சோழர் மற்றும் சேரர் போர்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை

சோழநாட்டரசன் பெரும்பூண் சென்னி என்பவன், தன்னுடைய சேனாதிபதியாகிய பழையன் என்பவன் தலைமையில் பெருஞ்சேனையை அனுப்பி வடகொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டின் தலைநகரமான கட்டூரின்மேல் போர் செய்தான். இளஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சியின் கீழிருந்த கட்டூரைச் சோழன் சேனாதிபதி பழையன் எதிர்த்தான்.இளஞ்சேரல் இரும்பொறைக்குக் கீழடங்கியிருந்த சிற்றரசர்களாக நன்னன் (நன்னன் உதியன்). ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முதலானவர் பழையனை எதிரிட்டுப் போர் செய்தார்கள். பழையன் இவர்களையெல்லாம் எதிர்த்துத் தனியாக நின்று கடும்போர் செய்தான். ஆனால், பலருடைய எதிர்ப்புக்குத் தாங்காமல் போர்க்களத்தில் இறந்துபோனான்.

தன்னுடைய சேனைத் தலைவனான பழையன் கட்டூர்ப் போரில் மாண்டுபோனதையும் தன் சேனை தோற்றுப்போனதையும் அறிந்த சோழன் பெரும்பூண் சென்னி மிக்க சினங்கொண்டான். அவன் தன்னுடைய சேனையுடன் புறப்பட்டுக் கொங்கு நாட்டிலிருந்த இளஞ்சேரலிரும்பொறைக்கு உரித்தான கழுமலம் என்னும் ஊரின் மேல் சென்று போர் செய்தான். அவ்வூரின் தலைவனான கணயன், சோழனை எதிர்த்துப் போரிட்டான். சோழன் போரில் வெற்றிகொண்டு கழுமலத்தைக் கைப்பற்றினதோடு கணயனையும் சிறைப்பிடித்தான். இந்தப் போர்ச் செய்திகளையெல்லாம் குடவாயிற் கீரத்தனார் கூறுகிறார்.

சோழன் பெரும்பூண் சென்னியைச் சோழன் செங்கணான் என்று தவறாகக் கருதுகிறார் சேஷ ஐயர். இது தவறு.

இளஞ்சேரல் இரும்பொறையின் கீழ் கழுமலத்தில் சிற்றரசனாக இருந்த கணையனைக் கணைக்காலிரும்பொறை என்று டாக்டர் மா. இராசமாணிக்கனார் தவறாகக் கருதுகிறார்.”

கணையன் வேறு, கணைக்காலிரும்பொறை வேறு.

சோழன் பெரும்பூண் சென்னியும் சோழன் செங்கணானும் வெவ்வேறு காலத்திலிருந்தவர்கள். இளஞ்சேரலிரும்பொறையும் கணைக்காலிரும்பொறையும் வெவ்வேறு காலத்திலிருந்தவர்கள். இளஞ்சேரலிரும்பொறைக்குப் பின் ஒரு தலைமுறைக்குப் பிறகு இருந்தவன் கணைக்காலிரும்பொறை. கழுமலத்தில் இரண்டு போர்கள் நடந்திருக்கின்றன. முதற்போர், சோழன் பெரும்பூண் சென்னிக்கும் இளஞ்சேரல் இரும்பொறையின் கீழடங்கின கணையனுக்கும் நடந்தது. அதன் பிறகு இரண்டாவது போர் சோழன் செங்கணானுக்கும் கணைக்காலிரும்பொறைக்கும் நடந்தது.

சோழன் பெரும்பூண் சென்னி கொங்கு நாட்டின் மேல் படையெடுத்து வந்து போர் செய்து கழுமலத்தைக் கைப்பற்றியதையறிந்த இளஞ்சேரல் இரும்பொறை சினங்கொண்டு, அந்தச் சென்னியைப் பிடித்து வந்து தன் முன்னே நிறுத்தும்படித் தன்னுடைய சேனைத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் போய்ப் பெரும்பூண் சென்னியோடு பேரர் மெய்தார்கள். அந்தப் போர் பெரும்பூண் சென்னி கைப்பற்றியிருந்த கழுமலம் என்னும் ஊரில் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்தப் போரிலே சோழனுடைய படை வீரர்கள் தோற்றுத் தங்களுடைய (வேல்களை) ஈட்டிகளைப் போர்க் களத்திலே விட்டுவிட்டு ஓடினார்கள்.

அவர்கள் போர்க்களத்தில் போட்டுவிட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கை, செல்வக் கடுங்கோ வாழியாதன் இளஞ்சேரல் இரும்பொறையின் பாட்டன்) தன்னை ஏழாம் பத்தில் பாடின கபிலருக்குப் பரிசாகக் கொடுத்த ஊர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது. இதிலிருந்து சோழன் தோற்றுப்போன செய்தி தெரிகிறது. சோழன் பெரும்பூண் சென்னியுடன் போர் செய்து வென்ற பிறகு இளஞ்சேரல் இரும்பொறை இன்னொரு சோழனுடன் போர் செய்தான்.

கொங்கு நாட்டு வரலாறு- மயிலை சீனி வேங்கட சாமி
₹175
Buy Link: https://heritager.in/product/kongu-naatu-varalaaru/