நாகப்பட்டினம் முதல் சுவர்ணதீபம் வரை – NAGAPATTINAM TO SUVARNADWIPA: REFLECTIONS ON THE CHOLA NAVAL EXPEDITIONS TO SEA (TAMIL)

நிலத்து வழியே நடைபெற்ற பட்டுவர்த்தகப் பாதைக்கு (Silk Road) அடுத்ததாக உலகளாவிய நிலையில் ஆராயப்பட்டு வருவது கடல்வழி பட்டு வர்த்தகப் பாதையாகும் (Maritime Silk Road). ஆயினும் இந்தியப் பெருங்கடல் ஆய்வுகள் இரண்டு காலக் கட்டத்தைப் பற்றி மட்டுமே ஆராய்ந்து வந்திருப்பது விநோதமாக உள்ளது. ‘பழங்காலம்’ என்று மத்திய தரைக் கடல் தொடர்பையும், ஐரோப்பியர்கள் இடம்பெற்ற தொடக்க நவீன வரலாற்றுக் காலத்தையும் பெரும்பகுதி ஆய்வுகள் முன்வைத்துள்ளன. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் பதினாறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட நீண்ட காலப் பகுதியில் இந்தியப் பெருங்கடலில் நடந்த பரிமாற்றங்கள் அனைத்துலக ஆய்வுகளில் குறைந்தே எழுதப்பட்டுள்ளன. இந்தியப் பெருங்கடல் ஆய்வில் உள்ள இந்த வரலாற்று இடைவெளியைச் சற்றே குறைக்க, தென்னிந்தியச் சோழர்களின் கடற்பயணங்கள் பற்றிய இந்நூல் ஓரளவு உதவும் என நம்புகிறோம்.

Buy Online: https://heritager.in/shop/nagapattinam-to-suvarnadwipa-tamil/

முதலாம் இராஜேந்திர சோழனின் ‘அலைகடல் நடவுட் பலகலஞ் செலுத்தி’, பன்னிரண்டுக்கும் அதிகமான துறைமுக நகரங்களை வென்றதோடு, தென்கிழக்காசிய அரசான ஸ்ரீவிஜயப் பேரரசினை முற்றுகை இட்டது இந்திய வரலாற்றில் ஓர் திருப்பு முனையாகும். கி.பி. 1025-இல் நிகழ்ந்த இந்தக் கடல் முற்றுகை இந்திய-தென்கிழக்காசிய பண்பாட்டுப் பரிமாற்றத்தில் ஓர் முக்கிய நிகழ்ச்சியாகும். கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே தென்கிழக்காசிவுடனான இந்தியத் தொடர்புகள் மிகவும் உறுதியாக இருந்தன. சுமார் பத்தாம் நூற்றாண்டு வரை, வங்காள விரிகுடாவின் இருபகுதிகளிலும் இருந்த நாடுகளிடையே வர்த்தகத்தோடு பண்பாட்டுப் பரிமாற்றமும் நடைபெற்றது. பௌத்தமும், இந்து சமயமும் தென்கிழக்காசியாவில் உருவாகிய பண்பாடுகளில் ஆழ்ந்த இடத்தைப் பெற்றன. அமராவதியின் பௌத்த கலையும், பல்லவர்களின் கிரந்த எழுத்துகளும் இந்தோனேசியாவின் பண்பாட்டில் ஐந்தாம் நூற்றாண்டிலேயே இடம்பெற்றன. இவற்றின் தொடர்ச்சியாகப் பல்லவ சோழர் கலைகள் தென்கிழக்காசிய கட்டிடக் கலையில் பிரதிபலித்தன.

தென்னிந்தியாவுடன் தென்கிழக்காசியா கொண்டிருந்த உறவும் சோழர்கள் 1025-ஆம் ஆண்டில் ஸ்ரீவிஜயாமீது மேற்கொண்ட கடற்படையெடுப்பும் பின்னர் 1070-ஆம் ஆண்டில் நடந்த மற்றுமொரு படையெடுப்பும் வரலாற்று ஆராய்ச்சியாளர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய வரலாற்று ஆய்வாளர்களில் மலையெனக் கருதப்படும் நீலகண்ட சாஸ்திரி அவர்கள் 1955-ஆம் ஆண்டில், “கடாரத்து (ஸ்ரீ விஜய) மன்னனின் மீது கடற்படையெடுப்பு ஏன் நடத்தப்பட்டது? அதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டன?” எனும் கேள்வியை எழுப்பினார். அவருக்குக் கிடைத்த தகவுகளின் அடிப்படையில் பின்வரும் முடிவுகளைத் தந்திருந்தார்: “கிழக்கே நடந்த சோழர்களின் கடல் வாணிபத்தில் ஸ்ரீவிஜயம் தடைகளை விதித்திருக்க வேண்டும்; அல்லது இராஜேந்திரனின் திக்விஜயத்தின் ஓர் கூறாக இருந்திருக்கலாம். தனது மக்களுக்கு நன்கு தெரிந்த கடல் கடந்த நாடுகளின் மீது படையெடுப்பு நடத்தித் தனது புகழை அவன் நிலைநாட்டிக் கொண்டிருக்கலாம். இதனால், அவன் தனது ஆட்சிக்குப் பெரும்புகழ் சேர்க்க நினைத்திருக்கலாம்.

1983-இல் அமெரிக்க வரலாற்றாசிரியரான G. W. ஸ்பென்சர் இலங்கை, ஸ்ரீவிஜயம் மீது சோழர்களின் படையெடுப்பின் விளைவுகளை ஆராய்ந்து தனியொரு நூலை வெளியிட்டார். சோழர்களின் படையெடுப்பை அவர் ‘விரிவாக்க அரசியல்” என வருணித்ததோடு, 1976-இல் வெளியிட்ட ஒரு கட்டுரையில் ‘சூறையாடும் அரசியல்’4 என வருணித்திருந்தார். அண்மைய கால ஆய்வுகள், வாணிபம்தான் இராஜேந்திரன் படையெடுப்புக்கு முக்கியக் காரணமென முன்வைத்துள்ளன. மத்திய கால வர்த்தகச் சங்கங்களை ஆராய்ந்த மீரா ஆப்ராஹாம், “தமிழ் வர்த்தகர்கள் அவ்வட்டாரங்களில் வர்த்தக உரிமைகளைப் பெறவே படையெடுப்பு நிகழ்ந்தது. வர்த்தகத்தால் கிடைத்த இலாபம் சோழ அரசுக்கும், மன்னர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் ஏற்றதாக இருந்தது.”” மிகவும் அண்மைய காலத்தில் டான்சென் சென் என்பாரின் ஆராய்ச்சி, இதுவரை ஆராயப்படாத சீனத் தகவல்களைக் கொண்டு, ‘வர்த்தக நோக்கத்தையும் குறிக்கோளையும்’ படையெடுப்புக்கு விளக்கமாக வழங்கியுள்ளார். சோங் ஆட்சிகால ‘சூவான் ஸி’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ள கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார். ஸ்ரீவிஜய துறைமுகங்களுக்குச் சென்று வரிகட்டாத கப்பல்களை ஸ்ரீவிஜயம் தீக்கிரையாக்கியதைச் சீன நூல் குறிப்பிட்டுள்ளது. “இது உண்மையானால், தென்னிந்திய துறைமுகங்களுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்த வாணிபத்தில் இடைமறியல் செய்த காரணத்தால் சோழர்கள் 1025-லும், 1070-களிலும் கடற்படைத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம்.” இதர ஆய்வாளர்கள், இராஜேந்திர சோழனின் ஸ்ரீவிஜயப் படையெடுப்பினை இந்தியப் பெருங்கடல் வாணிபத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் விளக்கியுள்ளனர். புதிய ஆசிய பேரரசுகளின் எழுச்சியானது பத்தாம்

நூற்றாண்டின் பிற்பகுதியில் கடல்வழி வாணிபத்தில் கிடைத்த மேம்பட்ட இலாபத்தை அடைவதில் போட்டிகள் உருவானது, சோழர்களின் கடற்படை வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் காரணமாக எடுத்தியம்பப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் படைக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், சோழர்களின் கடற்படையெடுப்பைப் புரிந்து கொள்வதில் உள்ள குழப்பங்களை ஆராய்ந்தன. மத்திய கால எழுத்துவடிவிலான ஆதாரங்களும், அகழ்வாராய்ச்சிகளால் கிடைக்கப்பட்ட ஆதாரங்களும் போதிய அளவில் இல்லை என்பதை மாநாட்டுக் கட்டுரைகள் உணர்த்தின. கடற்படையெடுப்புப் பற்றிய செய்தி, இன்னமும் ஒரேயொரு தகவலைச் சார்ந்தே உள்ளது. இராஜேந்திரச் சோழனின் பிரசித்தியான கல்வெட்டு ஒன்றுதான் அடிப்படையாக விளங்குகிறது.’ வியக்கத்தக்க செய்தி என்னவென்றால், இராஜேந்திரச் சோழனின் படையெடுப்பு பற்றிய செய்தி எதுவும் சீனத் தகவல்களில் இல்லை. ஆயினும், தென்கிழக்காசிய நாடுகளுடனும் சீனாவுடனும் சோழர்கள் வைத்திருந்த நேரடித் தொடர்பு பற்றி அக்கால வடமொழி, தமிழ், சீனம் முதலான மொழிகளில் உள்ள தகவல்கள் பெரிதளவில் இப்பொழுது கிடைத்துள்ளன.10 இவற்றின் அடிப்படையில், இந்தியப் பெருங்கடல் வாணிபத்தை நிலைநிறுத்தச் சோழர்கள் கப்பற்படையெடுப்பு நடத்த வேண்டியதற்கான காரணங்களை நாம் ஊகிக்க முடிகிறது. தற்போது சேர்ந்துள்ள தகவல்கள் பல அனைவரையும் சென்றடையாமலும் மொழிப்பெயர்க்கப்படாமலும் உள்ளன. இதனால், இந்த நூலின் தொகுப்பாசிரியர்கள் உட்பட, இந்திய வரலாற்று ஆசிரியர்கள், இந்தியப் பெருங்கடல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் நோபுரு கரஷிமா, Y.சுப்பராயுலு, டான்சென் சென் ஆகியோருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். மாநாடு முடிந்த பின்னர், இந்த நூலுக்கென இணைப்பு அத்தியாயங்களாக, மூன்று பேராசிரியர்களும் இதுவரை வெளியிடப்படாத தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளனர். இவை முதன்முதலாக இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் பேராசிரியர் கரஷிமாவும் பேராசிரியர் சுப்பராயலுவும் மேலும் சில அத்தியாயங்களைப் படைத்து, இந்த நூலுக்கு ஒரு முழுமை தர உதவினர். இவற்றால், சோழர்களின் கடற்பயணங்கள் ஆய்வில் தற்போதைக்கு ஒரு முழுமையான தோற்றத்தை இந்நூலின்வழி காணமுடிகிறது. இவை எதிர்கால ஆராய்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.

