Team Heritager September 5, 2026 0

Madras System – ஸ்காட்லாந்து வரை சென்ற ‘திண்ணைப் பள்ளி’ கல்வி முறை

ஸ்காட்லாந்துல ஒரு ‘Madras College’ இருக்கு… அதுவும் 190 வருஷமா! இதுக்குப் பின்னாடி இருக்குற நம்ம ஊரு ‘திண்ணைப் பள்ளி’ ரகசியம் தெரியுமா?

ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த மெக்காலே கல்விமுறையை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அந்த ஆங்கிலேயர்களின் கல்விமுறைக்கே அடித்தளமாக அமைந்த நமது பாரம்பரியத் தமிழ்க் கல்விமுறையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஸ்காட்லாந்தின் ஃபைஃப் (Fife) மாகாணத்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் (St Andrews) நகரில் கம்பீரமாக வீற்றிருக்கும் ‘மெட்ராஸ் காலேஜ்’ (Madras College), ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்குச் சவால் விட்ட சென்னை எழும்பூரின் திண்ணைப் பள்ளிகளின் வரலாற்று எச்சம்! 1753-ல் செயின்ட் ஆண்ட்ரூஸில் உள்ளூர் மாஜிஸ்திரேட் மற்றும் விக் (wig) தயாரிப்பாளருக்கு மகனாகப் பிறந்த கணித மேதையான பாதிரியார் டாக்டர் ஆண்ட்ரூ பெல், 1787 ஜூன் 2-ல், 101 நாட்கள் அதிவேகக் கடல் பயணத்திற்குப் பின் வெறும் £128-டன் கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவப் பாதிரியாராக மெட்ராஸ் வந்திறங்கினார்.

இங்கு வெடிமருந்து கிடங்காக இருந்து, எழும்பூர் ரெட்வுட் (Redoubt of Egmore) பகுதியில் மாற்றப்பட்ட ‘ராணுவ ஆண்கள் அனாதை ஆசிரமத்தின்’ முதல் கண்காணிப்பாளராக ஊதியமின்றிப் பொறுப்பேற்றார். 1798-ல் பாதிரியார் ஜேம்ஸ் கார்டினர் (James Cordiner) குறிப்புப்படி, இலவசக் கல்வி பெற்ற ஆதரவற்ற பிள்ளைகள் மற்றும் மாதம் 3 பகோடாக்கள் செலுத்திய அதிகாரிகளின் பிள்ளைகள் என 4 முதல் 14 வயதுக்குட்பட்ட 380 மாணவர்களுக்கும் இருந்த ஒரே ஆசிரியர் டாக்டர் பெல் மட்டுமே.

1789-ல் ஒருநாள் காலை குதிரையில் சென்ற பெல்லுக்கு, எழும்பூர் புழுதிப் பாதையில் இயங்கிய ஒரு ‘திண்ணைப் பள்ளி’ (Pyal-school) மாபெரும் திறவுகோலாக அமைந்தது. வரலாற்றாசிரியர் லாசன் (Lawson) குறிப்பிட்டது போல, மணலையே கரும்பலகையாகக் கொண்டு, ஆசிரியர் மேற்பார்வையில் மூத்த மாணவர்கள் இளையவர்களுக்குக் கற்பிக்கும் முறையை அங்கு அவர் கண்டார். “ஒவ்வொரு சிறுவனும் ஆசிரியராகவும், மாணவனாகவும் இருக்கிறான்” என வியந்த பெல், இந்த ‘மானிட்டர்’ (Monitors) முறையைத் தன் ஆனாதை விடுதியில் உடனடியாகச் செயல்படுத்தினார்.

ஒரே ஆசிரியர் 200 பேரை நிர்வகிக்கும் இந்தப் பரஸ்பரக் கற்பித்தல் மாடலை “அதிகாரத்தைப் பெருக்கும், உழைப்பைப் பிரிக்கும் தத்துவம்” என்றார். கென்யன் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில், இந்தக் கற்பித்தலை ஒரு ‘கண்டுபிடிப்பு’ (Discovery) என்றும், பள்ளிகளில் புகுத்தியதை ‘உருவாக்கம்’ (Invention) என்றும் பெருமையுடன் குறிப்பிட்டு இதற்கு ‘மெட்ராஸ் சிஸ்டம்’ (Madras System) எனப் பெயரிட்டார்.

ஒன்பது ஆண்டுச் சேவைக்குப் பின், 1796 ஆகஸ்டில் £25,935 பெருஞ்செல்வம் மற்றும் ஆண்டுக்கு £200 கம்பெனி ஓய்வூதியத்துடன் பிரிட்டன் திரும்பிய பெல், அடுத்த 35 ஆண்டுகள் இந்த ஒற்றைக் கல்வி முறையை உலகெங்கும் கொண்டு சென்றார். ரஷ்யப் பேரரசர் முதலாம் அலெக்சாண்டருக்கும் இது கற்பிக்கப்பட, 1832-ல் பெல் இறக்கும்போது சுமார் 10,000 பள்ளிகள் இம்முறையைப் பின்பற்றின.

தன் வாழ்நாள் சேமிப்பான £50,000 நிதியைக் கொண்டு, லத்தீன் கற்பித்த கிராமர் பள்ளியையும், 1750-களில் தொடங்கிய ஆங்கிலப் பள்ளியையும் இணைத்து 1833-ல் செயின்ட் ஆண்ட்ரூஸில் ‘மெட்ராஸ் காலேஜ்’ஐ அவர் உருவாக்கினார். இதன் அடையாளமாக பிளாக்ஃப்ரையர்ஸ் தேவாலயத்தின் (Blackfriars Chapel) சிதிலமடைந்த பகுதியை அப்படியே பாதுகாக்கவும் உத்தரவிட்டார். இன்று இப்பள்ளி 11 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வி வழங்கி வருகிறது.

பெல் இறந்து 100 ஆண்டுகளுக்குப் பின் 1905-ல் லாசன், “மெட்ராஸ் சிஸ்டம் என்பது மெட்ராஸ் திண்ணைப் பள்ளிகளின் சாதாரண அன்றாட நடைமுறை; முறையான அடித்தளமில்லாத இது பெல்லின் கற்பனையில்தான் அதிகம் வாழ்ந்தது” எனத் தனது உண்மையான விமர்சனத்தை முன்வைத்தார். காலப்போக்கில் ‘மெட்ராஸ் சிஸ்டம்’ வழக்கொழிந்து போயிருக்கலாம்; ஆனால் எழும்பூரின் புழுதிப் பாதையில் பிறந்த ஒரு சாதாரண விஷயம் உலகக் கல்வியில் செய்த புரட்சி அளப்பரியது.

கட்டடங்களும் முகவரிகளும் மாறலாம், ஆனால் ஸ்காட்லாந்து மண்ணில் நிலைத்து நிற்கும் ‘மெட்ராஸ்’ என்ற பெயரும், இன்றும் சீனியர் மாணவர்களிடமிருந்தே ஜூனியர்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள் என்ற நிதர்சனமும் அந்தத் திண்ணைப் பள்ளிகளின் அழியாத சாட்சியாக நிமிர்ந்து நிற்கின்றன.

இன்றும் கல்லூரிகளில் பல விஷயங்களை அதிகமாக சீனியர் மாணவர்களிடமிருந்தே ஜூனியர் மாணவர்கள் கற்கின்றனர்.

அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

சென்னையின் கோட்டைகளும், வீதிகளும், கடலும் சொல்லும் இது போன்ற பல சுவாரஸ்யமான வரலாற்றுப் பதிவுகளைத் தெரிந்துகொள்ள…

Category: