Menu

ஆயர்களின் உட்பிரிவுகள்

ஆயர்களின் உட்பிரிவுகள் :

தமிழக ஆயர்களிடையே பல்வேறு பிரிவுகள் காணப்படு கின்றன. ‘கல்கட்டி, பாசி பிரிவினர், பெண்டுக்குமெக்கி, சிவியன் அல்லது சிவாளன், சங்கு கட்டி, சாம்பன், புதுநாட்டார் அல்லது. புதுக்கநாட்டார், பெருந்தாலி, சிறுதாலி, பஞ்சரம் அல்லது பஞ்சாரங்கட்டி, மணியக்காரர், ஆனைக்கொம்பு, கள்ள, சோழியர். பெருமாள் மாட்டுக்காரர். பொதுநாட்டு இடையர், கருத்தக்காடு, போந்தன் அல்லது போகண்டன் போன்ற பிரிவு களை எட்கர் தட்சன் குறிப்பிடுகிறார்.

தமிழகம் முழுவதும் மேற்கண்ட பெயர்களையுடைய பிரிவினர் பரவலாக வாழ்ந்துவருகின்றனர். மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சிவகங்கை மானங்காத்தான் பகுதிகளில் பஞ்சாரங்கட்டி இடையர்கள் அதிகளவில் வாழ் கின்றனர். விருதுநகரில் சிறுதாலி இடையர்களும், மதுரைக்கு வடக்கேயுள்ள பகுதி மற்றும் இராமநாதபுரம் பகுதிகளில் பெருந்தாலி, சிறுதாலி, பஞ்சாரங்கட்டி பிரிவினரும் அதிகளவில் உள்ளனர். திருவண்ணாமலை செஞ்சிப் பகுதிகளில் சாம்பன் அல்லது சாம்பார் இடையர்கள் அதிகளவில் உள்ளனர்.

தற்போது ஆயரிடையே உட்பிரிவுகள் பெரும்பாலும் மறைந்து விட்டன. தங்களை அப்பெயர்களைக்கொண்டு அழைத்துக் கொள்வதில்லை. வயதானவர்களே தங்களுக்குள் உள்ள பிரிவு களைக் கூறுகின்றனர். இந்தத் தலைமுறை ஆயர்கள் தங்களுக்குள் பிரிவுகளைப் பார்ப்பது குறைந்துவிட்டது. ‘எல்லாம் ஒன்னாயி டுச்சி என்றும் எல்லோரும் யாதவர்கள் என்றும் எல்லோருடனும் திருமண உறவு வைத்துக்கொள்வதுண்டு என்றும் கூறுகின்றனர்.

பட்டப்பெயர்கள்

ஆயர்கள் பல்வேறு பட்டப்பெயர்களால் அழைக்கப்படு கின்றனர். அப்பெயர்களைத் தங்களுடைய பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்கின்றனர்.

‘அம்பலக்காரர், கரையாளர், கீதாரி, கோன்,கோனார், சேர்வை,தாஸ்,நம்பி,நாயுடு,பிள்ளை,மணியக்காரர், மந்திரி அல்லது மந்தடி, மன்றாடியார், யாதவ், ரெட்டி 2 போன்ற பட்டப்பெயர்கள் ஆயர்களிடையே வழக்கிலுள்ளன. மேலும் வாத்தியார் என்ற பட்டப்பெயரையும் அறியமுடிகிறது.

தற்போது பெரும்பாலும் தங்களை “யாதவ். “யாதவர்’ என்றே அழைத்துக் கொள்கின்றனர். தமிழகத்து ஆயர்களுக்குச் சாதிச் சான்றிதழ் ‘யாதவர்’ என்ற பெயரிலேயே வழங்கப்பட்டு வருகிறது. எனினும் பட்டப்பெயர்களைத் தம் பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்வதில் பேரளவிலான மாற்றங்கள் நிகழ்ந்துவிடவில்லை.

அம்பலக்காரர்

ஆராய்ந்து நீதி சொல்பவர்கள் அம்பலக்காரர் எனப்பட்டனர். அவரே ஊர் தலைவராகவும் விளங்குகிறார். ஆயர்களுள் ஊர் தலைவராக விளங்கக்கூடியவர்கள் இத்தகைய பட்டத்தைப் பெறு கிறார்கள். தமிழகத்தின் இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஊர்களில் இத்தகைய பெயர்களைப் பெறும் ஆயர்களைக் காணமுடிகிறது.

கரையாளர்

கரையாளர் என்ற சொல்லுக்கு நிலபுலன்களை மிகுதியாக உடையவர்கள் என்று பொருள். திருநெல்வேலி, செங்கோட்டைப் பகுதிகளில் நிறைய நிலங்களை உடைய ஆயர்கள் தங்களைக் கரையாளர்கள் என்று அழைத்துக்கொள்கின்றனர்.

கீதாரி

கீதாரி என்பவர் நான்கிலிருந்து ஆறு வரையிலான ஆடு மேய்க்கும் குடும்பத்திற்குத் தலைவர் ஆவார். ஆடுகளை மேய்க்கவேண்டிய திசை, ஊர் முதலியவற்றை முடிவுசெய்வதும், இடையர்களை ஒருங்கிணைப்பதும், கிடைக்குரிய கூலியைப் பெற்றுத்தருவதும், இவரது பணியாகும். ஆடு மேய்ப்பதில் எழும் சிக்கல்களை இவரே எதிர்கொள்கிறார். இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இத்தகைய பட்டத்தையுடைய ஆயர்கள் அதிகளவில் உள்ளனர். மாடு மேய்க்கும் ஆயர்களை ஒருங்கிணைப்பவர்களையும் கீதாரி என்று சொல்லப்படுவதுண்டு. அவர்களை ‘மாட்டு கீதாரி’ என்பர்.

கோன்,கோனார்

மாடுகளை வைத்திருக்கும் ஆயர்கள் ‘கோனார்’ என்றும். கோன்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். கோனார் என்னும் சொல்வழக்குப் பெரியாழ்வாரது காலத்திலிருந்தே வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கால்நடை மேய்ப்பவர்கள் கோனார் என்றே அறியப்படுகின்றனர். பெரும்பாலான ஆயர்களது பெயர்களுக்குப் பின்னால் கோனார் என்ற பெயர் சேர்த்து அழைக்கப்படுவதைக் காணமுடிகிறது. கோன் என்றும் பட்டம், மாட்டிடையர்களுக்குத் தலைமை தாங்கும் பண்பினால் பெற்ற பெயராகும். தொழு அமைப்பது. கிடை வைப்பது. மேய்ச்சல் வெளியை உறுதிசெய்வது, பிணக்குகளைத் தீர்ப்பது போன்றவை இவரது கடமையாகும்.

சேர்வை அல்லது சேர்வைதுரை

சொக்கம்பட்டி ஜமீன்தாரால் சேர்வைத்துரை என்று அழைக்கப்பட்ட ஆயர்களின் சந்ததியினர் சேர்வை என்றும் சேர்வைதுரை என்றும் அழைக்கப்படுகின்றனர். மிகக் குறைந் தளவிலுள்ள இவர்கள் திருநெல்வேலி சொக்கம்பட்டி பகுதி களிலும், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங் களில் உள்ள சில ஊர்களிலும் வாழ்ந்துவருகின்றனர்.

தாஸ்

திருநெல்வேலி, கோயம்புத்தூர், பாளையங்கோட்டை போன்ற மாவட்டங்களில் தாஸ் என்றும் பட்டத்தையுடைய சில ஆயர்கள் உள்ளனர். திருமாலின் அடிமை என்னும் பொருளில் தங்களைத் ‘தாசன்’ என்னும் பொருள்பட அழைத்துக்கொள்கின்றனர்.

நம்பியார்

இப்பட்டத்தையுடைய ஆயர்கள் கன்னியாகுமரியிலுள்ள குரண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் காணப்படுகின்றனர்.

நாயுடு

செங்கற்பட்டு மாவட்டம் அரக்கோணம் வட்டத்திலுள்ள சில ஊர்களிலும் வடஆர்க்காடு-ஆரணி, கொருக்கை,திமிரி. திருவத்திபுரம், சத்திய விசயநகரம், மாமண்டூர், மைநந்தல் முதலிய இடங்களில் நாயுடு என்னும் பட்டத்தையுடைய வடு காயர்கள் உள்ளனர். இவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள் ஆவர். தமிழாயர்களும் நாயுடு பட்டத்தைச் சேர்த்துக் கொள்வதாக அ.முத்துசாமி குறிப்பிடுகின்றார்.24

பிள்ளை

ஆயர்கள், பிள்ளை என்னும் பட்டத்தையும் கொண்டவர் களாக உள்ளனர். இவர்கள் நாகர்கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பரவலாக வாழ்கின்றனர். நாகர்கோயிலில் உள்ள இவ்வாயர்களில் ஒரு பிரிவினர் திருமணத்தின்போது தனது அக்காவின் மகளை மணப்பதில்லை. அத்தை மாமன் மகளை மட்டுமே மணக்கின்றனர்.