இந்நூலின் முதல் மூன்று அத்தியாயங்கள், அக்கால ஆசிய வரலாற்றின் அடிப்படையிலும் இந்தியப் பெருங்கடல் வாணிப அடிப்படையிலும் சோழர்களின் கடற்பயணங்களை ஆராய்கின்றன. ஹெர்மன் குல்கே எழுதிய முதல் அத்தியாயம் இராஜேந்திர சோழன், ஸ்ரீவிஜய துறைமுகங்களின் மீது நடத்திய தாக்குதலின் பின்னணியை ஆராய்கிறது. இராஜராஜனும், அவரின் புதல்வர் இராஜேந்திரனும் தென்னிந்தியக் கடல் வாணிபத்தைக் கட்டிக்காப்பதற்காகச் சுற்றியுள்ள தீவுகளையும் கடல் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எகிப்தில் பாத்திமைட்ஸ் பாத்திமைட்ஸ் பேரரசுக்கும், சீனாவில் சோங் பேரரசுக்கும் இடையில் நிகழ்ந்த கடல் வாணிபத்தின் இலாபத்தை அடைவதில் அவர்கள் நுணுக்கமான கவனம் காட்டினர். இதனால், மலாக்கா நீரிணையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்த ஸ்ரீவிஜயத்துடன் இயற்கையாகவே முரண்பாடுகள் எழுந்தன. மலாக்கா நீரிணை சீனச் சந்தையின் வாயிலாக விளங்கியதால் சோழர்கள் அதனைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முயன்றனர். அதே சமயத்தில் சோழர்கள் ஸ்ரீவிஜயத்துடன், நாகப்பட்டினத்தில் இருந்த ஸ்ரீவிஜய கோயில்களுக்குத் தானங்கள் வழங்கி நட்பு அடிப்படையிலான உறவுகளையும் வளர்க்க முயன்றனர். வங்காள விரிகுடாவில் நடந்த வாணிபப் போட்டா போட்டியை குல்கே தனது கட்டுரையில் விளக்கியுள்ளார். டான்சென் சென் எழுதியுள்ள இரண்டாவது அத்தியாயம், சோழ-ஸ்ரீவிஜய-சீன முக்கோண உறவுகளை விவரிப்பதோடு, பத்தாம் நூற்றாண்டு பிற்பகுதியில் இந்தியப் பெருங்கடல் வாணிபத்தில் சீனாவை ஆண்ட சோங் பேரரசின் ஆதிக்கத்தை ஆராய்கிறார். சோழர்களின் கடற்படையெடுப்பு ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் பொதுவான ஆராய்ச்சி வழிகளை விடுத்து, சீனர்களின் தகவல்களை மட்டுமே கொண்டு டான்சென் சென் புதிய விளக்கங்களைத் தருகிறார். தொடக்கத்திலிருந்தே, சோழ- ஸ்ரீவிஜய உறவுகள் நட்புமுறையில் செயல்படவில்லை என்கிறார் டான்சென் சென். சோழர்களை ஆராய்ந்த நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தொடக்கத்தில் நட்புடன் இருந்ததாகவும், பின்னர்தான் முறிவு ஏற்பட்டது என்று கூறுவதை, டான்சென் சென் அவர்களின் கட்டுரை மறுக்கிறது. மாறாக, ஸ்ரீவிஜயத் தூ தர்கள் தொடர்ந்து சோழர்களைப் பற்றிய பொய்யான தகவல்களையே சீனாவின் சோங் அரசவைக்குத் தந்ததை அவரது கட்டுரை குறிப்பிடுகிறது. சோழர்களின் படையெடுப்புப் பற்றிச் சீனத் தகவல்கள் எதுவும் குறிப்பிடாததற்கு இதுவே காரணமாகலாம். சோழ நாடு தங்களுக்கு ஆட்பட்ட நாடு என ஸ்ரீவிஜயம் கூறிவந்திருப்பதில் இருந்து இது புலப்படுகிறது. மஜும்தார் அவர்கள் குறிப்பிட்டதுபோல், கி.பி.1017-ஆம் ஆண்டிலேயே சிறு தாக்குதல் ஒன்றைச் சோழர்கள் மேற்கொண்டனர் என்பதை டான்சென் சென் அவர்களின் கட்டுரை குறிப்பிடுகிறது. சோழர்களின் கடற்படையெடுப்பு, தென்னிந்தியாவுக்கும் சோங் சீனாவுக்கும் இடையில் வர்த்தகத்தை வளர்க்கவே மேற்கொள்ளப்பட்டதென அவரின் கட்டுரை விளக்குகிறது. கரஷிமா எழுதிய மூன்றாவது அத்தியாயம், தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் அவர் மேற்கொண்ட சீனப் பீங்கான்கள் ஆராய்ச்சி சீன-இந்திய வர்த்தகத்தை விளக்குகிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய சீன-தென்னிந்திய வர்த்தகம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து துரித வளர்ச்சியடைந்ததை அவரது கட்டுரை விளக்குகிறது. சோழமண்டல- மலபார் கடற்கரைகளில் அவர் தோண்டியெடுத்த சீனப் பீங்கான் ஓடுகளைக் கொண்டு, சீனத் தகவல்களில் கூறப்படும் இடங்களோடு பெரியபட்டினம், காயல், கொல்லம் முதலான இடங்களை ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். இராஜேந்திர சோழனின் தலைநகரமாகிய கங்கைகொண்ட சோழபுரத்தில் கண்டெடுத்த யின்குயிங் பீங்கான் ஓடுகள், சோழத் தூதர்கள் சீன அரசவையில் பெற்ற பரிசுப்பொருட்களாக இருக்குமென்று அவர் குறிப்பிடுகிறார். அவரது கட்டுரையில் வர்த்தகச் சங்கங்கள் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

நூலின் நான்காவது, ஐந்தாவது அத்தியாயங்கள் நாவாய் தொடர்பிலான தகவல்களையும், கடற்படை பற்றியும் விளக்குகின்றன. விஜய் சக்குஜா, சங்கீதா சக்குஜா ஆகியோர் எழுதிய கட்டுரை, வரலாற்றுத் தகவல்கள் இல்லாத சூழலில், சிறப்பானதொரு விளக்கத்தை ஏற்படுத்த முயன்றுள்ளது. 1025-ஆம் ஆண்டில் கடற்படையெடுப்பு மேற்கொண்ட சோழர்களிடம், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர் அறிந்திருந்த மாக்கடல் அறிவு இருந்ததென அவர்கள் கருதுகின்றனர். இந்த நீண்ட கால அறிவோடு, சோழப் பேரரசிடம் அண்டைத் தீவுகள் மீது கடற்போர் நடத்திய அனுபவமும் இருந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கை, இலங்கை, மாலத்தீவுகள், அந்தமான், கடாரம் வரை அவர்களுக்கு இருந்த கடல் அனுபவம், அவர்களுடைய படையெடுப்புக்குத் தகுந்த பின்ணணியைத் தந்திருந்தது. வான சாஸ்திரத்திலும், கப்பல் கட்டுவதிலும், கடல் பயணக் குறிப்புகளையும் அவர்கள் பெற்றிருந்ததை அவர்கள் விளக்குகின்றனர். சோழர்களின் கடற்படைக்கான கப்பல்களை, பெருங்கடல் பயண வர்த்தகக் கப்பல்கள் போன்றவற்றைப் பெற்றிருந்தனர் என அவர்கள் குறிப்பிடுகின்றனர். சுப்பராயுலு அவர்களின் சோழர்களின் கடற்படைக் கப்பல்கள் பற்றிய கட்டுரை, சோழர்கள் மேற்கொண்ட கடற்படையெடுப்பில் உள்ள குழப்பங்களை முன்வைத்து ஆராய்கிறது. கல்வெட்டு ஆராய்ச்சியாளரான அவர், கல்வெட்டுக்களில் பெரும்பாலானவை நன்கொடைகளைக் குறிப்பதற்கென்றே எழுதப்பட்டன என்கிறார். அதனால், சோழர்களைப் பற்றிய செய்தி எதுவும் நேரடியாக கிடைக்கவில்லை. நிலத்தின் வழியாகவும் கடல் வழியாகவும் சோழர்கள் மேற்கொண்ட போர்முறைகள் அவற்றின் வழி தெளிவாக அறிவதற்கில்லை. 1187-ஆம் ஆண்டில் படைக்கப்பட்ட ஒரேயொரு கல்வெட்டில்தான், ‘கடலோரப் படைத்தளபதி’ எனும் பதவி கப்பற்படையில் இருப்பது தெரியவருகிறது. இராஜேந்திரனின் கல்வெட்டுக்களில் ‘கலம்’ என்ற சொல் கப்பலைக் குறிக்கிறது. 1088-இல் பாருஸ்(சுமத்திரா) எனுமிடத்தில் நிறுவப்பட்ட கல்வெட்டில், ‘மரக்கலம்’ அல்லது மரத்தால் ஆன கப்பல் எனும் செய்தி சோழர்களின் வணிகக் கப்பல் பற்றிய தகவலைத் தருகிறது.
இராஜேந்திரனின் தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரம் பற்றியும், சோழர்களின் துறைமுகங்களில் முக்கியமானதான நாகப்பட்டினம் பற்றியும் தொடர்ந்து வரும் இரு அத்தியாயங்கள் ஆராய்கின்றன. இராஜேந்திரன் அரியணை ஏறிய ஆண்டில் கங்கைகொண்ட சோழபுரம் சோழப் பேரரசின் தலைநகராக மாறியிருக்கலாம் என S. வசந்தி குறிப்பிடுகிறார். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்நகர் பாண்டியர்களால் தரைமட்டமாக்கப் பட்டிருக்கலாம். இராஜேந்திரனின் தஞ்சைப் பெரிய கோயிலைத் தவிர்த்து, அக்காலத் தமிழ்ப் பாக்கள் புகழும் கங்கைகொண்ட சோழபுரம் அதனைச் அதனைச் சுற்றிவாழ்ந்த கிராமமக்களாலும் அழிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இன்றும் தங்கள் வீடுகளைக் கட்ட கங்கை கொண்ட சோழபுரத்தின் கற்களை எடுத்துச் செல்கின்றனர். தமிழ் நாட்டு அகழ்வாய்வுத் துறையின் அகழ்வாராய்ச்சிலிருந்து, பல பழங்காலப் பொருட்களும், அழகுப் பொருட்களும், சீனப் பீங்கான்களும் கிடைத்துள்ளன. சேஷாத்திரியின் கட்டுரை, நாகப்பட்டினத்தின் வரலாற்றை இலக்கியத் தகவல்கள் கொண்டு விளக்குகிறது. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னதாக உள்ள தகவல்களின் அடிப்படையில் (எடுத்துக் காட்டாக, சங்ககாலக் கவிதைகள், புட்டோளமி, பாலிமொழி இலக்கியம்), நாகப்பட்டினம் பற்றி எந்தவிதக் குறிப்பும் இல்லாததை அவர் சுட்டிக்காட்டுகிறார். நாயன்மார்களில் ஒருவரான அப்பர் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகப்பட்டினத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் நரசிம்மவர்மன், சீனாவுக்கு அனுப்பிய தூதுக்குழு பற்றியும், அவன் கட்டிய சீனக் கோயில் பற்றியும் பிரிட்டிஸ் நூலகத்தில் கிடைத்த பதினெட்டாம் நூற்றாண்டு ஓவியம் ஒன்றையும் சேஷாத்திரி நமக்குக் காட்டுகிறார். சோழர்கள் காலத்தில் நாகப்பட்டினம் அடைந்த உச்சநிலை வளர்ச்சியுடன் கட்டுரை முழுமைபெறுகிறது. சோழர்கள் காலத்தில்தான் ஸ்ரீவிஜயம், நாகப்பட்டினத்தில் பௌத்தக் கோயிலொன்றைக் கட்டி அதற்கான நிலதானத்தைச் சோழர்களிடமிருந்து பெற்று நட்பினை வளர்த்துக்கொள்ள முயன்றது.

