செப்புத் திருமேனிகளில் வழிபாடு சமயச்சான்றோர் :
தமிழகத்தில் பக்திமார்க்க அடிப்படையில் சைவ சமயம் தழைத்தோங்க நாயன்மார்களும், வைணவம் செழிக்க ஆழ்வார்களும் அரும்பாடுபட்டுள்ளனர். சைவ சமயத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், வைணவ சமயத்தில் பன்னிரு ஆழ்வார்களும், முக்கியமானவர்களாவர். இச்சமயச் சான்றோர்களுக்கு மக்கள் சிறுக்கோயில்கள் கட்டியும், சிற்பங்கள் உருவாக்கியும் வழிபாடு நடத்தியுள்ளனர்.
சோழர் காலத்திலேயே அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோருடைய செப்புத் திருமேனிகள் செய்யப்பட்டிருக்கின்றன. வைணவ சமயக் கோயில்களில் ஆழ்வார்கள் சன்னிதி என்னும் சிறு கோயில்கள் கட்டப்பட்டு, அவற்றில் ஆழ்வார்களுடைய சிற்பங்கள் நிறுவப்படலாயின. கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோருடைய உலோகத் திருமேனிகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றளவும் நிலவி வருகிறது.
நாட்டியமும் செப்புத்திருமேனிகளும் :
தமிழர் வளர்த்த அருங்கலைகளுள் இசையும், நடனமும் முக்கிமானவையாகும். நம் முன்னோர் நாதத்திற்கும், நாட்டியத்திற்கும் முதல்வனாக நடராசப் பெருமானைக் கருதி வழிப்பட்டுள்ளனர். சங்க காலத்திலிருந்தே தமிழகத்தில் நாட்டியக்கலை சிறந்திருந்தது. சிலப்பதிகாரத்தில் செஞ்சடையண்ணல் திரிபுரம் எரிய ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம் முதலிய நடனங்களும், அஞ்சனவண்ணன் ஆடிய அல்லியம், குடம், மல்லினாடல் முதலியவையும், முருகவேல் ஆடிய துடியும், காமன் ஆடிய பேடியாடலும், அயிராணி ஆடிய கடையமும், மாயவன் ஆடிய மரக்காலும், திருவின் செய்யோள் ஆடிய பாவையும், உமையவள் ஒரு திறனாக இறைவன் ஆடிய கொட்டிச் சேதமும் சிறப்புறக் கூறப்பட்டுள்ளன. ஆடற்கணிகையாகிய மாதவி நாட்டியக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றுத் தலைக்கோல் பட்டமெய்தியவள் என்பதும் சிலம்பு கூறும் செய்தியாகும்.
நம் நாட்டில் கட்டப்பட்ட கோயில்கள் பலவற்றில் நாட்டியம் நியமிக்கப்பட்டிருந்தமையைக் கல்வெட்டுகளின் வாயிலாக அறிகின்றோம். நடனக் கலைக்கு, முதன்மை அளித்த மன்னர்கள் இக்கலைஞர்களுக்கு வேண்டிய பொருளும், வீடும், நிலங்களும் கொடுத்துள்ளனர். சோழர் காலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் சிவனுடைய பல்வேறு நடனங்களைக் குறிக்கும் செப்புத்திருமேனிகள் சோழராட்சியில் தான் அதிகமாக நிறுவப்பட்டன.
செப்புத் திருமேனிகள் ஒவ்வொரு காலத்திலும் பல பரிணாமங்களைப் பெற்றுள்ளது. படிமங்களில் உடலமைப்பு ஆடைகள், அணிகலன்கள், அலங்காரம் என்று அதில் கலை விற்பன்னர்கள் புகுத்தியுள்ளதை அறிய முடிகிறது. அதேபோல் பெண்டிரைக் குறிக்கும் படிமங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படுத்திய மாற்றங்கள் அறியமுடிகிறது. முகத்தில் உள்ள உணர்ச்சிக் குறிப்புகளைப் படிமத்தில் சிற்ப கலைஞர்கள் வெளிப்படுத்திய விதம் சிறப்புகுரியது.
ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை பல மாற்றங்கள் படிமத்தில் புகுத்தியுள்ளனர். கற்பனைக்கு எட்டாத வகையில் தங்கள் கலைத் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். நம் நாட்டின் சிறப்பை வெளியுலகத்துக்கு காட்டுவது இத்தகைய கலைகள் ஆகும். இன்று பல இடங்களில் இக்கலைகள் வளர்ச்சிப் பெற்று வருதலை நாம் பார்கிறோம். நம் சிற்ப கலைகளை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். இதில் சங்ககாலம் தொடங்கி நாயக்கர் காலம் வரை உள்ள கலைப்பாணிகள் அறிய முடிகிறது.
செப்புத் திருமேனிகள் – முனைவர் ம. பாபு
370/-