
மெட்ராஸ் என்ற பெயரின் மர்மம்
‘மெட்ராஸ்’ என்ற சொல்லின் தோற்றம் நீண்ட காலமாகவே வரலாற்றாய்வாளர்களுக்கு ஒரு பெரிய புதிராகவே இருந்து வருகிறது.
அந்த கதைகளுள் இதுவும் ஒன்று..

“ஆங்கிலேயர்களின் குடியேற்றப் பகுதி முழுவதுமே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது, ஆனால் அந்தப் பெயரின் தோற்றம் யாருக்கும் தெரியாது” என்கிறார் வரலாற்றாசிரியர் டால்பாய்ஸ் வீலர். இந்தப் பெயர்க்காரணம் குறித்துப் பல கற்பனைக் கதைகளும் யூகங்களும் உலவுகின்றன. ஆனால், சர் பிரான்சிஸ் டேவுக்கு (Sir Francis Day), தாமல் வெங்கடப்ப நாயக்கர் அளித்த மானியச் சாசனத்திலேயே ‘மதராஸ்பட்டினம்’ என்ற பெயர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக விலகாமலிருந்த இந்த மர்மத் திரையை விலக்கிய பெருமை, அருட்திரு. மான்சிக்னர் ஏ.எம். டெய்சீரா (Mgr. A. M. Teixeira) அவர்களையே சாரும்.
மைலாப்பூரில் கிடைத்த கல்வெட்டு
1927-ம் ஆண்டு ஜூலை மாதம், மைலாப்பூரில் உள்ள செயிண்ட் லாசரஸ் தேவாலயத்தை (St. Lazarus Chapel) புதுப்பிப்பதற்காகப் பள்ளம் தோண்டியபோது, டெய்சீரா ஒரு பழமையான கல்லறைக் கல்லைக் கண்டுபிடித்தார். போர்த்துகீசிய மொழியில் பொறிக்கப்பட்டிருந்த அந்தக் கல்லின் மேற்புறத்தில் ஒரு ராஜ முத்திரையும் (Coat-of-Arms) இருந்தது.
அதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்:
“இது மானுவல் மாட்ரா (Manuel Madra) மற்றும் அவரது தாயாரின் கல்லறை. வின்சென்ட் மாட்ரா மற்றும் லூசி ப்ராக் ஆகியோரின் மகனான இவர், 637-ம் ஆண்டில் சொந்தச் செலவில் இந்தத் தேவாலயத்தைக் கட்டினார்.”
இதைக் குறித்து, 1927 ஜூலை 23 அன்று ‘மெட்ராஸ் மெயில்’ (Madras Mail) இதழில் டெய்சீரா பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
“இங்கு 637 என்பது 1637-ஆம் ஆண்டைக் குறிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மெட்ராஸ் என்ற பெயரின் தோற்றத்திற்கு இதுவே மிகச் சரியான காரணமாக இருக்க முடியும். சொந்தமாக ஒரு தேவாலயத்தைக் கட்டும் அளவுக்கு ‘மாட்ரா’ (Madra) குடும்பத்தினர் பெரும் செல்வந்தர்களாகவும், ராஜ முத்திரையைப் பயன்படுத்தும் அளவுக்கு உயர்குடி மக்களாகவும் இருந்திருக்கிறார்கள். 16-ம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதியில் வாழ்ந்த இந்த வசதியான போர்த்துகீசியக் குடும்பத்தின் பெயரையே, மக்கள் அந்தப் பகுதிக்கும் சூட்டியிருக்க வேண்டும் அல்லது அவர்களே அப்பெயரை வைத்திருக்கலாம்.
இது வழக்கமான இந்திய மரபுதான்.”
அவரது இந்தக் கருத்தை, சர் வில்லியம் ஃபாஸ்டரின் “The Founding of Fort St. George, Madras” என்ற நூலின் ஆதாரங்களைக் கொண்டு நானும் ஆமோதித்தேன்.