அரசியல்

தொடரும் இரு அத்தியாயங்கள், சோழர் காலத்திய தென்னிந்திய வர்த்தகச் சங்கங்களை ஆராய்கின்றன. ஸ்ரீவிஜயத்திற்கு எதிரான கடற்படையெடுப்புக்கு இந்த வர்த்தகச் சங்கங்களே இயக்கு சக்தியாக சோழர்களுக்கு இருந்தன. நோபுரு கரஷிமாவின் ஆய்வின் இரண்டாவது பகுதியாக அவரது தென்னிந்திய வர்த்தகச் சங்கங்கள் பற்றிய கட்டுரை அமைந்துள்ளது. சுப்பராயலுவும் சண்முகமும், அவர்தம் ஆய்வுக் குழுவினருடன் முன்னூ றுக்கும் அதிகமான கல்வெட்டுக்களைச் சேர்த்து, அவற்றிலுள்ள செய்திகளின் அடிப்படையில் வர்த்தகச் சங்கங்களைப் பற்றிக் கட்டுரை எழுதியுள்ளனர். ஐநூற்றுவர் அல்லது ஆயஹோலே என்றழைக்கப்பட்ட வணிகக் குழுமம் பற்றி அவர்களின் கட்டுரை ஆராய்கிறது. பத்தாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து தமிழகம் முழுவதும் இந்த வணிகக் குழுமம் பரவி செயல்பட்டு வந்துள்ளது. வணிகக் குழுமங்களின் ஆராய்ச்சி, அவர்களைப் பற்றிய புகழாரங்களை ஆராயும் அதே வேளையில், அவர்களுக்கும் சோழப் பேரரசுக்கும் இருந்த தொடர்பினை ஆராய்கிறது. பதினோறாம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகள் சோழப் பேரரசு உச்சநிலையை அடைந்த காலமானாலும், அக்காலக் கட்டத்தில் வணிகக் குழுமங்களின் கல்வெட்டுக்கள் மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. ஆனால், இன்றைய கர்னாடகா மாநிலப் பிரதேசத்தில் மட்டும் கல்வெட்டுக்கள் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. இந்தப் புதிரை விளக்க முயலும் கராஷிமா, வணிகக் குழுமங்களின்மீது சோழ அரசு விதித்த கட்டுப்பாட்டைக் காரணமாகக் காட்டுகிறார். அஞ்சுவண்ணம் எனப்படும் வணிகக் குழுமம் சிறியதோர் அமைப்பு. ஆனால், இந்து மாக்கடல் வாணிபத்தில் அவர்களும் முக்கிய இடத்தை வகித்தனர். சுப்பராயலு தனது கட்டுரையில் அவர்களை ‘மேற்கு ஆசிய வணிகர்கள் கூட்டம்’ எனக் குறிப்பிடுவதோடு யூதர்கள், கிறித்தவர்கள், முஸ்லீம்கள் ஆகியோரை அஃது உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது என வருணிக்கிறார். மலபார், சோழமண்டலம், சாவகம் முதலான கடற்கரைப் பட்டினங்களில் அவர்கள் வாணிபம் செய்தனர். எடுத்துக்காட்டாக, கி.பி. 1220-இல் சிரியன் கிறித்தவர் ஒருவருக்கு கோட்டயத்தில் கொடுக்கப் பட்ட பட்டயத்தில் உள்ள கையொப்பங்கள் அராபிய, யூத மொழிகளில் உள்ளன. நாகப்பட்டினத்தில், முஸ்லீம் அஞ்சுவண்ணம் வணிகர்களுக்குத் தரப்பட்ட 12-ஆம் நூற்றாண்டு பட்டயம் தமிழில் உள்ளது. அஞ்சுவண்ணம் உறுப்பினர்கள் தென்னிந்திய வாணிபக் குழுமமான மணிகிராமம் குழுமத்துடன் ஒன்றிணைந்து செயல்பட்டது தொடர்பிலான சுப்பராயலுவின் விளக்கங்கள், தென்னிந்தியா உலக வர்த்தகத்தோடு கொண்டிருந்த தொடர்பை எடுத்தியம்ப உதவுகிறது.

இவற்றைத் தொடரும் இரண்டு கட்டுரைகள், இந்தியப் பெருங்கடல் வணிகத்திற்குப் புதிய விளக்கங்களைக் கொடுக்கின்றன. சோழர்களின் வணிகக் கொள்கையில் வணிகக் குழுமங்களுக்கு இருந்த முக்கியத்துவத்தை மீனாட்சிசுந்தரராஜனும் ‘ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அவற்றின் விரிவாக்கத்தைக் கி.பி. 1000-ஆம் ஆண்டில் ஆசிய கடல் வணிகத்தில் ஏற்பட்ட மாற்றங்களோடு இணைத்து ஆராய்கிறார். சோழர்களின் வளர்ச்சியால், சீனாவுக்கும் அராபியக் கடலுக்கும் இடையே நடந்த வாணிபம், பல உட்பகுதிகளைப் பெற்றது. அராபியக் கடல், வங்காள விரிகுடா, தென்சீனக் கடல், சாவகக் கடல் எனக் கடல் வாணிபம் பல பகுதிகளையும் இணைத்துச் செயல்படவேண்டியிருந்தது. இதனால், தெற்கு ஆசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் இருந்த துறைமுகங்கள் முக்கியத்துவம் பெற்றதோடு, அவற்றைக் கட்டுக்குள் கொண்டுவரவும் அனைவரும் வந்து செல்லும் இடங்களாக வைத்திருக்கவும் போராட்டங்கள் எழுந்தன. ஹேமா தேவரேயின் கட்டுரை, தென்கிழக்காசிய பண்பாடுகளில் இந்தியப் பண்பாட்டுத் தாக்கத்தை மேலோட்டமாகக் காட்டுவதோடு, இந்தியத் துணி வர்த்தகம் இரு வட்டார இணைப்பில் வகித்த பங்கை விளக்குகிறது. சோழர் காலத்தில் நெசவுத் தொழிலும், துணிகளுக்கு சாயமிடும் தொழிலும் துரித வளர்ச்சி கண்டதால், துணி வர்த்தகம் வழி பண்பாடு பரவலாயிற்று.
சோழப் பேரரசின் விரிவாக்கத்தால் பாதிக்கப் பட்ட இலங்கை பற்றியும், இந்தோனேசியா பற்றியும் மூன்று கட்டுரைகள் ஆராய்கின்றன. மானத்துங்காவின் கட்டுரை, தென்கிழக்காசியாவில் ஏற்பட்ட இந்தியப் பண்பாட்டுத் தாக்கத்தில் இலங்கையின் ஈடுபாடு பற்றி விளக்குகிறது. இராஜராஜன் இலங்கையை வென்ற பின்னர், பொலனாறு அவர்களின் நிர்வாகத் தலைநகராக விளங்கியது. இலங்கையில் கிழக்குக் கரையையொட்டி அந்நகரம் இருந்ததனால், திருகோணமலை துறைமுகமானது. மேலும், ஸ்ரீவிஜயத்துக்கு எதிரான கடற்படையெடுப்புக்கு முக்கியப் பணியும் ஆற்றியது. சண்முகத்தின் கட்டுரை, சங்ககாலம் தொட்டுத் தமிழகத்திற்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையே நடைபெற்ற கடல் வாணிபம் பற்றி குறிப்புகளிலும் அகழ்வாராய்ச்சியிலும் கிடைத்துள்ள தகவல்களை ஆராய்கிறது. இராஜேந்திர சோழனின் படையெடுப்பினால் இந்தத் தொடர்புகள் தற்காலிகமாகவே துண்டிக்கப்பட்டன என்கிறார் அவர். இந்தோனேசியக் கட்டிடக்கலை, சிலைகள், சிற்பக்கலை முதலானவற்றில் சோழர்களின் பண்பாட்டுத் தாக்கத்தை அவர், ஜாம்பி, தியங் மலைத்திட்டு, பரம்பானான் முதலிய இடங்களில் உள்ள கட்டடங்களைக் கொண்டு விளக்குகிறார். இருப்பினும் அவர் அனைத்தையும் சோழர்காலப் பிரதிபலிப்பாகக் குறிப்பிடாமல், ‘சாயல்களையும்’ ‘தாக்கத்தையும் மட்டும் வருணிக்கிறார். நீனி சுசாந்தியின் கட்டுரை, சோழ – ஸ்ரீ விஜயப் போராட்டத்தால் அயர்லங்கா அரசு வளர்ந்ததை வருணிக்கிறது. சாவகத்தில் வளர்ந்த அயர்லங்கா அரசு, ஸ்ரீ விஜய நறுமண உணவுப் பண்ட வாணிபத்தைச் சோழர்களின் உதவியால் கைப்பற்றியது. இராஜேந்திரனின் வெற்றியினால் கிழக்குச் சாவகத் தீவினை அயர்லங்கா தன் கீழ் ஒன்றிணைக்க முடிந்தது. இதனால் அயர்லங்கா சாவகத்தின் வரலாற்றில் புகழ்பெற்ற மன்னன் ஆகிறான்.

