Menu

சங்ககாலக் கலைகள்

சங்ககாலக் கலைகள்

நாளாந்த வாழ்க்கையில் கலையானது மிகமுக்கியமான இடத்தைப் பெற்றிருந்தாலும் அதற்கப்பாலுமுள்ள தனித்துவமான வாழ்வியல் கருத்தாக்கங்களிலும் கலை செயற்படவல்லது. கலைசார்ந்த கலைஞர்கள் சமூகவயப்பட்டவர்கள், அரசியல் வகிபாகத்தை வடிவமைப்பவர்கள் (பிரந்தா பெக் 1982). கலைக்குரிய விதிகள், கலையின் அமைப்பு, அதன் வடிவங்கள் முதலானவை ஒவ்வொரு கலையையும் அர்த்தமுடையதாக்குகிறது என்பது அமைப்பிய அணுகுமுறை (structural approach).

கலைகள் வரலாற்று ரீதியான நினைவூட்டல்களைத் தருகின்றன. மனிதகுலத்தின் அனுபவங்கள் அனைத்தும் தனிமனிதர்களின் நினைவில் இருப்பதில்லை. அவை மொழியால் பேணப்படுகிறது. கலையும் ஒரு மொழிதான். ஆகவே கலை சமூக ஞாபகமாக வடிவம் பெறுகிறது. கலையையும், கலை வகைகளையும் கட்டவிழ்த்துப் பார்ப்பதன் மூலம் சமூக உருவாக்கப் போக்குகளை அறியமுடியும்.

சங்க காலத்தில் பெரிதும் அறியப்பெற்ற வழக்காறுகள், கலைகள் வருமாறு:

1. வரி. இசையுடன் பாடியும் ஆடியும் நிகழ்த்தும் கூத்து.

2. அம்மானை வரி. இளம்பெண்கள் விளையாடும் போது பாடும் பாடல் வகை.

3. கந்துக வரி பெண்கள் பந்தாட்டத்தின் போது பாடும் பாடல்.

4. ஊசல் வரி ஊஞ்சல் விளையாட்டுப் பாடல்

5. வள்ளைப் பாட்டு. பெண்கள் தானியம் குத்தும் போது பாடும் உலக்கைப் பாட்டு (மலைபடு. 342; குறுந். 89).

6. வாழ்த்துப் பாட்டு. மலையின மக்கள் மற்றவரை வாழ்த்தும் போது பாடுவது.

7.குரவை. இதில் இரண்டு வகையுண்டு, ஒன்று, மகளிரின் நீர்விளையாட்டுகள் (அலவனாட்டு, வண்டலயர்தல்). மற்றொன்று, தெய்வ வழிபாட்டில் மகளிர் எழுவர் கூடிசடங்குக் களத்தில் கைகளைப் பற்றித் தழுவி ஆடுதல் (கலித். 103; திருமுருகு.197).

8. வள்ளிக் கூத்து. முருகன் கண்டுகளிக்கும்படி வள்ளியின் கோலம் தாங்கி பெண் ஆடும் கூத்து (தொல்.பொருள்.60).

9. கழாய்க் கூத்து, மூங்கில் கழையை நட்டுக் காலால் பிணித்துக் கொண்டு சாய்ந்தும், சுழன்றும், உறழ்ந்தும் ஆடுவது (மலை 6.236-37).

10. கயிற்றுக் கூத்து. இரண்டு கழைகளைத் தூரமாக நட்டு இடையே முழவின் தாளத்திற்கேற்ப கயிறுகட்டி, அதன்மேல் நின்றும் ஊர்ந்தும் ஆடுவது (குறிஞ்சிப். 192-94).

11. கரணக் கூத்து, காலில் சலங்கைக் கட்டி, சாட்டையால் தம்மைத் தாமே அடித்துக் கொண்டு வித்தைகள் காட்டுவது (அகம். 368).

12. தோல்பாவைக் கூத்து. தோலால் பாவை செய்து ஆட்டுவிக்கும் கலை (நாலடி.26).

13. அல்லிப்பாவைக் கூத்து. பாவை போல் புனைந்து பொம்மையால் உடலசைத்து ஆடுவது (புறம். 33).

14. வசைக் கூத்து (விதூரிக் கூத்து). அங்கதப் பொருளில் விமர்சித்து வசைபாடி கோமாளியைப் போல் நகைச்சுவை தோன்ற ஆடும் கூத்து.

15. புகழ்க்கூத்து. அரசனின் புகழை ஏத்திப்பாடி ஆடுவது. (புறம். 146).

16. வரிக் கூத்து. இசைப்பாடலைப் பாடி ஆடும் கூத்து (குரவை வரிக்கூத்தின் ஓர் உறுப்பு என்பார் அடியார்க்கு நல்லார்).

17. வரிச்சாந்திக் கூத்து. தெய்வங்களைச் சாந்திப்படுத்தப்பாடியாடும் கூத்து (கும்மி, ஒயில் போன்ற ஆட்டங்கள் வரிச்சாந்து எனலாம்).

18. சாந்திக் கூத்து, தலைவர்க்கு மகிழ்ச்சி வேண்டி ஆடுதல் சாந்தி. ஒப்பனைகள் புனைந்து கையில் வாளேந்தி ஈசனுக்கும் காளிக்கும் சினங்குறைய ஆடுவது சாந்திக் கூத்து (சொக்கம், மெய்க்கூத்து, அவிநயக் கூத்து, நாடகம் ஆகியவை சாந்திக் கூத்தின் உள் வகைகள்).

19. விநோதக் கூத்து. குறிப்பிட்ட குறிக்கோள் ஏதுமின்றிப் பார்வை யாளரை வியக்க வைத்துப் பொழுதுபோக்கும் நோக்கில் ஆடுவது விநோதக் கூத்து (கழாய்க் கூத்து. குடக் கூத்து, அல்லிப் பாவைக் கூத்து, தோற்பாவைக் கூத்து, கரணக் கூத்து, நுண்ணியக் கூத்து (நோக்கு).

20. ஆரியக் கூத்து கயிறு கட்டி அதன் மேல் ஆடும் கூத்து. இதனை ஆரியர் ஆடினர் (அகம். 398, நற். 170)

21.பொய்தல். இராசா இராணியைப் போல் பொய்யாக வேடமணிந்து பேதைப் பருவத்து மகளிர் நடிக்கும் நாடகம் (நற்.166) பரத்தையரும் பொய்தல் ஆடுதல் பெருவழக்காகும் (அகம் . 26, 156, ஐங். 181, நற். 166).

22. வேத்தியல் கூத்து. அரசர்க்கு ஆடும் கூத்து.

23. பொதுவியல் கூத்து. எல்லார்க்கும் ஆடும் கூத்து.

24. அம்பா ஆடல் அம்பாவை (அன்னை கொற்றவை) கன்னியர் கூட்டாக வழிபட்டுப் பாடி ஆடுதல் அம்பா ஆடல். தைந் நீராடல் என்பதும் ஒரு வழக்கு. வையை மணல் மேட்டில் மகளிர் ஆயமொடு (கூட்டத்தோடு), ‘அமர்ந்தாடும் ஆடல்’ (கலி.27) என்றும் கூறுவதுண்டு.

25. ஓரையாடல் காவிக்கல்லால் அல்லது பூந்தாதுக்களால்; பாவைகள் செய்து ஆற்றங்கரையில் அமர்ந்து ஆடுவது ஓரை யாடல் (குறுந். 48).

26. தெற்றி ஆடல். கால்களைப் பின்னி ஆடும் ஒரு கூத்து வகை (புறம். 53).

27. பெருங்கருங் கூத்து. நகைச்சுவை ததும்ப ஆடும் கூத்து வகை (கலி. 65). தீயக் கூத்து என்றும் பொருள்படும் (ஷாஜகான் கனி 2009: 117).

28. துணங்கை தழூஉ. பரத்தையரைத் தலைவன் தழுவி ஆடும் கூத்து.குரவை எப்போது வேண்டுமானாலும் நிகழும். ஆனால் துணங்கையானது நாள் குறித்து நிகழ்த்தப்படும். ‘துணங்கை நாளும் வந்தன்று’ (குறுந். 264).

29. துணங்கை. போர்த்துணங்கை கொற்றவைக்கு (துணங்கையஞ் செல்வி) உரியது. போர்க்களத்தில் கொற்றியும், பேய்களுமாக வேடம் புனைந்து ஆடுவது (கலி.89; திருமுருகு. 49-56)

30. வெறியாட்டம். தலைவன் பிரிவால் வருந்திய தலைவியின் மெலிவு கண்ட தாய், தன் மகளை அணங்கு தாக்கியதோ எனக் கருதி வேலன் மூலம் நிகழ்த்தியதே வெறியாட்டம். வேலன் வெறியாடல் தெருச்சந்திகள் கூடும் மன்றங்களிலோ, அம்பலங்களிலோ ஆடப் பெற்றது (நற்.322; அகம்.22). வெறியாடும் மகளிரும் இருந்துள்ளனர் (பட்டினப். 154-55).

பண்பாடு உரையாடல்கள் | பக்தவத்சல பாரதி
₹160

இந்நூலினை எப்படி வாங்குவது?

1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம். இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.

எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?:

1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. எங்கள் சமூக வலைத்தள பக்கங்களை Subscribe செய்யுங்கள்
3. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
4. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.
5. பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களில் எங்கள் மூலம் உங்கள் நண்பர்களுக்கு நூல்களை பரிசாக அனுப்புங்கள்.

உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்