Menu

நாட்டுப்புற வழிபாடும் மரபும்

நாட்டுப்புற வழிபாடும் மரபும்

தமிழகத்தின் பெரும்பான்மை மக்களாகிய உழைப்பாளிகள் கிராமத்தவர்கள், பாமரர்கள் அல்லது அவர்கள் மத்தியிலிருந்து வந்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வகையான மக்கள், வைதீகநெறி, வேதம், ஆகமம் என்பவற்றோடு சொந்தபந்தம் இல்லாதவர்கள். அவர்களிடம் முதன்மையானதாகவும் இயல்பானதாகவும் இருப்பது நாட்டுப்புற மரபு; நாட்டுப்புற வழிபாட்டு மரபு: அதற்குட்பட்ட தெய்வங்கள். இவை, பல மிகப்பல. இவற்றுள் பெண் தெய்வங்களே மிக அதிகம் நாட்டுப்புற வழிபாட்டின் முக்கியமான அம்சமே, தாய்த்தெய்வ வழிபாடுதான். அதுபோல வைதீக சமயத்தின் முக்கியமான அம்சம் ஆண் தெய்வங்களின் மேலாண்மையாகும்.

நாட்டுப்புற / கிராம தெய்வங்களின் தோற்றம் பற்றிய மரபு என்று பார்த்தால். 1. சில, வரலாறு அறியாத காலத்திலிருந்து வழிவழியாக வருபவை; இயற்கையோடும் இயற்கையாற்றலோடும் சேர்ந்து வருபவை . 2. சில, அண்மைக்காலங்களில், பெருந்துயரம்,கோரம், வீரசாகசம் போன்ற சூழல்களில் இவர்களின் மத்தியிலிருந்து வருபவை . 3.சில, இவர்களையோ இவர்களின் ஆடு மாடு, தோப்புத் துரவுகளையோ காப்பவை; நோய் நொடிகளிலிருந்து விடுதலை தருபவை.

மேலும், இத்தகைய தெய்வங்களின் பரப்பு அல்லது வீச்சு என்று பார்த்தால்,1. வட்டாரத்தன்மை கொண்டவையாக இருத்தல் 2) குலம், தாயாதிவழி என்ற அளவில் இருத்தல் 3) தமிழகம் முழுவதும் அல்லது பிற பகுதிகள்/ இனத்தவர்களோடு சேர்ந்து ஒரு பரந்த தளத்திற்குப் பொதுவாக இருத்தல். மற்றும் எவ்வாறா யிருந்தாலும், இத்தகைய நாட்டுப்புறத் தெய்வங்களிலும் வழிபாடுகளிலும் சாராம்சமாக இருப்பது – மக்களோடு அவற்றுக்கு இருக்கிற நெருக்கம் – அதுபோல மக்களுக்கு அவற்றோடு இருக்கிற ஒரு சுதந்திரம்.

வைதீக சமயத்தில், அதன் வழிபாட்டில் கருவறைக்கு உள்ளே வைதீக பிராமணர் பூசனைசெய்ய, கருவறைக்கு வெளியே பக்தன் பெரும்பாலும்) மனதளவில் கடவுளை நினைந்து கொள்வான். அதாவது, அதிலே மனிதன் தன்னந்தனியாகத் தன்னை ஆக்கிக் கொண்டு உணர்வுகளை அகவயப்படுத்திக் கொள்கிறான். நாட்டுப்புறச் சமய வழிபாட்டில் மனிதன் தன்னைத் தனியனாக ஆக்கிக் கொள்ளுவதில்லை. கூட்டாக இருந்து கூட்டாகக் கூடி நின்று, அசைந்தும் ஆடியும் அரற்றியும் அவன் வழிபடுகிறான். மனிதனைத் தனிமனித நிலைப்படுத்துவது (Individualize) வைதீக சமயம்; மனிதனை சமூகவயப்படுத்துவது (Socialize) நாட்டுப்புறச் சமயம்.