இந்திய -சீன உறவுகள் பற்றிய தகவுகள் சோழப் பேரரசு முழுமையாக வீழ்த்தப்பட்ட ஈராண்டுகளுக்குப் பின்னர் 1281-இல் தொடங்குவது, வரலாற்று முரண்பாடுகளில் ஒன்றெனலாம்.
சோழர்கள்தாம் சீனாவுடன் அதிக வாணிபம் செய்த அதிக வாணிபம் செய்த அரசு என்பதோடு அதிகமான கல்வெட்டுகளைத் தென்னிந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் விட்டுச் சென்றுள்ளதும் அவர்களே. குவாங்சூ நகரில் எழுப்பிய சிவன் கோயிலை, தென்னிந்திய சீன உறவுகளுக்கு அடையாளமாகக் காட்டுகிறார் ரீசா லீ. சிவன் கோயிலின் குடமுழுக்கிற்கும், 1279-இல் குப்லாய் கான் தென்சீனாவை முழுமையாக வெற்றிபெற்றதற்கும் தொடர்புபடுத்தி அவர் கட்டுரை படைத்துள்ளார்.

யுவான் அயல்நாட்டினர். குவாங்சூ நகர வெளிநாட்டு வணிகர்கள் மங்கோலியரின் ஆட்சி உருவாக உதவியதால், அவர்களுக்கு ஆதரவையும் சலுகைகளையும் புதிய அரசாட்சி வழங்கியது. சுமார் முந்நூறு உடைந்த பீங்கான் பகுதிகளைக் கொண்டு, அவை தென்னிந்திய பண்பாட்டோடு இணைந்தவை என அவர் காட்டுகிறார். ஆயினும், அவற்றை உருவாக்குவதில் பல சமூகங்கள் ஈடுபட்டிருந்ததையும் அவர் சுட்டுகிறார்.

மங்கோலியர்கள் சீனாவை ஆண்ட தென்கிழக்காசிய ஆய்வுக் கழகத்தைப் பாராட்டும் அதே வேளையில், அதன் இயக்குனர் தூதர் கேசவபாணியையும், அக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் டான்சென் சென், டாக்டர் ஜியோவ்ரே வேட், குமாரி ரகிலா யூசப் முதலானோருக்கு எனது நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராசிரியர் ஹெர்மன் குல்கே,
ஆசிய வரலாற்றுத் துறைத் தலைவர்,
கியல் பல்கலைக்கழகம், ஜெர்மனி.

(புத்தக முகவுரையில் இருந்து)

 

Related Post

காதல் பிரிவுக்கு ஒரு Pain killer. அறிவியல் கூறுவதென்ன? இலக்கியம் கூறுவதென்ன?காதல் பிரிவுக்கு ஒரு Pain killer. அறிவியல் கூறுவதென்ன? இலக்கியம் கூறுவதென்ன?

காதல் பிரிவுக்கு ஒரு Pain killer. அறிவியல் கூறுவதென்ன, இலக்கியம் கூறுவதென்ன?   காதல் தோல்வியால் மனம் உடைதல் என்பது கற்பனை கலந்த வெறும் உணர்வுமட்டும் அல்ல, உடல் அளவில் அது வலியை ஏற்படுத்துகிறது என அறிவியல் கூறுகிறது. எனவே, அதற்குத்

பழந்தமிழகப் பொருளாதாரத்தின் அச்சாணி வேளாண்மை மற்றும் வணிகத்தில் மகளிர் | |தமிழ்ச் செவ்வியல் நூல்களில்அறம் – அறிவியல் – சமூகம்பழந்தமிழகப் பொருளாதாரத்தின் அச்சாணி வேளாண்மை மற்றும் வணிகத்தில் மகளிர் | |தமிழ்ச் செவ்வியல் நூல்களில்அறம் – அறிவியல் – சமூகம்

பழந்தமிழகத்தின் சமூகக் கட்டமைப்பில் பெண்கள் வெறும் குடும்பத் தலைவிகளாக மட்டும் இல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கியத் தொழில்முனைவோராகத் திகழ்ந்தனர். ஐந்திணை நிலங்களிலும் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) அந்தந்த நிலத்தின் உற்பத்தி மற்றும் வணிக நடவடிக்கைகளில் மகளிரின் பங்களிப்பு