குப்பத்துத் தலைவர் ‘மதராஸன்’
கர்னல் லவ் எழுதிய “Vestiges of Old Madras 1640-1800” என்ற நூலில், பண்ட்லா ராமஸ்வாமி நாயுடு என்பவர் 1820-ல் எழுதிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏஜென்ட் பிரான்சிஸ் டே நிலம் வாங்குவதற்கு, தனது மூதாதையரான பேரி திம்மப்பா எப்படி ஒரு தரகராக உதவினார் என்பதை அவர் அதில் விளக்கியுள்ளார்:
பிரான்சிஸ் டே ஒரு குப்பம் இருந்த இடத்தில் ஒரு தொழிற்சாலையைக் கட்ட முடிவு செய்தார்.
அந்தக் குப்பத்தின் தலைவனாக ‘மதராஸன்’ என்ற கிறிஸ்துவர் இருந்தார். அந்த இடத்தில் அவருக்கு ஒரு வாழைத்தோட்டம் இருந்ததால், நிலம் தர மறுத்து முட்டுக்கட்டை போட்டார்.
அப்போது தலையிட்ட பேரி திம்மப்பா, மதராஸனைச் சமாதானப்படுத்தி, “இங்கு கட்டப்படும் புதிய தொழிற்சாலைக்கும் இந்தப் பகுதிக்கும் ‘மதராஸன்பட்டினம்’ என உனது பெயரையே சூட்டுகிறோம்” என உறுதியளித்து அந்த நிலத்தைப் பெற்றுத் தந்தார்.
கர்னல் லவ், சர் வில்லியம் ஃபாஸ்டர் போன்ற ஆய்வாளர்கள் தங்களுக்குக் கிடைத்த குறைவான தரவுகளைக் கொண்டு இந்தக் கதையை ஆரம்பத்தில் ஏற்க மறுத்தனர். ஆனால், மானுவல் மாட்ராவின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இந்தக் கதைக்கு ஓர் நம்பகத்தன்மை கிடைத்துள்ளது.
சென்னப்பட்டினத்தில் சிவன் மற்றும் விஷ்ணுவுக்குக் கோயில் கட்டிய தீவிர இந்துவான திம்மப்பாவின் வம்சாவளியில் வந்த ஒருவர், ஒரு கிறிஸ்துவ மீனவரின் பெயரால் இந்தப் பகுதிக்கு ‘மதராஸன்பட்டினம்’ எனப் பெயர் வந்ததைக் குறிப்பிடுகிறார் என்றால், அந்தத் தகவல் நிச்சயமாக உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.
சொந்தச் செலவில் தேவாலயம் கட்டிய போர்த்துகீசியரான ‘மாட்ரா’ குடும்பத்தின் மீதுள்ள நன்றியுணர்வால், அந்த கிறிஸ்துவ மீனவர் தனது பெயருடன் ‘மாட்ரா’ என்பதைச் சேர்த்து, அதனுடன் மரியாதைக்குரிய தமிழ் விகுதியான ‘அன்’ (உதாரணம்: கோபால் – கோபாலன்) என்பதை இணைத்து ‘மதராஸன்’ எனத் தன்னை அழைத்துக் கொண்டிருக்கலாம்.
சாந்தோம் மீனவர்கள் தியரி
க்ளின் பார்லோ (Glyn Barlow) தனது ‘Story of Madras’ நூலில் இன்னொரு சுவாரஸ்யமான தகவலைத் தருகிறார். சாந்தோம் பகுதியில் உள்ள ‘மாத்ரே-டி-டியூஸ்’ (Madre-de-Deus – தேவனின் தாய்) தேவாலயப் பகுதியிலிருந்து வந்த மீனவர்கள், தாங்கள் புதிதாகக் குடியேறிய பகுதிக்கும் தங்கள் மாதா கோயிலின் பெயரையே (Madre) சூட்டினார்கள் என்றும், அதுவே மருவி ‘மெட்ராஸ்’ ஆனதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஐரோப்பியர்களின் பெயர்களை இந்திய மயமாக்குவது நமக்கு ஒன்றும் புதிதல்ல. தனிப்பட்ட நபர்கள் மீதான மரியாதையால் ‘மன்றோலப்பா’, ‘ஹியூம் சாஸ்திரி’ என்பது போன்ற பெயர்களை இங்குள்ளவர்கள் வைத்துக் கொள்வார்கள். அதேபோல, பிரபலமானவர்களின் பெயர்களை ஊர்களுக்குச் சூட்டுவதும் (உதாரணம்: தியாகராய நகர், டாட்ஹண்டர் நகர், காலெட்பேட்டை, ஜார்ஜ் டவுன்) இங்கு வாடிக்கைதான்.
