
தாயுமானவர் பாடலில் ‘திராவிடம்’
தற்கால அரசியல் சூழலில் ‘திராவிடம்’ என்ற சொல் கால்டுவெல் அல்லது 20-ஆம் நூற்றாண்டு அரசியல் தலைவர்களால் உருவாக்கப்பட்டதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், 18-ஆம் நூற்றாண்டிலேயே (1705–1742) வாழ்ந்த தாயுமானவர் சாமிகள், இச்சொல்லைத் தமிழைக் குறிக்கும் சொல்லாகத் தனது பாடல்களில் கையாண்டுள்ளார்.
இவர் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில், ‘திருமறைக்காடு’ எனப் போற்றப்படும் வேதாரண்யத்தில் சைவ வேளாளர் மரபில் பிறந்தார். இவருடைய தந்தையார் கேடிலியப்ப பிள்ளை மற்றும் தாயார் கெசவல்லி அம்மையார் ஆவர். இவர் தமிழ் மற்றும் வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் பெரும் புலமை பெற்றிருந்தார்.

கால்டுவெல் தமிழகத்திற்கு வருவதற்கு (1838) ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தாயுமானவர் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இச்சொல் இறக்குமதி செய்யப்பட்டது அல்ல, மாறாகத் தமிழுக்கு நிகராகப் பன்னெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்த ஒன்று என்பது உறுதியாகிறது.
தாயுமானவர் பாடல் விளக்கம்
தாயுமானவர் தனது ‘சித்தர்கணம்’ எனும் பகுதியில் பாடியுள்ள பாடல்:
“…வடமொழியிலே
வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன் ;
வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்
வசனங்கள் சிறிதுபுகல்வேன் ;
வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ?…”
இந்தப் பாடல், வெறும் ஏட்டுச் சுரைக்காயான கல்விச் செருக்கையும், விவாதம் செய்து பிறரை மிரட்டும் போலிப் புலமையையும் விமர்சிக்கும் ஆழமான தத்துவப் பாடலாகும்.
இதன் நேரடிப் பொருளையும், உட்பொருளையும் கீழே விரிவாகக் காண்போம்:
“வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே வந்ததா விவகரிப்பேன்”
சமஸ்கிருத (வடமொழி) இலக்கண இலக்கியங்களில் பெரும் புலமை பெற்ற ஒருவன் என்னிடம் வாதிட வந்தால், அவனிடம் “நீ கூறும் அத்தனை பெருமைகளும் ‘திராவிடம்’ எனப்படும் எங்களின் தமிழ் மொழியிலிருந்தே வந்தது” என்று தர்க்கம் செய்வேன். (இங்குத் ‘திராவிடம்’ என்ற சொல்லைத் தாயுமானவர் தமிழுக்கு நிகராகப் பயன்படுத்துகிறார்).
“வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிதுபுகல்வேன்”
ஒருவேளை, தலைசிறந்த தமிழ் அறிஞர் ஒருவர் என்னிடம் விவாதிக்க வந்தால், அவரிடம் என் மேதாவித்தனத்தைக் காட்ட வடமொழிச் சொற்களையும் வாக்கியங்களையும் (வசனங்கள்) இடையில் கலந்து பேசி அவரைத் திணறடிப்பேன்.
“வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த வித்தையென் முத்திதருமோ?”
உண்மையான அறிவால் யாரையும் நேர்மையாக வெல்லாமல், இப்படிச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் வார்த்தை ஜாலங்களால் எதிராளியைக் குழப்பியும் மிரட்டியும் (மருட்டிவிட) தப்பிக்கும் இந்த வித்தையானது, எனக்கு முக்தியை (இறைவனை அடைதல் / வீடுபேறு) பெற்றுத் தருமா? தராது.
இறைவனை அடைவதற்கு மொழிச் செருக்கோ, விவாதத் திறமையோ, அல்லது அடுத்தவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்போ எந்த வகையிலும் உதவாது. உண்மையான ஞானம் என்பது அடக்கத்திலும், தர்க்கங்களைக் கடந்த அமைதியிலுமே உள்ளது என்பதைத் தாயுமானவர் தன் மீதே வைத்துச் சுயவிமர்சனமாகப் பதிவு செய்துள்ளார்.
திராவிடம் என்பது கால்டுவெல்லோ, அயோத்திதாசரோ அல்லது பெரியாரோ கண்டுபிடித்த சொல் அல்ல. அது பக்தி இலக்கியக் காலத்திலேயே தமிழைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தாயுமானவர் இச்சொல்லைச் சமஸ்கிருதத்திற்கு இணையான #தமிழ் மொழியைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். இங்குத் திராவிடம் என்பது நேரடியாகத் தமிழையே குறிக்கிறது.
இங்குத் தான் திராவிடம் என்ற சொல் “வடமொழிக்கு எதிராக” முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழே #திராவிடம்
