Menu

சட்டிச் சோற்றின் வரலாறு

அந்தணர்க்கு அளித்தலும் அறவோரைப் பேணுவதும் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய பண்பாக சங்க காலத்திலிருந்து இருந்து வரு கின்றது. பிற்காலச் சோழர், பாண்டியர் காலங்களிலும் இப்பண்பாடு தொடர்ந்து வந்திருப்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. நாடெங்கும் இருந்த கோயில்களில் முக்கிய நாட்களிலும் திருவிழாக் காலங்களிலும் அந்தணர்க்கும் துறவியருக்கும் உணவு வழங்கப் பலரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. யாத்திரிகராய் வரும் துறவியருக்குத் தங்க இடமும் அளிக்கப்பட்டிருக்கின்றது.

பதினொன்றாம் நூற்றாண்டில் விக்கிரம சோழபாண்டியனின் ஆட்சிக் காலத்தில் தாமிரபரணியாறு கடலோடு கலக்கும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள ஆத்தூரில் சோமநாதர் கோயிலில் அமாவாசை தோறும் பஞ்சகெளவியம் கொண்டு திருவாராதனை செய்யப்பட்டது. அந்நாளில் தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்திலுள்ள ‘சங்கு முகத் தீர்த்தத்தில்’ கடலில் நீராடி வரும் பிராமணப் பரதேசிகளில் நல்லாராய் இருப்பார் பத்துப் பேர்க்கு உணவு அளிக்க தானம் வழங் சுப்பட்டது.இத்தானத்தைச் செய்தவன் சோழ மண்டபத்துப் பனையூர் நாட்டு மாதேவிமங்கலமுடையான் உதைய திவாகரமூர்த்தி ஆவான். விக்கிரம சோழபாண்டியன் காலத்திலேயே இவ்வாத்தூர்க் கோயிலில் அமாவாசை நாளிலேயே சிவபிராமணர்கள் பதினைந்து பேர்கள் உண்பதற்கு நிருபசிகாமணி மூவேந்தவேளான் என்பவனால் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், இவனால் இச்சிவன்கோயிலில் உச்சிப்பொழுதில் நடத்தப்படும் பூசையின்போது சிவயோகிகளுக் காகக் குறிப்பிட்ட அளவுள்ள சாப்பாடு சட்டிச்சோறு என்ற பெயரில் சிறப்புணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சட்டிச் சோற்றுக்காக இருநாழி அரிசி, அஞ்சுவகைப் பொறிக்கறி, ஒரு பிடி நெய், உரியளவு தயிர் மற்றும் குறிப்பிட்ட அளவு உப்பு, புள் மிளகு, பாக்கு இரண்டும் வெற்றிலை ஐந்தும் அளிக்கப்பட்டன. இவ்வுணவைச் சமைப்பதற்கும் விறகு கொண்டு வருவதற்கும் பணியாட்கள் நியமிக்கப்பட்டனர். இதேபோன்று தமிழ்நாட்டிலுள் பல கோயில்களில் சட்டிச்சோறு வழங்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்துள்ளது.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆத்தூர் சிவன்கோயிலில் பிராமணப் பெண் ஒருத்தியால் அபூர்விகளாய் வருகின்றவர்களுக்குச் சட்டிச்சோறாகப் பாற்சோறு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிற்காலப் பாண்டியர் காலத்தில் திருமயம் வட்டத்துக் கோட்டையூர்ச் சிவன்கோயிலில் பசித்து வந்தாருக்குச் சட்டிச்சோறு வழங்குவதற்கு மலைமண்டலத்தினைச் சார்ந்த ஒருவனால் தானம் வழங்கப்பட் டுள்ளது. தற்காலத்தினைப் போன்று உணவு விடுதி இல்லாத அக் காலத்தில் கோயில் திருவிழாக்களைக் காணவந்த அடியார்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டு சிவயோகிகளாய் வந்த பிராமணர்க்கும் தேசாந்திரிகளாய் வந்த பரதேசிகளுக்கும் சட்டிச்சோறு என்ற பெயரில் குறிப்பிட்ட அளவுள்ள தரமான அளவு சாப்பாடு தானமாக வழங்கப் பட்டு அவர்களது பசிப்பிணியைப் போக்கிய பண்பாடு அக்காலத்துக் கோயில்களில் காணப்பட்டதை இது உணர்த்துகின்றது.

