டை அடைந்தான்.
இறுதிப் போராக, யாரும் அணுக முடியாதபடி அமைந்திருந்த சம்புவரையனின் இராசகம்பீரன் மலைக்கோட்டை முற்றுகையிடப்பட்டது. ‘அழியா அரண்’ எனப் போற்றப்பட்ட அக்கோட்டையை படைத்தலைவன் மாரய நாயகன் கைப்பற்றி உடைத்தான். அதன் வெற்றியாகக் ‘கண்டர் கூலி மராயநாயகத் திருக்கோபுரம்’ எழுப்பப்பட்டது.
இறுதியில் கோட்டையிலிருந்து வெளியேறிய சம்புவராயன் தன் கையில் ஏந்திய வாளுடன் குமார கம்பணனுடன் நேருக்கு நேர் போரிட்டான். இருவருக்கும் இடையே நடந்த கடுமையான வாட்போரில் சம்புவராயன் கொல்லப்பட்டான்.
இந்த மாபெரும் வெற்றிக்குப் பின், சம்புவரையர் அரசு முற்றிலுமாக அழிக்கப்பட்டுத் தொண்டை மண்டலம் விசயநகரப் பேரரசோடு நிரந்தரமாக இணைக்கப்பட்டது. விசயநகரப் பேரரசின் ஏழு ராச்சியங்களில் ஒன்றாக ‘இராசகம்பீர ராச்சியம்’ மாற்றப்பட்டது.
11-ஆம் நூற்றாண்டு முதல் சோழர்களின் படைத்தலைவர்களாகவும், பாண்டியர்களின் கீழ் இயங்கியவர்களாகவும், தன்னாட்சி பெற்ற மன்னர்களாகவும் வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற சம்புவரையர்கள், அரசியல் ராஜதந்திரங்களில் ஏற்பட்ட பிழையாலும், சுல்தானியர்களுடனான அவர்களின் மர்மமான அமைதிப் போக்காலும் விஜயநகரப் பேரரசின் கோபத்திற்கு ஆளாகி, இரண்டாம் வென்று மண்கொண்ட சம்புவராயனின் மரணத்தோடு வரலாற்றின் பக்கங்களிலிருந்தே முற்றிலுமாக மறைந்து போனார்கள். இன்று படவேடு பகுதியில் சிதைந்து கிடக்கும் கோட்டை மேடுகளும் ஆலயங்களும் மட்டுமே அவர்களின் புகழ்பாடும் மௌனச் சாட்சிகளாக எஞ்சியுள்ளன.
விஜயநகர நாயக்கர்கள் வீரவள்ளலானின் படைதளபதிகள் என்பது வரலாற்று உண்மை.
#History #சம்புவரையர் #தொண்டைமண்டலம் #படைவீடு #விஜயநகரப்பேரரசு #குமாரகம்பணன் #மதுராவிஜயம் #வீரவல்லாளன் #தமிழகவரலாறு #தென்னிந்தியவரலாறு #வரலாற்றுச்சுவடுகள் #தளி #தொன்மை #பாரம்பரியம் #Sambuvarayar #Tondaimandalam #Padaiveedu #VijayanagaraEmpire #KumaraKampana #MaduraVijayam #VeeraBallala #SouthIndianHistory #TamilHistory #IndianHeritage #Heritager #Thali #MedievalIndia
