Team Heritager ஜூலை 8, 2026 0

மதுரா விஜயத்திற்கு முன்பே தமிழர்கள் படைத்த மாபெரும் “விஜயம்” என்ற பெயர் கொண்ட நூல்கள்

விஜயநகரப் பேரரசின் இளவரசன் குமார கம்பண்ணனின் மதுரைப் படையெடுப்பை மையமாகக் கொண்டு, அதன் வரலாற்றை அவனது மனைவி கங்காதேவி சமஸ்கிருதத்தில் எழுதிய வரலாற்றுச் காவியம் “மதுரா விஜயம்” (கம்பராய சரிதம்).

விஜயம் – என்ற வடமொழிக்கு “வெற்றிப்பெற்ற படையெடுப்பு” என்று பொருள். திக்விஜயம் என்ற சொல்லுக்கு ஒரு நாட்டின் நான்கு புறங்களிலும் உள்ள நாடுகளை கவருவது ஆகும்.

இது அனைவரும் அறிந்ததே. ஆனால், அரசர்களின் வெற்றிகளையும் வரலாற்றையும் “விஜயம்” நூல்களாக வடிக்கும் இந்த வழக்கம் திடீரெனத் தோன்றியதல்ல; இது பண்டைத் தமிழர்களின், குறிப்பாகச் சோழர்களின் வரலாற்றுப் பதிவு மரபின் தொடர்ச்சியே என்பது வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்கும் உண்மையாகும்.

​சோழர் கால வரலாற்று நூல்களும் கல்வெட்டுச் சான்றுகளும்

​தமிழில் பழங்காலம் முதலே அரசர்களின் போர் வெற்றிகளையும், வாழ்க்கைச் சரிதத்தையும் மையமாகக் கொண்டு வரலாற்று நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக பல நூல்கள் கால வெள்ளத்தில் அழிந்துவிட்டாலும், கல்வெட்டுகள் அவற்றின் இருப்பை இன்றும் நமக்குச் பறைசாற்றுகின்றன.

​ஸ்ரீ ராஜராஜ விஜயம்

மாமன்னன் ராஜராஜ சோழனின் வரலாற்றைக் கூறும் இந்நூல் பற்றித் தஞ்சை மாவட்டம் திருப்பூந்துருத்தியில் உள்ள கல்வெட்டு (1914 – எண் 120) குறிப்பிடுகிறது. இக்கோயிலில் இந்நூலை வாசிப்பதற்காகவே சிறப்பு நிவந்தம் (மானியக் கொடை) அளிக்கப்பட்டிருந்ததை இதன் மூலம் அறியலாம்.

இந்நூல் பற்றி கல்வெட்டு சான்றுகள் கிடைத்தால் அது சோழ வரலாற்றில் மிகப்பெரிய பொக்கிஷமாக விளங்கும்.

​ராஜராஜேசுவர நாடகம்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் கட்டப்பட்ட வரலாற்றை நாடக வடிவில் விளக்கும் நூல் இது. தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டின் (தென்னிந்திய சாசனங்கள் 11.67) படி, ஒவ்வொரு வைகாசிப் பெருவிழாவின் போதும் இந்நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. இதற்காக நடிகர்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

​குலோத்துங்க சோழ சரிதை

முதலாம் குலோத்துங்க சோழனின் வரலாற்றைக் கூறும் இந்நூல் இயற்றப்பட்டதை, புதுச்சேரிக்கு அருகில் உள்ள திருபுவனை கல்வெட்டு மெய்ப்பிக்கிறது.

​வீரனணுக்க விஜயம்

திருவாரூர் கோயிலில் தேவரடியார் ஒருத்தியின் நடனக் கலையில் லயித்திருந்த சோழ மன்னன் ஒருவன், தன் சிற்றரசனான ‘வீர சோழ அணுக்கன்’ என்பவனைப் புகழ்ந்து இயற்றிய அல்லது அவனோடு தொடர்புடைய வரலாற்று நூலாக இது அறியப்படுகிறது.

​நமக்குக் கிடைத்துள்ள சோழர் கால வரலாற்று இலக்கியங்கள்

​மேற்கண்ட நூல்கள் கல்வெட்டுகளில் மட்டுமே வாழும் நிலையில், முழுமையாகக் கிடைத்துச் சோழர்களின் வரலாற்றைச் சொல்லும் சில முக்கிய நூல்களும் உண்டு:

​கலிங்கத்துப்பரணி

முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றியைப் (ஒடிசா) பாடும் ஜெயங்கொண்டாரின் இந்நூல், சோழர் காலப் போரியல் வரலாற்றைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது.

​மூவர் உலா

விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன் ஆகிய மூன்று சோழ மன்னர்களின் வரலாற்றையும், அவர்தம் பரம்பரையையும் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இதில் பதிவு செய்துள்ளார்.

​இந்தியாவில் வரலாற்று நூல்கள் எழுதும் மரபு பல்வேறு மொழிகளிலும் இருந்துள்ளது. அவற்றுள் சில முக்கிய நூல்கள்

​மஞ்சுஸ்ரீ மூலகல்பம்

இது ஒரு பழமையான புத்தமத நூலாகும். சுமார் கி.மு. 700 முதல் கி.பி. 770 வரையிலான சுமார் 1500 ஆண்டு கால இந்திய வரலாற்றின் பல கூறுகளை இதில் காணமுடிகிறது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்நூலுக்குத் திபெத்திய மொழியிலும் மொழிபெயர்ப்பு உள்ளது. காசிப் பிரசாத் ஜெயஸ்வால் (K.P. Jayaswal) என்ற வரலாற்று அறிஞர் இவ்விரண்டையும் ஒப்பிட்டு, பல ஆய்வுக் குறிப்புகளுடன் “இந்தியப் பேரரசின் வரலாறு” (An Imperial History of India) என்ற பெயரில் ஆங்கிலத்தில் ஒரு சிறந்த நூலாக வெளியிட்டார்.

​ராஜதரங்கிணி (Rajatarangini)

கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கல்ஹணர் என்பவரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்நூல், காஷ்மீர நாட்டின் தொடர்ச்சியான வரலாற்றைக் கூறுகிறது. இந்திய வரலாற்றியல் முறைப்படி எழுதப்பட்ட முதல் முறையான வரலாற்று நூல் என்ற பெருமை இதற்கே உண்டு.

​மேலும் சில இந்திய வரலாற்று நூல்கள்

​ஹர்ஷ சரிதம்

7-ஆம் நூற்றாண்டில் வடஇந்தியாவை ஆண்ட ஹர்ஷவர்தனரின் வரலாற்றை அவரது அவைப்புலவர் பாணபட்டர் எழுதியுள்ளார்.

​விக்கிரமாங்கதேவ சரிதம்

கல்யாணி சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தனின் வரலாற்றைப் பில்ஹணர் என்ற கவிஞர் பதிவு செய்துள்ளார்.

​இந்தச் சான்றுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, ‘மதுரா விஜயம்’ போன்ற நூல்கள், காலகாலமாக இந்தியாவிலும் தமிழகத்திலும் வேரூன்றியிருந்த வரலாற்றுப் பதிவு மரபின் ஒரு முதிர்ந்த வெளிப்பாடே என்பது தெளிவாகிறது.

‘பரணி’ என்பது தமிழ் இலக்கியத்தில் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று வென்ற வீரனைப் பாடும் சிற்றிலக்கிய வகை. விஜயம் பாடுவதை தமிழில் பரணி பாடுதல் என்கின்றனர்.

Category: