தொல்லியல் (Archaeology) என்பது பொருள்சார் பண்பாட்டை அகழ்ந்தெடுத்து தொன்மைக்கால மாந்தர் செயல்பாட்டைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் புலமாகும். இவ்வகைப் பொருள்சார் பண்பாட்டுத் தொல்லியல் ஆவணங்களில் கட்டிடக்கலை, தொல்பொருட்கள், தொல்லுயிர் எச்சம், மனித எச்சங்கள், சூழலியல் எச்சங்கள் ஆகியன உள்ளடங்கும். எனவே தொல்லியலை சமூகவியல் கிளைப்புலமாகவும் மாந்தவாழ்வியல் கிளைப்புலமாகவும் (humanities) கருதலாம்.ஐரோப்பாவில் தனிப்புலமாகவும் பிறபுலங்கள் சார்ந்த கிளைப்புலமாகவும் பார்க்கப்படுகிறது; வட அமெரிக்காவில், தொல்லியல் மானிடவியலின் கிளைப்புலமாகவே நோக்கப்படுகிறது
தொல்பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.
தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச்சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.