முதல் குலோத்துங்கசோழன் ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்துப் பெருங்குளத்தில் திருவழுதீசுவரர் கோயிலில் சிவயோகி களாய் வரும் தேசாந்திரிகளுக்கு உணவு வழங்கத் தானம் வழங்கப் பட்டுள்ளது. கன்னியாகுமரிக் கோயிலிலும் பிராமணர் பலருக்கு முதற் குலோத்துங்கசோழன் ஆட்சிக்காலத்தில் உணவு வழங்க நற்றாயர்குடி. பெருங்குடி, செங்களூர், வீரநிலை, சாத்தனேரி முதலிய இடங்களிலுள்ள சாலா போகத்திலிருந்து நெல் அளக்கப்பட்டுள்ளது.

பிற்காலப் பாண்டியர் காலத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் தாமிரபரணிக் கரையில் அமைந்த சித்தக்கரையில் அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றைப் பின்பற்றிய (முறையே) ஏகதண்ட திரிதண்ட சன்னியாசிகளுக்கும் பிராமணர்களுக்கும் உணவு வழங்க அள காட்டுப் புதுவூர் திருநீலகண்டன் இராசாக்கள்நாயனான தொண்டை மானால் பத்து மா நிலம் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. சேரன் மாதேவிப் பகுதியில் இருந்த முடிவழங்குபெருமாள் மடத்தில் திரி கண்டசன்னியாசி உள்ளிட்ட பதினேழு பேருக்கு உணவு வழங்கச் கீழநெட்டூரைச் தொண்டைமானால் கருங்குளத்தில் இறையிலி யாக நிலம் தரப்பட்டுள்ளது.திருவாலீசுவரம் பகுதியில் இருந்து மடங்களில் மகேசுவரர்க்கும் தபசியருக்கும் உணவு வழங்கப்பட் டுள்ளது. திருநெல்வேலி, கிரியம்மாள்புரம், கட்டாரி மங்கலம், வழுதூர், வாசுதேவநல்லூர், புதுப்பாளையம், கடையநல்லூர், சதுர் வேதிமங்கலம், சிவபுரி, கானூர், அழகர்கோயில், மதுரை, இராமேசு வரம் போன்ற பல இடங்களில் யாத்திரியர்களுக்கும் தபசியர்க்கும் மகேசுவரர்க்கும் மடங்களிலும் கோயில்களிலும் உணவு வழங்க 12, 13ஆம் நூற்றாண்டுகளில் பலரால் தானங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உணவுதானம் பிராமணர், துறவியர், கல்வியாளர்கள், தேசாந்திரிகள்,புனித யாத்திரிகர், தீர்த்தமாடி வருகின்றவர்கள், பசித்து வந்தவர்கள் ஆகியோர்க்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. 1 அரசன், அரசி, அதிகாரிகள், பொருட்செல்வம் படைத்தவர்கள் ஆகியோரின் ஆதரவில் இவற்றினை மடங்களும் கோயில்களும் முன்னின்று செய்திருக்கின்றன. உணவு தானத்திற்காக வழங்கப்பட்ட நிலதானம் ‘பிச்சாபோகம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. உணவுதானம் வழங்கும் நாட்களில் அமாவாசை நாள் குறிப்பிடத்தக்க நாளாக விளங்குகின்றது. சிவராத்திரி, உத்திரட்டாதித் திருநாள், மார்கழித் திருநாள் போன்ற திருநாட்களிலும் ரோகிணி, பரணி போன்ற நட்சத்திரம் வரும் நாட்களிலும் சிறப்பு வழிபாடு நாட்களிலும் புண்ணியம் பெற வேண்டும் என்ற நோக்கில் பலரால் தானமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”