மணியக்காரர்

ஊர், கோயில் முதலியவற்றில் மேல் விசாரணை செய்வோர் மணியக்காரர் எனப்படுகிறார். இத்தகைய பணியைச் செய்யும் ஆயர்கள் இப்பட்டத்தைப் பெயருடன் இணைத்துக்கொள் கின்றனர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படு கின்றனர்.

மந்தடி

மந்தைகளில் மேய்ப்பதால், திருத்தணி, திருவேலங்காடு. புல்லரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வாழும் ஆயர்கள் மந்தடி என்று அழைக்கப்படுகின்றனர்.

மந்திரி

அமைச்சர்,சேனைத் தலைவன், வருங்காரியஞ் சொல்வோன் ஆகியோர் மந்திரி என்று அழைக்கப்படுவர். ஆயர்களில்
இத்தகைய நிலைகளில் இருந்தோர் மந்திரி என்னும் பட்டப் பெயரால் அறியப்படுகின்றனர். இவர்கள் ஆம்பூர், குடியாத்தம், பெரணமல்லூர், பேராணாம்பட்டு, போரூர், வந்தவாசி, வாணியம் பாடி ஆகிய ஊர்களில் காணப்படுகின்றனர்.

மன்றாடியார்

மன்றத்திலமர்ந்து வழக்காடி நீதி வழங்குபவர்கள் மன்றாடி யார் எனப்பட்டனர். ஆயர்களில் இத்தகையோர் இப்பட்டத்திற் குரியவர்களாக விளங்குகின்றனர். இவர்கள் கோயம்புத்தூரில் காணப்படுகின்றனர்.

முக்குந்தர்

திருமாலின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றான முக்குந்தர் என்னும் சொல், செங்கற்பட்டு – கொத்தக்கண்டிகை, கொல்லக் குப்பம், பொதட்டூர்ப்பேட்டை, ராசமுத்திரம், வெங்கடாபுரம் முதலிய ஊர்களில் வாழும் ஆயர்களிடையே காணப்படுகிறது.

ரெட்டி

வேலூர் வட்டத்திலுள்ள சில ஊர்களில் ரெட்டி என்னும் பட்டப் பெயருடைய ஆயர்கள் வாழ்கிறார்கள்.

வாத்தியார்

தென்காசி, சொக்கம்பட்டி, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் வாழும் ஆயர்களில் சிலர் வாத்தியார் என்னும் பட்டப்பெயரை உடையவர்களாக உள்ளனர். இவர்கள் நாமம் தரிப்பவர்களாகவும் பிராமணர்களைப் போன்று ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பவர்களாகவும் உள்ளனர்.

யாதவ் / யாதவா / யாதவர்

ஆயர்கள், தற்போது யாதவ், யாதவா, யாதவர் என்ற பட்டத் தைத் தரித்துக் கொள்கின்றனர். சாதி சான்றிதழும் இப்பெயரி லேயே வழங்கப்படுகிறது. கோன், கோனார், கீதாரி, யாதவர் என்ற பட்டங்கள் ஆயர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. மற்ற பட்டப்பெயர்கள் குறிப்பிட்ட வேறு சில சாதியினருக்கும் வழங்கப்படுகின்றன.

வட இந்தியாவில் இத்தகைய பெயர்களையுடைய ஆயர் குடியினர் பரவலாக வாழ்ந்துவருகின்றனர். தங்களைக் கண்ணனது குடியினர் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களைப் பற்றிய செய்திகள் புராணக்காலந்தொட்டு வடஇந்திய மொழி இலக்கியங்களில் பதியப்பெற்றுள்ளன.

தமிழக ஆயர்கள் ‘ஆயர், இடையர், கோவலர்’ என்றே தமிழிலக்கியங்களில் பதிவாகி யுள்ளனர். 18-19ஆம் நூற்றாண்டில் தோன்றிய சில பள்ளு இலக்கியங்களில் தமிழக ஆயர்கள் முதன்முதலாக ‘யாதவர் என்ற பெயரில் பதிவாகியுள்ளனர். பக்தி இலக்கியங்களில் ஆயர்கள், ‘யாதவர்’ எனக் குறிக்கப்பெற்றிருப்பினும் அது வட இந்திய ஆயர்களையே குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.

ஆயர் இனவரைவியல் – சா.கருணாகரன் (ஆசிரியர்)
விலை : 395/-
Buy link : https://heritager.in/product/ayar-inavaraiviyal/