சமண சமயத்தினைச் சார்ந்தவர்களுக்குப் படுக்கைகள் அமைத்துக் கொடுக்கின்ற வழக்கத்தை அன்று இருந்த அரசர்கள் மற்றும் சில சமய ஆதரவாளர்கள் மேற்கொண்டு வந்தனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நடைமுறை தமிழகத்தில் வழக்கத்தில் உள்ளது. ஜம்பை பகுதியில் ‘அதியமான் நெடுமான் அஞ்சி’ சமண முனிவர்கள் தங்குவதற்காக சமணப் படுக்கையினை அமைத்துக் கொடுத்தது பற்றி அங்குள்ள கல்வெட்டு ஒன்று பதிவு செய்கின்றது.
திருநெல்வேலியில் ‘மறுகால் தலை’ என்ற இடத்தில் அமைந்துள்ள சமணப்படுக்கையில் ‘வெண்காசியபன் கொடுபித கல் கஞ்சனம்’ என்று தமிழி (பிராமி) எழுத்தில் எழுதப்பட்டுள்ள தைப் பார்க்கலாம். அதாவது, வெண்காசியபன் என்பவன் கல்லை செப்பனிட்டு செதுக்கிக் கொடுத்தப் படுக்கை என்பது அதன் பொருளாகும். வெண்காசியபன் என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன் அங்கு வாழ்ந்த ஒரு சமண சமய ஆதரவாளர் என்ற புரிதலை மட்டுமே இங்கு நம்மால் பெறமுடிகின்றது. இது போன்றே மன்னார்கோயில் (அய்யனார்குளம்) பகுதியில் ஒரு சமணப்படுக்கை அமைந்துள்ளதும் நோக்கத் தக்கது.
மதுரை நகரினைச் சுற்றி பல சமணப்படுக்கைகள் அமைந் துள்ளன. மாங்குளம், அரிட்டாப்பட்டி, கீழவளவு, கொங்கர் புளியங்குளம், முதலைக்குளம், திருப்பரங்குன்றம், முத்துப்பட்டி (கரடிப்பட்டி), ஆனைமலை, அழகர்மலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள சமணப்படுக்கைகளில் தமிழி (பிராமி) கல்வெட்டு கள் உள்ளன. இப்படுக்கைகள் மிகப் பழமையானவையாகும்.கணிநந்த ஸிரிங்குல்அன் என்பவனுக்குத் தர்மமாக நெடுஞ் செழியனின் அலுவலனாக விளங்கிய ‘கடலன் வழுதி’ என்பவன் இப்பள்ளியை உருவாக்கிக் கொடுத்தான் என்பது மாங்குளம் சமணப்படுக்கையில் உள்ள கல்வெட்டு செய்தி.
தமிழகத்தில் 2000 ஆண்டுகளிலிருந்து கி.பி.10 ஆம் நூற்றாண்டு வரையிலான சமணப்படுக்கைகள் அமைந்துள்ளதைப் பார்க்கலாம். சமணர்கள் இம்மலைப்பகுதியில் மாணவர்களுக்கு கற்பித்து வந்தமைக்கான சான்றுகள் பல உள்ளன. மதுரை கீழக் குயில்குடி, வேலூர்- விளாப்பாக்கம் பெண்கள் பள்ளி, வள்ளி மலை சமணப் பள்ளி முதலான இடங்களிலும் மாணவர்கள் கல்வி கற்றனர்.
தமிழக வரலாற்றில் கற்பித்தல் முறை குறித்து அறியப்பட்ட காலத்தின் வரலாற்றை எழுதும் பொழுது இந்த சமணப்பள்ளி களின் கற்பித்தல் மரபினையும் கவனத்தில் கொள்ள வேண்டி யுள்ளது. சங்ககாலத்தின் தொடர்ச்சியாக நடைபெறும் இச்செயல் பாடானது கி.பி 16, 17வரை தொடர்ந்து வந்தமைக்கான சான்று களும் அவர்கள் எழுதி அளித்த இலக்கண நூல்களும் ஆவணங் களாக உள்ளன. அகழாய்வில் கிடைக்கும் சில தாழிகளில் சமணப் பெயர்கள் கிடைத்திருப்பது அன்றைய காலத்தில் தமிழகத்தில் நிலவிய சமணத்தின் தாக்கத்தை உறுதிப்படுத்துகின்றன.
தமிழகத் தொல்லியல் ஆய்வுகள்: கீழடி வரை… – சி.இளங்கோ
Price : 130/-
மேற்கண்ட புத்தகம் வாங்க: https://heritager.in/product/tamizhaga-tholliyal-aaivugal-keezhadi-varai/