நாட்டுப்புறத் தெய்வங்கள், அவனுடைய மண்ணோடும் உழைப்போடும் ஆசையோடும் பொருந்தியிருப்பவை. மனிதனிலிருந்து தெய்வமும்.தெய்வத்திலிருந்து மனிதனுமாக உருவாகிற / தோற்றமளிக்கிற தெய்வங்களையே அவன் சந்திக்கிறான். அவனுடைய கதைகள் / கதைப்பாடல்கள், தெய்வங்களை விண்ணிலிருந்து கீழே கொண்டுவருகின்றன; மண்ணிலிருந்து மேலே அனுப்புகின்றன. நாட்டுப்புற மக்கள், தெய்வங்களை மண்ணின் மாட்சிகளாகக் (Earthly) காணுகின்றனர். நாட்டுப்புறச் சமயம் என்பது ‘ஒன்று’ அல்ல. அதன் மிக முக்கியமான பண்பு, அதன் பன்முகத்தன்மை ஆகும். ஏக நாயகன் அல்ல; ஏகமாய் நாயகர்கள், ஏகமாய் வழிபாடுகள்; ஏகமாய்க் கூட்டங்கள் – ஆனால், வைதீக சமயத்தின் முக்கியமான குணம், அதன் நிறுவனத்தன்மை. அது, அதனாலேயே சாதுரியமாகச் செயல்படுகிறது. தன்னுடைய கடவுளை ஏகநாயகனாக அல்லது முழு முதல்வனாகக் கைக் கொண்டு வழிபடும் வைதீக சமயத்தின் முக்கியமான திறன் சிறுநெறிகள் என்று கூறப்படும் நாட்டுப்புறச் சமயங்களைத் தனது கிளைகளாகத் – துணைகளாக – இழுத்து அணைத்துக் கொள்வதும் அந்தக் கடவுளர்களைத் தன்னுடைய (பெருங்) கடவுளின் மகன்களாக, மனைவி (களாக), மனைவியின் வேற்று வடிவங்களாகப். பரிவாரங்களாக, குற்றேவல் செய்பவைகளாக (புராணங்களை உருவாக்கி) ஆக்கிக் கொள்வதும் ஆகும். இது அந்தச் சமயநெறியின் சாதுரியமேயெனினும் நாட்டுப் புறச் சமயங்களின் செல்வாக்கு. அந்த (பெருஞ்) சமயத்தை அத்தகையதொரு நிலைப்பாடு எடுக்கும்படியாக ஒரு கட்டாயச் சூழ்நிலையை உருவாக்குகின்றது.

நாட்டுப்புற மக்களுடைய வழிபாடுகள், கதைகள், தொன்மங்கள், விண்ணிலிருந்து தெய்வங்களைக் கீழே மண்ணுக்கு இழுத்து வந்து புனிதங்களைப் போட்டு உடைக்கும். உதாரணமாக, அகலிகை. மனதினால் கெட்டாளா உடலினால் கெட்டவளா என்று விவாதித்து. உடல் X மனம் என்ற அடிப்படையில் கோட்பாட்டை உருவாக்கும் உயர்சாதிக் கலாச்சாரத்திற்கு மாறாக, ஆற்றிலே குளித்துக் கொண்டிருந்த அகலிகை மேலே போய்க்கொண்டிருந்த இந்திரனின் அழகிலே மயங்கி, அவனை வலியக் கூப்பிட்டு அவனோடு சரசமாடினாள், என்று நாட்டுப்புற மரபு, கதையை உருவாக்கும். அதேபோல் கீழே மண்ணில் இருப்பவர்களை மேலே தூக்கிவிட்டுத் தெய்வமாக்கி மகிழும் பெரிய சாதிக்காரர்களால் ஒப்புக்கொள்ள முடியாத கற்பும் பெருங்கோபமும் கொண்ட திரவுபதியைத் தங்களுடைய தெய்வமாக வைத்துக் கொண்டாடும். வாழ்க்கை யதார்த்தத்திலிருந்து முளைத்த சீலைக்காரியம்மனுக்கு ஊர் ஊருக்குக் கோயில் ; மதுரை வீரனுக்குக் கோயில்; காத்தவராயனுக்கு வழிபாடு.