ஆக, சாதுர்யமான பேரி திம்மப்பா வீசிய வலையில் வீழ்ந்த மதராஸன், சென்னப்பட்டினத்துக்குப் போட்டியாகத் தனது பெயரில் ‘மதராஸன்பட்டினம்’ உருவாகச் சம்மதித்திருக்க வேண்டும். அப்படி உருவான ‘மதராஸன்பட்டினம்’ காலப்போக்கில் சுருங்கி ‘மதராஸ்பட்டினம்’ ஆகி, பின்னாளில் ‘மெட்ராஸ்’ ஆக உருமாறியது. காளிகாட் (Kali-ghat) கல்கத்தாவாக மாறியதுபோல, மதராஸன்பட்டினமும் மெட்ராஸ் ஆகி வரலாற்றில் நிலைத்துவிட்டது!
ஆனால் இடைக்கால தமிழ்க் கல்வெட்டில் மாதரசன் பட்டணம் பெயர் இடம் பெறுள்ளது.
விஜயநகரப் பேரரசின் கீழ் முளுபாகல் ஆளுநராக இருந்தவர் குமாரகம்பண்ணன் (மதுரையில் சுல்தான்களை வீழ்த்தியவர்). இவரது படைத்தளபதியின் மகனான கண்டரக்கூளிமாராயனின் வீரச் செயல்களைப் போற்றும் 31 வரி கல்வெட்டு ஒன்று பென்னேஸ்வர மடம் கோயிலில் உள்ளது.
சோழர்கள் வசமிருந்த பையூர் பகுதி, விஜயநகர ஆட்சியின் கீழ் வந்த பிறகு கி.பி. 1367, ஜூலை 21-ல் இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்டது. இதில் நீர்ப்பாசனத்திற்காக பெரிய வாய்க்கால் வெட்டப்பட்ட செய்தி இடம்பெற்றுள்ளது.
இதன் மிக முக்கியச் சிறப்பாக, கல்வெட்டின் 16 மற்றும் 17-வது வரிகளில் தற்போதைய சென்னையின் பல பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, “…சானபட்டணம், புதுப்பட்டணம், மாதரசன் பட்டணம்… நீலாங்கரையான்பட்டணம், கோவளம்…” உள்ளிட்ட பல பட்டணங்கள் விஜயநகர அரசரிடம் ஒப்படைக்கப்பட்ட வரலாற்றுத் தகவல் இதில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1500 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் கல்வெட்டில் ‘மெட்ராஸ்’?
காஞ்சிபுரத்தில் உள்ள நரசிம்மவர்ம பல்லவன் கால கல்வெட்டு, ‘
பல்லவ அரசி லோகமாதேவிக்கு ஏற்பட்ட பாதிப்பை (பேய்பிடித்தலை), ஆசீவகத்தைச் சேர்ந்த ‘நற்கௌதமன்’ என்பவர் குணப்படுத்தியுள்ளார் எனக் குறிப்பிடுகிறது. அதற்காகச் சமணர் கோயிலுக்கு ஓர் ஊர் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதை விளக்கும் கல்வெட்டில், “நற்கௌதமநெந் சமணன் மாதேவியை மாதிரைய பட்டினத்து” என்ற வரி இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம், இன்றைய ‘மெட்ராஸ்’ (Madras) சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே “மாதிரையன் பட்டினம்” என அழைக்கப்பட்டதும், அதுவே பின்னாளில் விஜயநகரப் பேரரசு காலத்தில் “மாதரசன் பட்டினம்” என மருவியதும் கருதலாம்.
திரையர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்ட அரச மரபினர். கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய ‘பெரும்பாணாற்றுப்படை’ நூலில் தொண்டைமான் இளந்திரையன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவர்கள் கடலில் கலம் செலுத்துதலில் வல்லவர்கள்.
#CelebrateChennai #Thali