நாட்டுப்புறச் சமய வழிபாட்டின் பன்முகத்தன்மையும் தாராளத்துவ மனப்பான்மையும் காரணமாகத்தான், அந்த மக்கள் பிற அல்லது புறச்சமய நெறிகளை வெறுப்பதில்லை; மாறாக அவற்றிலும் அவர்கள், ஏதாவது ஒருவகையில் கலந்து கொள்கின்றனர். கத்தோலிக்கக் கிறித்துவக் கோயிலாகிய வேளாங்கன்னியை வழிபடுவதும், நேர்த்திக்கடன் செலுத்துவதும் மற்றும் இசுலாமியரின் தர்காவாகிய (மசூதி அல்ல; அடக்கம் செய்யப்படுகிற இடம்) நாகூர் ஆண்டவர் கோயிலுக்கு வழிபாடு செய்யச் சென்றுவருவதும், மேலும், அதுபோல பல தர்காக்களில் இசுலாமியப் பெரியவர்களிடம் தங்களுடைய குழந்தைகளின் சில்லறை நோய்க்கு மந்திரித்து வருவதும் சில உதாரணங்கள். சமய நல்லிணக்கம் என்பது சமயத்தில் பன்முகத் தன்மையும் ஒரு திறப்புநிலையும் இருக்கிறபோது தான் சாத்தியம். மூடியதன்மை. ஒரே கடவுள். அந்த ஒன்றும் எமதன்றி வேறன்று என்ற ஏகான்மியவாதம், இறுக்கம். தீவிரச் செயல்பாடு ஆகியவை சமய நல்லிணக்கங் களுக்குக் குந்தகமானவை. நாட்டுப்புறச் சமயவழி பாடுகள் மனித மனங்களை விரிவுபடுத்துவனவேயன்றிக் குறுக்குவன அல்ல.நாட்டுப்புறச் சமய / சிறுதெய்வ வழிபாடுகளின் நல்ல அம்சங்கள் இவை, சரிதான். ஆனால் சாதிச் சண்டைகள் போச்சோ? பொதுவாக, சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் ‘மூஞ்சிகளில்’ சாதியடை யாளங்கள் நடப்பட்டிருக்கின்றன. மற்றவற்றை வாசிக்கத் தெரிகிறதோ என்னவோ, இதனைக் கிராம மக்கள், லேசாக வாசித்து விடுவார்கள், வழிபாட்டு இடங்கள், திருவிழாக்கள், பல வேளைகளில் தீவுகளாகி விடுகின்றன. பல்லக்கு சுமக்க ஒரு சாதி; முன்னால் நின்று மரியாதை ஏற்றுக்கொள்ள ஒரு சாதி; ஊர்வலமாய் மேளதாளங்கள் சென்றுவரக்கூடாது என்று சில தெருக்கள்: மறுதலையாக அந்தத் தெருக்களின் சாமிகளை அனுமதிக்காத சில தெருக்கள்; முன்வடம் பிடிக்க ஒரு சாதி; பின்வடம் பிடிக்க ஒரு சாதி… என்னப்பா இது?… அய்யனார்களும் மாரியம்மன் காளியம்மன்களும் மலங்க மலங்க விழிக்கிறார்களே, இதைப் பார்த்து. சிறு தெய்வ வழிபாடு. சாதியடையாளங்களின் முகமூடி போட்டுக் கொண்டுதான் முன்னால் நிற்கிறது. தெய்வ வழிபாட்டில் ‘புனிதம்’ எல்லா இடங்களிலும் புளிப்பேறித்தான் இருக்கிறது.

தமிழின் பண்பாட்டு வெளிகள் – தி.சு. நடராஜன்
price : 100/-
Buy Link : https://heritager.in/product/tamilin-panpaattu-veligal/